cookie

Tuesday, June 11, 2019

இருதலைக் காதல்

ஆரஞ்சுமிட்டாய் காரணமாக ஏற்பட்ட பிணக்கு, சிலநாட்கள் "குருநாயர்" தங்கராஜுடன் பேசாமல் இருந்தேன். குருநாயர் கைகால் முளைத்த கருந்துளை ("பிளாக் ஹோல்"லாமா), சந்திப்பை தள்ளப்போட முடிந்ததே தவிர, முழுவதும் தவிர்க்க இயலவில்லை! தோல்வியை மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு, குருநாயரின் வீட்டுக்கு விரைந்தேன் அவரிடம் அறிவு அமுதம் பருக. 

திருமதி. காளியம்மாள், குருநாயரை இப்பூவுலகிற்கு ஈன்ற புண்ணியவதி. பெரும்பாலும் தலைவாரி நுனிக்கொண்டை தரித்திருப்பர். நெற்றியில் பழைய ஒரு ரூபாய் அளவிலான பொட்டு எப்போதும் சிகப்பாக ஒளிரும். அந்த குறியீட்டின் உள்ளார்ந்த பொருள் அன்றுதான் எனக்கு புரிந்தது. சற்று தூரத்தில் வரும்போதே "மொத்தடீர் மொத்தடீர்" என்று அடுக்குத் தொரடராக ஒலி என்  செவிப்பறையை அறைந்தது. நான் வேகமாக விரைந்தேன் வாசலுக்கு, அங்கு அன்பில் உருவான திருமதி. காளியம்மாள், பத்திரகாளியாக மாறி சூரனை வாதம் செய்துகொண்டிருந்தார். சூரன் காளிதேவியின் காலடியில் கண்ணீரில் நீந்திக் கொண்டிருந்தார். சற்று உற்று நோக்கியபோதுதான் தெரிந்தது அன்று "சூரா"அவதாரம் எடுத்திருந்தது குருநாயரே!

இந்த ரணகளத்தில் திரு.காளியம்மாள் எங்கேயென்று தேடினேன், அவரோ அன்று "பல்லி" அவதாரம் எடுத்திருந்தார். சம்ஹாரம் கிட்டத்தட்ட முடிந்தநிலையில், காளிதேவி சாந்தியடைந்து, தன்சிகைகோதி  மீண்டும் நுனிக்கொண்டைக்கு வந்தார். வாசலில் நின்ற என்னை இனம் கண்டு கொண்டு, "உள்ளவாப்பா" என்றார் "புன்" நகைத்த முகத்துடன். நான் சப்த நாடியும் அடங்கி அங்கேயே நின்றுவிட்டேன். இரண்டு அணுகுண்டுகளை அங்கத்தில் வாங்கி, முன்பைவிட வேகமாக முன்னேறிய ஜப்பானின் முன்னோடியே குருநாயர்தான். தன் திருமேனியில் ஒட்டியிருந்த தூசிதட்டி பீனிக்ஸ் போல படிகளில் இறங்கிவந்தார் "புண்"நகையோடு.

"எதுக்குடா உங்கம்மா உன்ன அடிச்சாங்க?" என்ற கேட்ட எனக்கு, "அடிவாங்கி ரொம்ப நாளாச்சா, அதான் அடி மறந்திரக்கூடாதுன்னு நான்தான் அடிக்க சொன்னேன்" என்றார் சிரிப்போடு. "உன் அனுமதியில்லாமல் உன்னை யாரும் அவமதிக்க முடியாது" என்ற சொன்ன புத்தரையே விஞ்சிய சித்தர் என் குருநாயார்!  அவரின் அனுமதியில்லாமல் அம்மாகூட அவரை அடிக்கமுடியாது.  (சிலநாட்கள் கழித்து குருநாயரே தன்னுடைய ராபின்ஹூட் நாடகம் வீட்டில் அரங்கேறியதின் விளைவுதான் அன்று வாங்கிய அடியின் காரணம் என்று தன்னிலை விளக்கமளித்தார்)         

இன்னும் சற்றுநேரம் அங்கே இருந்தால் காளிதேவியின் ருத்ரதாண்டவம் எங்கே மீண்டும் தொடர்ந்துவிடுமோ என்றஞ்சி அங்கிருந்து எங்களை அப்புறப்படுத்திக் கொண்டோம். வீட்டின் முடுக்குசந்தை தாண்டி வெளியேவந்தோம். குருநாயார் எங்கள் தெருவின் சொறிநாய் "அந்தோணியை" தேடினார், என்னது நாய் பேறு "அந்தோனியா"ன்னு தான யோசிக்கிறீங்க? ஆமா, எல்லா தெரு நாய்களைப் போலவும் இதன் பெயரும் "மணி"யாகத்தான் இருந்தது, ஆனால் எங்களுக்கு மணியைவிட அந்தோணி மீதுதான் ரொம்பவும் கோவம். வகுப்பின் சட்டாம்பிள்ளை (மணி கடந்தவருடம் சட்டாம்பிள்ளை என்பதை சொல்லத் தேவையில்லை) அவன்தான். வகுப்பில் "அமைதி" நேரத்தில் எங்கள் பெயரை கரும்பலகையில் நாங்கள் பேசுவதற்கு முன்பாகவே எழுத்துவிடுவான். "நாங்கதான் பேசவேயில்லையே" என்றால், "நீங்க கண்டிப்பா பேசுவீங்க அதான் முதல்லயே எழுதிட்டேன் என்பான்" என்று எதிர்காலம் கணிப்பான். சரிவுடு அதுதான் பேருதான் எழுதியாச்சேன்னு பேச ஆரம்பிச்சா உடனே "மிக, மிக, மிக அதிகம்" என்று சேர்த்துவிடுவான், வகுப்பு முடியும் முன்பாக முத்தாய்ப்பாக "அடங்கவில்லை" என்பதையும் கோர்த்துவிடுவான்.

பேசியதற்கு - ஒன்று
ஒவ்வொரு "மிக"வுக்கும்  - இரண்டு 
"அடங்கவில்லை"க்கு  - மூன்று என்று எங்களின் வகுப்பு ஆசிரியர் புள்ளிவைத்து கோலம் போடுவார்.

காளிதேவியிடம் வாங்கிய வரங்களை கைமாற்ற அன்று அந்தோணி அகப்படவில்லை. ஆனால் அந்தோணியின் முகத்தைப்போலவே சப்பையா, உருண்டையா, சதுரமா ஒரு வண்டி அங்கு வந்து நின்றது. வண்டியில் இருந்து ஓட்டுநர் தவிர்த்து ஒரு குடும்பம் இறங்கியது. வரிசையாக பெட்டிகளை இறக்கியது. குருநாயருக்கு என்ன தோன்றியது என்று தெரியவில்லை, நாமளும் போயி அவங்களுக்கு உதவிசெய்யலாமா என்று கேட்டார்? என் பதிலுக்கு காத்திராமல், குடும்பத்தலைவரிடம் போய் "அண்ணாச்சி, நாங்களும் பெட்டியை எடுத்து வைக்கிறோம் என்றார்". குருநாயருக்கு தன்னைவிட வயது முதிர்ந்த அனைத்து ஆண்களும் "அண்ணண்"தான் அனைத்து பெண்களுக்கு "அக்கா"தான். முதலில் அண்ணனின் மனைவி "அக்கா" வந்தார், பின்பு அண்ணனின் மக்கள் "அக்கா" வந்தார். இரண்டு அக்காவுக்குள் குழப்பம் வந்து விடாமல் இருக்க, பின்பு அவர்களின் பெயர்களை "அக்காவுக்கு முன்பு சேர்த்துக்கொண்டோம். மனைவி அக்கா "மீனாட்சி அக்கா" ஆனார். மகள் அக்கா "கவிதா அக்கா" ஆனார். ஒரே ஒரு அண்ணன்தான் என்பதால் அவரின் பெயர் தேவைப்படவில்லை.

எடுத்து வைத்துக்கொண்டிருந்த பெட்டிகளின் இடையில் ஒரு தகரடப்பாவும் இருந்தது. அது அண்ணனுக்கு தெரியாமல் மீனாட்சியக்கா சேர்த்துவைத்த சிறுவாடு. அதை பொறுப்பாக கொண்டுபோய் மீனாட்சியக்காவிடம் கொடுத்துவிட்டார் குருநாயார். அண்ணன் அங்கிருந்து  நகர்ந்த சமயத்தில், தான் டப்பாவில் வைத்திருந்த பணம் பத்திரமாக இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு  எங்களைப் பார்த்து நிம்மதியாக சிரித்தார் மீனாட்சியக்கா. 

குருநாயார் பல தவறுகளை செய்திருக்கலாம், ஆனால் அவர் ஒரு தவறான குருநாயார் அல்ல என்பதை நிரூபித்த பல தருணங்களில் இதுவும் ஒன்று.

அதன் பின்பு பல மாலை வேளைகளில் கவிதா அக்கவுடன்தான் இருப்போம். சாப்பிட மட்டுமே வீட்டுக்கு போவோம். கவிதா அக்கா பன்னிரண்டாம் வகுப்புவரை படித்துள்ளார், மேலும் படிக்க தன் தந்தையின் வருமானத்தில் இடமில்லாததால் வீட்டில் இருந்து டியூஷன் எடுக்க ஆரம்பித்தார். சில நாட்களில் அக்காவிற்கு வரன் தேட ஆரம்பித்தனர். பெண்பார்க்க வரும் அனைத்து நாட்களிலும் தவறாமல் நாங்கள் அங்கே இருப்போம் பலகாரங்களை பதம்பார்க்க. சில, பல அண்ணன்கள் வந்தார்கள் யாரையும் எங்களுக்கு பிடிக்கவில்லை.

ஒரு பொன் மாலைப்பொழுதில், மீண்டும் ஒரு பெண்பார்க்கும் படலத்தில், மீனாட்சியக்கா எங்களுக்கு "கவிதாக்கா கல்யாணமாயிட்டா உங்களவிட்டுட்டு போயிடுவா" என்று காரவிருந்து கொடுத்தார். அதைக்கேட்ட  எங்கள் இருவருக்கும் அழுகைவந்தது. ஆண்பிள்ளைகள் அழுவதில்லை ?!(அடிவாங்கும்போது தவிர்த்து) என்பதால், கண்ணீருக்கு கைகளால் கரைகட்டினோம். இருந்தாலும் கடைசிவரை இருந்து மிக்ஸர், பூந்தி சாப்பிட்டுவிட்டுதான் வீட்டுக்கு வந்தோம்.

அதன்பிறகு இரண்டு நாட்கள் நாங்கள் இருவரும் கவிதாக்கா வீட்டுக்கு போகவில்லை, ஆழ்ந்த சிந்தனையிலேயே இருந்தோம். இறுதியாக குருநாயாரின் மகாசிந்தனையில் உதித்த யோசனையை கூறினார்.   

ஆமாம், அந்த யோசனை என்னவென்று நீங்கள் யூகித்தது சரிதான்.

நேராக கவிதாக்காவிடம் போய், "எங்க ரெண்டுபேர்ல ஒருத்தன கட்டிக்கோங்க" என்றோம். அதைக்கேட்டவுடன் கண்ணில் நீர்வரும் வரை சிரித்தார் அக்கா. பொறுமையிழந்த குருநாயார், "போனவாரம் உங்கள பொண்ணுபாக்க வந்த ஆளவிட நாங்க நல்லாத்தானே இருக்கோம்" என்று அக்காவை மிரட்டினார். "இப்போ ஏண்டா திடீர்னு இப்படி வந்து கேக்குறீங்க" என்ற அக்காவிடம். எங்களின் காரணத்தை கூறியபோது, கண்ணீருடன் அமைதியானார். சோகம் அக்காவுக்கு எப்போதுமே பிடிக்காது என்பதால் உடனே பேச்சை மாற்றிவிட்டார். "உங்க ரெண்டு பேர்ல யாரு முதல்ல நல்ல வேலைக்கு போயி, பெரிய ஆள ஆகுறீங்களோ அவங்கள நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று முற்றுப்புள்ளி வைத்தார். நாங்களும் நம்பிக்கையோடு வீட்டுக்கு வந்தோம்.

"பெரிய ஆள ஆக ஒன்னும் செய்யவேண்டாம், சாப்பிட்டு, சாப்பிட்டு தூங்கினா போதும் ஆனா நல்ல வேலைக்கு போக நல்ல படிக்கணுமே?" என்பதை நினைக்கும் போதே எனக்கு துக்கமாக இருந்தது. அப்படியே துக்கத்துடன் நடந்து கொண்டிருக்க, ராஜமாணிக்கம் மாமா (அம்மாவின் தம்பி)  ஒரு காகிதத்தை என்னிடம் தந்தார், அது நான்காக மடித்திருந்தது. அதை பிரிக்க முயன்ற போது, மாமா என்னை தடுத்து, "இதை கவிதாக்காவிடம் கொடுத்துவிடு" என்றார். கணக்குப்பாடம்தான் எனக்கு புரியா நாளாகும், இது உடனே புரிந்து விட்டது. ஏற்கனவே போட்டிக்கு குருநாயார் இருக்கிறார், இதில் மாமா வேற, கடுப்பான நான் கண்டபடி மாமாவை திட்டினேன் (எனக்கும் மாமாவுக்கும் 10 வயதுதான் வித்தியாசம்). இந்த கடிதத்தை பற்றி  தாத்தாவிடமும், அம்மாவிடமும் சொல்லிவிடுவேன் என்று மிரட்டினேன். கொடுத்த கடிதத்தை வாங்கிக்கொண்டு மாமா ஓடிவிட்டார்.

அதன் பிறகு சிலநாட்கள் கவிதாக்கா வீட்டுக்கு நாங்கள் இருவரும் போகவில்லை. பின்பு ஒருநாள் நான் போனேன் வீடு பூட்டிக்கிடந்தது. என்ன வென்று அண்டை வீட்டில் விசாரிக்க, கவிதாக்கா வீட்டைக்காலி செய்துவிட்டு சென்றுவிட்டதாக சொன்னார்கள். அழுதுகொண்டே வீட்டுக்கு வந்துவிட்டேன். சில நாட்களில் கவிதாக்கா ஏன் வீட்டை காலிசெய்தார்கள் என்ற செய்தி என்னை யெட்டியது.

நான் தரமறுத்த மாமாவின் கடிதம், வேறுவழியில் கவிதாக்காவை அடைந்துள்ளது. கடிதம் வந்த செய்தி, அக்காவீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்து பெரிய சச்சரவாகி வீட்டை காலிசெய்துள்ளனர். எப்படி அந்தக் கடிதம் மாமாவிடம் இருந்து அக்காவிடம் சென்றது என்று அறியமுற்பட்டபோது, அதை கொண்டுசேர்த்தது சாட்சாத் என் குருநாயரேதான்.

ஆத்திரமும் கோபமும் அடைந்த நான். குருநாயரிடம் இதுபற்றி விசாரித்தபோது. குருநாயார் அமைதியாக "நமக்கு தேவை கவிதாக்கா நம்மைவிட்டு போக கூடாது அவ்வளவுதான். நீயும் நானும் பெரியாளாக ரொம்ப வருசம் ஆகும். அதான் உங்க மாமாவுக்கு உதவி செஞ்சேன்" என்றார். என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை.

எப்படி யோசித்தாலும் எனக்கு ஆத்திரம் அடங்கவில்லை. மாமாவை ஒன்றும் செய்யமுடியாது. அதானால் அந்தோணியின் பெயரை "ராஜமாணிக்கம்" என்று மாற்றிவிட்டு, அதன் மீது கல்லைவிட்டு வீசினேன். 

Sunday, April 15, 2018

அவள் பெயர் ரெங்கநாயகி

ஏன் வரலாற்றின் தீராத பக்கங்களில் காலம் ஒரு சில நாயகிகளின் பெயர்களை நிரப்பாமலேயே விட்டுவிடுகிறது?

அவள் பெயர் ரெங்கநாயகி

பாப்பா என்றே அனைவராலும் அழைக்கப்பட்டதால் பல ஆண்டுகள் அவளின் இயற்பெயர்  "ரெங்கநாயகி" என்பதே எனக்கு தெரியாது. நம் இதயத்துக்கு அருகாமையில் உள்ளவர்கள் நம்மை "ஒருமையில்" அழைத்தால் கூட ஏனோ நாம் அதை ஆராய்வதில்லை, திருத்தவும் முயல்வதில்லை. "பாப்பா" யெனும் ரெங்கநாயகியை நான் "ஏ கெழவி" என்றுதான் மரியாதையுடன் அழைப்பேன். எனக்கு பின்னால் வந்த சந்ததிகளும் அதையே செய்தனர். 

அனைத்து கேள்விகளுக்கும் பாப்பாவிடம் பதிலுண்டு. அனைத்து சிக்கல்களுக்கும் பாப்பாவிடம் தீர்வுண்டு. எதையும் புதிய கோணத்திலேயே அணுகுவார், எங்களுக்குத்தான் அது புரிய பலவருடங்கள் ஆனது. ஆவேசமாக நாம் கேட்கும் கேள்விகளுக்கு சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் "இந்த பால்காரன் இன்னும் வரல" என்பார் வெற்றிலையால் மெருகேற்றிய பற்களை காட்டிய சிரிப்போடு. அவர் வள்ளுவரைப் படித்ததில்லை ஆனால் வள்ளுவம் தெளிந்தவர். "இடுக்கண் வருங்கால் நகுக" என்ற குறளின் நாயகியே பாப்பாதான். பல தத்துவங்களை போகிற போக்கில் வெற்றிலையோடு சேர்த்து உமிழ்ந்துவிட்டுச் செல்வார். அவ்வாறு அவர் கூறிய ஒன்று" இருந்தா  (சோறு) பொங்குவேன் இலேன்னா சும்மாருப்பேன்". 

"உன்னுடைய அனுமதியில்லாமல் உன்னை யாரும் அவமதித்துவிட முடியாது!" என்பதை வாழ்ந்து காட்டியவள் பாப்பா. பலமணிநேர வாக்குவாதத்தை "போடா பொசுக்கி" என்ற ஒரே வார்த்தையில் முடித்துவிடுவாள். பேச்சுவார்த்தை வழக்கம்போல பாப்பாவிடம் தோல்வியில் முடிவதால், பல சமயம் நானும் என்னைத் தொடர்ந்து இளையவாரிசுகள் சிலவும் சட்டத்தை கையில் எடுப்போம். அகிம்சையை தீவிரமாககடைபிடிப்பவள் பாப்பா என்பதால் "சிரிப்பு" மட்டுமே பதிலாக வரும். கடைசியாக தோல்வியிலும், அவமானத்திலும் திரும்புவது நாங்கள்தான்.                  

இப்படி எங்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய பாப்பாவின் பின்புலம் தேடியபோது சற்று வியப்பான செய்திகள் கிடைத்தன.  திண்டுக்கல் மாவட்டத்தில் பெயர் சொன்னாலே தெரியக்கூடிய குடும்பத்தில் நான்கு சகோதரர்களுடன் பிறந்தவள் பாப்பா. இரண்டு பள்ளிகளின் நிறுவனர் பாப்பாவின் ஒரு அண்ணன். இரண்டு பள்ளிகளில் ஒன்று ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் பள்ளி. இருந்தும் பாப்பாவிற்கு ஏனோ பள்ளி மற்றும் படிப்பின் வாசனை ஒவ்வாமையை ஏற்படுத்தியது. அதனால் விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினாள் பாப்பா. மரம் ஏறுதல், நாயை குறிபார்த்து கல்லால் அடித்தல் போன்ற இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுக்கு தன்னை அற்பணித்துக்கொண்டாள். அந்நிய ஷக்திகளால் திட்டமிட்டே இந்த விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் சேர்க்கப்படாமல் போனது. இந்தியா ஒரு "தங்க"மங்கையை தவறவிட்டது.

சில வருடங்களில், (பொருளாதாரத்தில்) நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு பாப்பா மணமுடிக்கப்பட்டாள். பாப்பாவின் கணவர் ஒரு "புத்தகப்புழு". கடந்த முறை நான் அவரை சந்தித்தபோது "பிணைக்கப்பட்ட தொகுதிகள்" (blockchain) தொழில்நுட்பம் குறித்து கேட்டு என்னை கிறங்கடித்தார். இன்றுவரை எனக்கு புதிராக இருப்பது, எப்படி இவர்கள் இருவரால் இத்தனை வருடங்கள் சேர்ந்துவாழ முடிந்தது? பாப்பாவை தவிர வேறு யாராலும் இவருடன் வாழமுடியாது என்பதுதான் உண்மையோ? 


மண்டோதரி  

பாப்பாவின் வேலை பொழுதுபோக்கு எல்லாமே சமைப்பது, கணவரை கவனிப்பது, அவரின் வாய்மொழியை ரசிப்பது, எப்போதாவது திரைப்படம் பார்ப்பது. வேலை நிமித்தமாக கணவர் வெளியூர் செல்லவேண்டி வந்ததால், ஐந்து குழந்தைகளுடன் தனியாக பாப்பா வாசித்தார். கணவர் வரும்நாள் வீட்டில் அரிசிச்சோறு. வடித்த சோற்றை கணவருக்கும், கஞ்சியை அவரின் சட்டைக்கும் விருந்தாக்கிவிட்டு, (சமயங்களில்) வாசத்தால் மட்டும் வயிற்றை நிரப்பிக்கொள்வார் பாப்பா. மனைவியின் உள்ளமும் உணர்வும் கணவர்களுக்கு என்றுமே புரிவதில்லை, அது அவர்களின் அறியாமை. தாலிக்கொடிக்காக தொப்புள்கொடியைக்கூட தியாகம் செய்த மண்டோதரிகளாகத்தான் (சில) மனைவிகள் இருக்கிறார்கள். "மண்டோதரி" என்றாலும் "ரெங்கநாயகி" என்றாலும் உணர்வு ஒன்றுதான்.

திருமணத்தின் போது அணிந்துவந்த கிலோ தங்கத்தையும், மனைவியின் கழுத்து வலிக்குமேயென அடகுக்கடையில் சிறைவைத்தார் கணவர் தன் உடன்பிறப்புகளை கரையேற்ற. வீட்டில் ஐந்து பிள்ளைகள், வைக்க இடம் இல்லாதால் தேவைப்படுபவர்களுக்கு தானமாக பாப்பா கொண்டுவந்த சீர் பாத்திரங்களை விற்றுவிட்டார். இவை எதுவுமே பாப்பாவை சிறிதும் கலங்கடிக்கவில்லை. அவள் முகத்தில் நீங்காத புன்-நகை.


மொழி
    "இரண்டு மொழிகள் அறிந்தவர், இரண்டு மனிதர்களுக்குச் சமம்"         

பாப்பாவுக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்பது என்னக்கு சரியாக நினைவில்லை. ஆனால் பல்வேறு மொழிகளை அவள் தன்மொழியிலேயே தெளிவாகப் பேசும் தனித்திறமை கொண்டவள். அதை நான் உணர்ந்த சமயம் ஒன்றுண்டு. 

பாப்பாவின் புதல்வர்களில் ஒருவர் தொழிற்சங்கத்  தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைப்பற்றி பாப்பா என்னிடம் கூறியபோது, தன் அன்புமகன் "அன்னபோஸ்ட்" ல் தலைவரானார் என்றார். தமிழில் புதியவார்த்தை ஒன்றைத் தெரிந்துகொண்ட பேரானந்தத்தில் பள்ளிக்குச் சென்று அனைவரிடமும் கூறி உவகையடைந்தேன். அந்த சமயம் அங்குவந்த ஆங்கில ஆசிரியை தங்கரத்தினம் அவர்கள் என்முதுகில் "unopposed" ல் கபடி விளையாடி களைப்படைந்தார்.  பாப்பாவால் வஞ்சிக்கப்பட்ட வெறியுடன் வீட்டுக்கு வந்த நான், பாப்பாவின் கணவர் அங்கு இருக்கிறார் என்று தெரியாமல் உள்ளே சென்று குறைக்க ஆரம்பிக்க, "புத்தகப்புழு" என்னை புரட்டியெடுத்து வெளியே விரட்டினார். தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலைதெறிக்க ஓடினேன் என்னுடைய வீட்டிற்கு.

வேறொருமுறை சில கிந்தி வார்த்தைகளையும் பேச்சின் நடுவே கிண்டிவிட்டார். அப்போது நான் பிராத்மிக் சாராத அக்காவிடம் படித்துக்கொண்டிருந்தேன் அதனால் தப்பித்துக்கொண்டேன். 


குறியீடும் குறியாக்கமும்  

அப்போது எங்கள் ஊரில் ஐந்து திரையரங்கங்கள் உண்டு. அதில் ஒன்று "மூர்த்தி", எங்கள் வீட்டின் அருகிலேயே இருந்தது. அதில் திரையை விலக்கும் பெருநிகழ்வுக்கென்றே விநாயகர் பாடல் ஒன்று ஒலிபரப்பப்படும். அந்தப்பாடலை எப்போது எங்கு கேட்டாலும் "மூர்த்தி"யின் நினைவு மனதில் ஆக்கிரமித்து விடும். ஒவ்வொரு வெள்ளியன்றும் பழைய-புதிய படம் திரையிடப்படும். வாரம் முழுவதும் தீப்பெட்டி கட்டை அடுக்கியவர்கள் கந்தக நெடியை மறப்பது இங்குவந்துதான்.

வெள்ளிமாலை பள்ளிமுடிந்து வீட்டுக்கு வரும்போது பாப்பாவின் தரிசனம்பெற அவளின் வீட்டுக்குச் சென்றேன். பேசிக்கொண்டிருக்கும்போதே நாளை படம் பார்க்கச் செல்வதாக கூறினாள் பாப்பா. என்ன படம் என்று நான் கேட்க, "அதான் மூர்த்தியில ஓடுதுல்ல அதுதான்" என்றால், எனக்கு தெரியவில்லை. கடைசியாக திருவாய் மலர்ந்தாள் பாப்பா. அதுதான் "பூ சிந்துகிறது"...  நான் ஒன்றும் புரியாமல் என்னது "பூ சிந்துகிறதா"? இப்படியெல்லாமா பேரு வைக்கிறாங்க என்று எண்ணிக்கொண்டு அமர்ந்திருந்தேன் அவள் சுடும் பலகாரத்தை காலிசெய்வதற்காக. 

சிறிது நேரத்தில் பாபாவின் கணவர் வந்துவிட்டார். பாப்பா படத்திற்கு போவதற்கு கணவரிடம் அடிக்கல் நாட்டிக்கொண்டிருந்தார். ஒருவழியாக "புத்தகப்புழு"வும் சம்மதித்து விட்டார். என்ன படம் என்று அவர் கேட்க சற்றும் தயங்காமல் "பூ சிந்துகிறது" என்றாள் பாப்பா. எந்தவித சலனமுமில்லாமல் அவரும் சரி "நாளைக்கு சாயங்காலம் போகலாம்" என்று கூறிவிட்டு எழுந்துபோய் புத்தகத்தில் தன்னை புதைதுக்கொண்டார். படம் பெயர் என்னவென்று புரியாததால்  எனக்கு மூளையை குடைய ஆரம்பித்துவிட்டது. பலகாரத்தை முடிந்தவரை வயிற்றில் அப்பிஅடைத்துக் கொண்டு அவரிடம்போய் அது என்ன படமென்று கேட்கச்சென்றேன். 

"புத்தகப்புழு"விடம் ஒரு சிக்கல் என்னவென்றால்? நாம் ஒரு கேள்வி அவரிடம் கேட்டால்! நாம் ஏன் இவரிடம் கேள்வி கேட்டோம் என்று வருந்துமளவுக்கு பிதாமகர் பீஷமர் போல நம்மை கேள்விக்கணைகளின் மீதே படுக்கவைத்துவிடுவார். இருந்தாலும் ஆர்வம் தாங்காமல் எதற்கும் தயாராகவே அவரிடம் சென்றேன். "பூ சிந்துகிறது"னு படமா என்று கேட்க? நீஈஈண்ட விளக்கத்திற்குப் பிறகு படத்தின் பெயரைக்கூறினார்.

அது புதுமைப்பித்தன் அலட்சியமாக எழுதிய "சிற்றன்னை" யெனும் நெடுங்கதையை, காவியமாக மகேந்திரன் இயற்றிய "உதிரிப்பூக்கள்". 

சிலவருடங்கள் கழித்து மீண்டும் ஒரு படத்தின் பெயரை குறியாக்கம் செய்தாள் பாப்பா அது "சீவலப்பேரி தேவர்". இதற்கு எனக்கு யாருடைய உதவியும் தேவைப்படவில்லை.

--****--

கடந்த வாரத்தோடு பாப்பா சிந்திப்பதை நிறுத்தி ஒருவருடமாகிறது. புத்தகப்புழுவும், பாப்பாவின் பிரிவிற்குப்பின்பு யாரிடமும் கூறாமல் எங்கேயோ போய்விட்டார்.         

அதீத அறிவும் சமயங்களில் அலுப்படையச் செய்கிறது. குறைகள்தான் மனிதர்களை முழுமையாக்குகிறது. 
           

பாப்பாவின் பிரிவில் நானும் புத்தகப்புழுவும்...

Saturday, February 17, 2018

அறிமுக காட்சிகளும் ஒளவையாரும்

பேர்லண்ட் பள்ளியின் 2018 பொங்கல் விழாவிற்காக எழுதிய நாடகம்.

இந்த நாடகத்தின் காணொளி
https://www.youtube.com/watch?v=eTMnkiY82Cw

காட்சி: 1
இடம்: புலிகேசியின் அரண்மனை
கதாப்பாத்திரங்கள்: புலிகேசி மன்னர், மங்குனி அமைச்சர்

(புலிகேசி மன்னர் ஐபேடில் ஏதோ பார்த்துக் கொண்டுள்ளார், மங்குனி அமைச்சர் சோகமாக அமர்ந்திருக்கிறார்...)

புலிகேசி: அமைச்சர் மங்குனி, இதை கவனித்தீரா?

மங்குனி: எதை மன்னா... (அங்கும், இங்கும் தேடுகிறார்)

புலிகேசி: என்னுடைய facebook இல் 5000 நண்பர்கள் இருக்கிறார்கள், ஆனால்....

மங்குனி: ஆனால், என்ன மன்னா?

புலிகேசி: எந்த புகைப்படத்தை upload செய்தாலும் 100 லைக்குகளுக்கு மேல் வருவதில்லை... பொறாமை பிடித்தமனிதர்கள்.

அமைச்சரை நோக்கி

மங்குனி அமைச்சரே, என்னுடைய check-in ஐ நீர்கூட லைக் செய்யவில்லை... ம்ம்ம், இருக்கட்டும்  உம்மை appraisalலில் பார்த்துக் கொள்கிறேன்...

மங்குனி: மன்னிக்கவேண்டும் மகாபிரபு, நேற்று என் மனைவி போஸ்ட் செய்த "ரசம் சாதத்தை" லைக் செய்யவில்லை என்று இன்னும் ஒரு வாரம் ரசம் மட்டும்தான் என்று கூறிவிட்டார். அந்தக் கவலையில் உங்கள் checkin ஐ லைக் செய்யாமல் விட்டுவிட்டேன்...

புலிகேசி: என்ன ஆணவம், மனைவியின் போஸ்ட்டை லைக் செய்ய மறந்தீரா! உமக்கு இது தேவைதான்...

புலிகேசி: மங்குனி

மங்குனி: மன்னா...

புலிகேசி: இதைக் கேளும்...

(ஐபேடில் ஏதோ ஒரு புகைப்படத்தை பார்த்து வாசிக்கிறார் மன்னர்)

மக்களே, நீங்கள் இந்தப் புகைப்படத்தில் பார்ப்பது, சிங்கப்பூரோ, துபாய்யோ அல்ல... சக்கரவர்த்தி "அதியமான்"னின் நாடுதான்...

அமைச்சர் மன்னரின் அருகில் சென்று, அவரின் மடியில் அமர்ந்துகொண்டு புகைப்படத்தை பார்க்கிறார்... 

மன்னர் மெல்ல அமைச்சரை பார்த்து முறைக்க...  

மங்குனி: மன்னிக்க வேண்டும் மன்னா... (மெல்ல விலகி நிற்கிறார்)  படம் நன்றாக உள்ளது மன்னா...

நாமும் நம்முடைய பக்தாளை வைத்து போட்டோஷாப் செய்து நம் நாட்டின் புகைப்படத்தை பேஸ்புக்கில் உலவவிட்டால் என்ன?

புலிகேசி: வேண்டாம் மங்குனி, அதை செய்ய நம் நாட்டில் வேறு கும்பல் உள்ளது.          

என்னிடம் அதைவிட ஒரு அருமையான யோசனைஇருக்கிறது...

மங்குனி: கூறுங்கள் மன்னா...

புலிகேசி: நாம் அதியமான் மீது போர் தொடுப்போம்...

மங்குனி:  அதியமான் பற்றி எதுவும் தெரியாமல் வேண்டாம் இந்த விசப் பரிட்சை மகாபிரபு

புலிகேசி: முழுவதும் கேளும் மங்குனி...

மங்குனி: கூறுங்கள் மன்னா...

புலிகேசி: நாம் அதியமான் மீது போர் தொடுப்போம், நிச்சயமாக தோற்றுவிடுவோம்...

மங்குனி: அது உலகறிந்தது தானே மன்னா...

புலிகேசி: ம்ம்ம்... உண்மையாக இருந்தாலும் அதை இப்படி உறக்கவா சொல்வது...

மங்குனி: சற்று உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் மன்னா

புலிகேசி: இருக்கட்டும்... நாம் போரில் தோற்றுவிட்டால், நம் நாடு அதியமானின் நாட்டுடன் இணைந்து விடும். பின்பு அதியமானின் செலவிலேயே பெரிய பெரிய மால்கள், multiplex theaterகள், theme parkகள் கட்டிவிடுவார்...

மங்குனி: அருமை மன்னா... அருமை...

புலிகேசி: சில வருடங்களில், அதியமானின் கை கால்களில் விழுந்து தனி நாடு வாங்கிவிடலாம். பின்பு நான் மீண்டும் மன்னன்.

மங்குனி: அப்போது நான் மன்னா?

புலிகேசி: நீர் மங்குனி

மங்குனி: பலே மன்னா, பலே... இந்த மகாச்சிந்தனை தங்களுக்கு எப்படி தோன்றியது மன்னா?

புலிகேசி: forward message ல் படித்தது மங்குனி...

மங்குனி: மன்னா, ஒரு வேலை போரில் நம்மிடம் அதியமான் தோற்றுவிட்டால்...

புலிகேசி: (அதிர்ச்சியுடன்)  அப்படியெல்லாம் எதுவும் நடக்காது மங்குனி... (யோசனையுடன்) ஆமாம், இந்த கேள்வி உமக்கு எப்படி தோன்றியது...

மங்குனி: இதுவும் forward message ல் படித்ததுதான் மன்னா

புலிகேசி: அதுதானே பார்த்தேன், சரி சரி... உடனே போருக்கு SMS அனுப்புங்கள் மங்குனி. நம் வீரர்கள் தயாரா?

மங்குனி: கோழி பிரியாணியும், 1000 ரூபாயும் தருவதாக கூறி R.K நாட்டில் இருந்து சிலபேர் வந்து நம் ஐந்து படைகளையும் வாடகைக்கு கூட்டிச்சொன்றுள்ளனர் மன்னா...

புலிகேசி: சரியான வேலை செய்தீர்கள் மங்குனி, project இல்லாவிட்டால் பெஞ்சில் சும்மா உட்கார்ந்து விடுவார்கள். அவர்களை சும்மா இருக்க விடவே கூடாது. வீரர்கள் திரும்பி வந்தவுடன், அனைவரிடமும் 1000 ரூபாய்க்கு மறக்காமல் GST வாங்கிவிடுங்கள்... இல்லையென்றால் 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்து விடுவேன்... ஜாக்கிரதை...

மங்குனி: எத்தனை விழுக்காடு GST வசூலிப்பது மன்னா?

புலிகேசி: கடந்த முறை எவ்வளவு வசூலித்தோம்?

மங்குனி: 100% மன்னா

புலிகேசி: அப்போது இந்த முறை 200% வசூலித்து விடு...          

மங்குனி: ஆகட்டும் மன்னா...

                                                                                                                                                

காட்சி - 2
இடம்: போர்க்களம் ல்லும் வழி    
கதாப்பாத்திரங்கள்: புலிகேசி மன்னர், மங்குனி அமைச்சர், அவ்வையார் 5.0, தளபதி மற்றும்  வீரர்கள்


தளபதி: கும்தலக்கடி கும்மாவா

வீரர்கள்: புலிகேசின்னா சும்மாவா     

தளபதி: கும்தலக்கடி கும்மாவா

வீரர்கள்: புலிகேசின்னா சும்மாவா

தளபதி: பன மரத்துல வவ்வாலா  

வீரர்கள்: புலிகேசிக்கே சவாலா

தளபதி: பன மரத்துல வவ்வாலா  

வீரர்கள்: புலிகேசிக்கே சவாலா

தளபதி: போடுங்கம்மா ஒட்டு...

புலிகேசி: நிறுத்துங்கள் மங்குனி வீரர்களா... என்ன இது மன்னர் ஆட்சியில் ஓட்டா... இதை நிறுத்து முதல் இரண்டு துதியை மட்டும் மறுபடியும் பாடு...

(அதற்குள் அங்கு அவ்வை 5.0 வந்துவிட... புலிகேசி அனைவரையும் அமைதிப் படுத்துகிறார்...)

புலிகேசி: அம்மா... தாங்கள் யார்?

தளபதி: என்ன, அம்மா திரும்ப வந்துட்டாங்களா? 

(என்று ஓடிச்சென்று அவரின் காலில் விழுகிறார், அவரைத் தொடர்ந்து வீரர்களும் காலில் விழுகின்றனர்...)

தளபதி: அம்மா நீங்க இல்லேன்னு, UPS ம், USPS ம் அட்டகாசம் செய்றாங்கம்மா...

அவ்வை 5.0: மகனே நீ தவறாக புரிந்துகொண்டாய், நான் தமிழ்க்கு அம்மாவாகிய "அவ்வை"யின் latest  version 5.0                   

மங்குனி: "செயல் தளபதி" இனி இவ்வாறு நீ அதிகப்பிரசிங்கி வேலை செய்தாய், உன்னை மன்னரிடம் கூறி  செயல்படாதா தளபதியாக அறிவித்து விடுவேன்... ஜாக்கிரதை...

தளபதி: (மன்னரை நோக்கி)  மன்னிக்க வேண்டும் மகாபிரபு, RK நாட்டில் கொடுத்த training ல் சற்று தடுமாறிவிட்டேன்.

புலிகேசி: (அவ்வையை வணங்கி விட்டு)  புதிய அவ்வையே, தங்கள் இங்கு வந்ததன் நோக்கம் என்ன?

அவ்வை 5.0: புலிகேசி, அதியமானின் நாட்டின் மீது நீ படையெத்து வருவதாக forward message படித்தேன். அதனால் உன்னையும் உன் மக்களையும் காக்கவே நான் இங்கு வந்தேன்.

மங்குனி: புரியவில்லையே தாயே, அதற்கு ஏன் தாங்கள் இங்கு வரவேண்டும்...

அவ்வை 5.0: அதியமானின் வீரம் தெரியாமல் நீங்கள் சிறுபிள்ளைகள் போல் போருக்கு  வந்துள்ளீர்கள்...

இதைக்கேட்டு அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விழிக்க

அவ்வையார் 1.0 அதியமானின் வீரம் குறித்து ஏற்கனவே புறநானூற்றில் பாடல்  பாடியுள்ளார். அதை நீ அறிய மாட்டாயா?

புலிகேசி: இல்லை தாயே, என்னவென்று பாடியுள்ளார்?

(களம் புகல்... என்ற பாடலைப் பாடுகிறார் அவ்வையார்...)

தளபதி: இதன் பொருள் என்ன தாயே!

அவ்வை: போர்க்களம் புகும்முன் நன்றாக சிந்தியுங்கள் வீரர்களே. ஒரு நாளுக்கு 8 தேர் செய்யும் தச்சன். ஒரு மாதம் முழுவதும் வேலை செய்து தேரின் ஒரே ஒரு சக்கரம் மட்டும் செய்தால் அது எவ்வளவு வலிமையாகவும், நேர்த்தியாகவும் இருக்கும்?

(இதைக்கேட்டு அனைவரும் ஆமாம் என்பது போல் தலையை அசைக்கின்றனர்)

அப்படிப்பட்ட வீரன்தான் அதியமான்... களம் புகுந்த எவரும் மீளமுடியாது. அதனால் உயிர் மேல் ஆசையுள்ள அனைவரும் ஓடி விடுங்கள்...

(புலிகேசி தீவிர யோசனையில் ஆழ்ந்துவிட)

மங்குனி: மன்னர் யோசிக்க ஆரம்பித்து விட்டார், நீங்கள் மீண்டும் ஒருமுறை அந்தப்பாடலைப் பாடுங்கள் தாயே...

அவ்வை மீண்டும் பாட, உயிர்ப யத்தில் அனைவரும் ஓடுகின்றனர்...



இதில் வரும் அவ்வையாரின் பாடல் பாடியவர் எனது நண்பரின் தாயார் திருமதி. ஜெயந்தி ஜகநாதன் அவர்கள்.

Wednesday, April 12, 2017

நிர்வாணம் - யார் குற்றம்?


மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் 
உயிர்நீப்பர் மானம் வரின் 


தமிழக விவசாயிகள் "விவசாயக்கடன்" தள்ளுபடி செய்யவேண்டி போராட்டம் நடத்தி வரும்  வேளையில். அரசின் பாராமுகம் காரணமாக, போராட்டம் அடுத்த கட்டமாக "ஆடை துறப்பு" நிலையை எட்டியுள்ளது. இதைப்பற்றி சமீபத்தில் என்னுடனிருத்தவரிடம் உரையாடியபோது, "தலையை அடமானம் வைத்தாவது கடனை கட்ட வேண்டாமா?  கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்று பாடியது உங்கள் ஊரில்தானே என்றார். 

"ஆடை துறப்பு" என்பதை சாதாரண நிகழ்வாக என்னால் எடுத்துக்கொள்ள முடிவதில்லை, அது கடை நிலை. "வந்தார்கள் வென்றார்கள்" எனும் புத்தகத்தில் மதன் இதை உணர்வுப்பூர்வமாக விளக்கியிருப்பார்.

பாபருக்கும், மெதினிராய் (ராஜபுத்திரர், ராணா சங்கா வின் நண்பர்) க்கும் நடந்த யுத்தம்.

பாபரின் படையை தாக்குப் பிடிக்க முடியாமல் ராஜபுத்திரப் படைகள் கோட்டைக்குள் புகுந்து கொண்டு நீண்ட நேரம் வெளியே வரவில்லை. திடீரென்று பாபரை வியப்பில் ஆழ்த்திய அந்த நிகழ்ச்சி நடந்தது.

கோட்டைக்குள்ளிருந்து நெற்றியில் சிவந்த திலகங்களுடன், பிறந்த மேனியுடன், கையில் வாட்கள் பளீரிட ராஜபுத்திர வீரர்கள் சாரி சாரியாக வெளியே பெருங்கோஷத்துடன் ஆவேசமாக பாய்ந்து வந்தனர்!

"என்ன இது" ? என்று குழம்பிய பாபரிடம் அவரது தளபதி கூறினார்.

"போரில் இனி தோல்வி உறுதி என்கிற நிலை ஏற்ப்படும் மாத்திரத்தில் இந்த ராஜபுத்திரர்கள் தங்கள் குடும்பங்களின் மானத்தை காக்கவேண்டி தாய், மனைவி, குழந்தைகளை வாலைப்பாய்ச்சி கொன்று விட்டு, தங்கள் போர் உடைகளை கலைந்து விடுவார்கள். அந்தக் கணமே உயிர் தியாகத்துக்கும், வீர சொர்கத்துக்கும் அவர்கள் தயாராகிவிட்டார்கள் என்று அர்த்தம். ராஜபுத்திர இனத்தின் சம்பிரதாயம் அது. இனி இவர்களுடைய உயிரற்ற உடல்களை மிதித்துக்கொன்டுதான் நாம் கோட்டைக்குள் நுழைய முடியும்..."

சரி, அவர்களின் துன்பத்திற்கு நாம் என்ன செய்ய முடியும்? என்று நாமிருக்கலாமா? தெரியவில்லை... இது போன்ற சிக்கலான ஒரு வழக்கு தன்னிடம் விசாரணைக்கு வந்தபோது நியூயார்க் நகரின் அப்போதைய மேயர் Fiorello La Guardia என்ன செய்தார்?

1935 ஆண்டு, பொருளாதார சிக்கலில் நகரம் தத்தளித்த தருணம். ஒரு நாள், இரவுநேர வழக்கு விசாரணை. நீபதியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மேயரே வழக்கை விசாரிக்க தொடங்கினார். சில நிமிடங்களில் கந்தலாடையுடன் வயது முதிர்ந்த பெண்மணி விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார். அவர்மீது சுமத்தப்பட்ட குற்றம் "திருட்டு". அங்கிருந்த வெதுப்பக்கத்தில் ரொட்டித்துண்டை களவாடிவிட்டார். குற்றத்தை அப்பெண்மணியும் ஒப்புக்கொண்டு விட்டார்.

ஒருவேளை உணவுக்காக நூற்றுக்கணக்கான மக்கள் தத்தளிக்கும் வேளையில் இதை பெரிதுபடுத்தாமல் விட்டுவிடலாமென மன்றத்தில் இருப்பவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் வெதுப்பாக உரிமையாளர், இதை மன்னித்து விட்டால் திருட்டு தொடர்கதையாகிவிடும், அதனால் தண்டனை கொடுத்தே ஆகவேண்டுமென முறையிட்டார். வேறு வழியில்லாமல் மேயரும் குற்றம் சாட்டப்பட்ட பெண்மணியிடம். "நான் உங்களுக்கு தண்டனை வழங்கியாகவேண்டும், சட்டம் யாருக்கும் விலக்களிப்பதில்லை. தாங்கள் செய்த குற்றத்திற்கு தண்டனையாக 10 அமெரிக்க டாலர்கள் அபராதம் கட்டவேண்டும் அல்லது 10 நாட்கள் சிறைக்கு செல்லவேண்டும்" என்று கூறிக்கொண்டே தனது சட்டைப் பையிலிருந்து 10 டாலர் எடுத்து அபராதத்தொகையை அவரே செலுத்துவிட்டார். அதோடு நிற்காமல், வயது முதிர்ந்த ஒருவர் வாழ வழியில்லாமல் ஒரு வேளை உணவுக்காக திருடும் நிலையில் இந்த சமுதாயத்தை வைத்திருப்பதற்காக இந்த வழக்குமன்றத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் (வெதுப்பாக உரிமையாளரையும் சேர்ர்த்து) 50 சென்ட்ஸ் அபராதம் விதித்தார். அனைவரிடமும் வசூலிக்கப்பட்ட தொகை $ 47.50, குற்றம் சுமத்தப்பட்ட பெண்மணியிடம் வழங்கப்பட்டது.                         

நம் விவசாயிகளை வாழ வழியில்லாமல் செய்து, நிர்வாணமாக்கி மேலும் தற்கொலை வரை கொண்டுசென்றது யார் குற்றம்?  

Sunday, April 2, 2017

குளிர்களி

வெகு நாட்களுக்குப் பிறகு நேற்று ஐஸ்கிரீம் சாப்பிட அருகிலிருக்கும் கடைக்கு சென்றிருந்தோம் , அங்கு "பரோட்டா"வையும் "பழைய சோற்"றையும் ஒன்றாக பிசைந்ததுபோல சகிக்கமுடியாத பல நிறங்களில், மணங்களில் மற்றும் சுவைகளில் (?) "ஐஸ்கிரீம்"கள் கிடத்தப்பட்டிருந்தன. அதில் சூரியனை தாங்கிய ஐஸ்கிரீமை ஆளுக்கொன்று வாங்கிக்கொண்டு கடையின் வெளியில் அமர்ந்து சுவைக்க தொடங்கினோம்.

"ஐஸ்கிரீம்" என்பதற்கு தமிழில் என்னவென்று ஆர்யா கேட்க, சரியான மொழிபெயர்ப்பு என்னவென்று யோசிக்கும்போது "பனிக்கூழ்" என்பதை விட "(இனிப்பு) குளிர்களி" என்பதே சரியென தோன்றியது. இதை அவனிடம் விளக்க முயன்று, முயன்று... அவனுக்கு "குளிர்களி"உண்ணும் எண்ணமே போய்விட்டது. அவன் அழுவதற்கு சற்று முன்பாக தமிழ் வகுப்பை முடித்துக்கொண்டேன். "கூழாக" உருகிய "களி"யை உறிஞ்சிக்கொண்டே "குளிர்களி" வரலாற்றை பின்னோக்கி தேடியபோது... 

சரியாக ஆவணப்படுத்தப்படாத பனிக்களியின் வரலாறு தோராயமாக கி.மு நான்காம் நூற்றாண்டு தொடங்ககுகிறது. இந்தியாவை முழுமையாக கைப்பற்ற முடியாமல் தூக்கத்திலேயே இறந்த "அலெக்சாண்டர்", அந்த துக்கத்தின் சூடு தனிய, பனியுடன் கலந்த தேனை பருகியதாக தெரிகிறது. ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது அதன் சுருதிக்கு தப்பாமல் "பிடில்" வாசித்த நீரோ  மன்னன், களைப்பு நீங்க பனிக்கூழ் அருந்தலாமென "ஓட்ட" வீரர்களை மலைக்கு அனுப்பி பனி கொண்டுவர சொன்னதாக ருசிகர தகவலும் உண்டு. "ஒரு" குழந்தைக்கு உரிமைகோரி வந்த இரு தாய்மார்களுக்கு கருணையோடு தீர்ப்பு வழங்கிய "விவிலிய" புகழ் சாலமனும்கூட பனிக்கூழ் போல ஏதோ ஒன்றை விரும்பி சுவைத்துள்ளார். அதன் பின்னர் பலநூறு ஆண்டுகள் உருண்டோடிய பின்னர், "மங்கோலியா"விலிருந்து தாயகம் திரும்பிய மார்கோ போலோ "சீவல் ஐஸ்"சை இத்தாலிக்கு அறிமுகம் செய்துள்ளார். 

ஆவணப்படுத்தப்பட்ட பனிக்கூழின் தோற்றம் கி.பி 1744 லில் அமெரிக்காவில் இருந்து தொடங்குகிறது. அதன் பின்னர் பனிக்கூழ் செய்ய பல வழிமுறைகள் கையாளப் பட்டாலும், பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்கள், 'நான்ஸி ஜான்சன்' என்பவரின் கண்டுபிடிப்பைத்தான் அங்கீகரித் திருக்கிறார்கள்.  நான்ஸி அமெரிக்காவை சேர்ந்தவர். 1843-ம் ஆண்டு கையால் சுழற்றி இயக்கக்கூடிய ஐஸ்கிரீம் இயந்திரத்தை கண்டுபிடித்தார். அந்த இயந்திரத்தைக் கொண்டு உருவாக்கிய ஐஸ்கிரீமையே, அங்கீகரிக்கப்பட்ட முதல் ஐஸ்கிரீம் கண்டுபிடிப்பாக உறுதிப்படுத்தி உள்ளனர்

அன்று தொடங்கிய குளிர்களியின் பரிணாம வளர்ச்சி இன்னும் தொடர்கிறது. கியூபாவின் சுருட்டு மணத்தில் கூட குளிர்களி கிடைப்பதில் பெருமை  சுருட்டுக்கா! அல்லது குளிர்களிக்கா! என்பது விடையில்லா கேள்வி. ஒரு ரூபாயில் தொடங்கி கிட்டத்தட்ட 66,000 ரூபாய் வரை குளிர்களி கிடைக்கிறது. 66,000 ($1000) ரூபாயா நம்ப முடியவில்லையா!

நியூயார்க் நகரத்தில் இருக்கும் "செரன்டிபிட்டி 3" எனும் கடையில் இந்த கின்னஸ் புகழ் ஐஸ்கிரீம் கிடைக்கிறது. இந்த "செரன்டிபிட்டி" என்ன அவ்வளுவு பெரிய இதுவா? எனும் உங்களின் கேள்விக்கு விடை தெரியவில்லை, ஆனால் ஹாலிவுட்டின் சொப்பன சுந்தரிகளும் அதன் இந்நாள் மற்றும் முன்னால் உரிமையாளர்களும் அடிக்கடி வந்துபோகும் இடம் இது.   

இத்தனை புகழை தன்னகத்தே கொண்ட அந்த குளிர்களியை சாப்பிட முன்பதிவு அவசியம். குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு முன்பாக உணவாக அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். 66,000 ரூபாய்க்கு அதில் அப்படி என்னதான் இருந்து விடப்போகிறது, எப்படி அதற்கு கணக்கு காட்டப் போகிறார்கள் என்று திகிலுடன் தேடிய போது 

அதன் பெயர் "Golden Opulence Sundae", மூன்று அடுக்குகளால் ஆனா வெண்ணிலா ஐஸ்கிரீம், அதற்க்கு குளிரக்கூடாது என்பதற்காக உண்ணக்கூடிய 23 கேரட் தங்கதாளால் போர்த்தப்பட்டிருக்கும். அதன் தலையில்  செருகியிருக்கும் தங்கப்பூவை நீங்கள் உணவகம் விட்டு வெளியில் வரும்போது உங்கள் காதிலும் செரிக்கிக் கொள்ளலாம்.  கூடுதல் சுவைக்காக அதனுடன் இனிப்பு சுவையூட்டிய "மீன் முட்டை"யும் தரப்படும். 

பின்குறிப்பு: "மீன் முட்டை"யை உண்ணும் முறை என்னவென்றால், அதை  நாவிலிட்டு மேல் அன்னம் வரை கொண்டு சென்று, நாவினால் நசுக்க வேண்டும். பல் படக்கூடாது என்பது மிக முக்கியம். அப்படி செய்யவில்லை என்றால் முன்னறிவிப்பின்றி உங்கள் பெயர் காட்டுமிராண்டி கூட்டத்தில் சேர்க்கப்படும்.




இவ்வளவு காசு கொடுத்து யாரு இத சாப்புடுவா? என்று நினைத்த போதுதான். தோராயமாக ஆண்டுக்கு 50 பேர் வரை சாப்பிடுவதாக தெரிகிறது. சரிதான், "பல் இருப்பவன் பக்கோடா சாப்பிடுகிறான்" என்று நினைக்கத் தோன்றினாலும், காலையில் அது என்னவாக வெளியில் வரும் என்ற கேள்வியும் சேர்ந்தே வருகிறது. அனைவரும் "tywin lannister" ஆகிவிட முடியாதல்லவா...

பல சமயங்களில் பொருளுக்கல்ல அது தாங்கியிருக்கும் பெயருக்கே விலை... என்று எண்ணிக்கொண்டு டார்லிங் அவ்வையின் பாடலை நினைவு கூர்ந்தேன்...


விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்
விரனிரைய மோதிங்கள் வேண்டும் - அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர் கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று. 

Saturday, December 31, 2016

இரண்டாம் காதலி... முதல் மனைவி...

(கிட்டத்தட்ட) எல்லா மகன்கள் போல, எனக்கும் அம்மாதான் முதல் காதலி...  

"அழகு என்பது நிறத்திற்கு அப்பாற்பட்டது" என்பது "கனகவள்ளி" எனும் அந்த தேவதையை கண்டபின்புதான் புரிந்துகொண்டேன், சுருங்க சொல்வதென்றால் "கனகவள்ளி"  கோவிலில் இருக்கும் அலங்கரிக்கப்பட்ட "சாமி"சிலை. அந்த சிலையை தினமும் பார்க்க, "திட்டு"மட்டுமல்ல அடிகூட வாங்க ஒரு கூட்டமே காத்துக்கிடந்தது.

அன்றைய தினம் நாங்கள் அனைவரும் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தபோது, கனகவள்ளி அங்கு வந்தார். "ஆறுமுகம்" என்று அவர் அழைக்க, அவனும் ஓடி அருகில் சென்றான் பவ்யமாக. எங்கள் அனைவரின் முன்பாக ஆறுமுகத்திடம் ஒரு காகிதஉறையை நீட்டி, "உங்க எல்லாருக்கும் சேத்து இந்த பத்திரிக்கையை ஆறுமுகம் கிட்ட கொடுக்குறேன், நீங்க எல்லாரும் என்னோட கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும்" என்று கூறிவிட்டு, "7B மாணவர்கள்" என காகித உறையில் எழுதினார்.

"டீச்சர், டீச்சர் அப்போ உங்கள நாங்க இனிமே பாக்கவே முடியாதா?" என்று ஆறுமுகம் சோகமாக கேட்க, கனகவள்ளி டீச்சர் கண்ணீரை மறைத்து கொண்டு "முழுஆண்டு பரீட்சை முடுஞ்சதும் நான் கண்டிப்பா வருவேன்" என்று உறுதிமொழிந்தார். இரண்டு மாதம் தேர்வு விடுமுறை முடிந்ததும் மீண்டும் பள்ளிக்கு திரும்பியபோது, ஒருவர் விடாமல் நாங்கள் அனைவரும் "7B" வகுப்பை பார்த்துவிட்டு வந்தோம், ஆறுமுகத்தை அனுப்பி ஆசிரியர்கள் அறையிலும் சென்று பார்த்துவர அனுப்பினோம், எங்குமே கனகவள்ளி டீச்சரை காணவில்லை.

அந்த துயரத்திலிருந்து மீள்வதற்க்கு முன்பாகவே அடுத்தஇடி இறங்கியது "8B"யில். பள்ளியிலேயே மிகவும் கெடுபிடியான ஆசிரியை எங்கள் "வகுப்பு ஆசிரியை"யாக வருவதாக ஆறுமுகம் கூறினான். மறுநாளே அது வதந்தியானது. கெடுபிடி ஆசிரியைக்கு பதிலாக "சீனிவாசன்" சார் எங்கள் வகுப்புக்கு வந்தார். "சீனி" சார் "8B"க்கு வருகிறார் என்றவுடன் மற்ற வகுப்பில் இருந்து மாணவர்கள் எறும்பாக "8B"க்கு படையெடுத்தனர். தலைமை ஆசிரியர் அனுமதியுடன் விருப்பமாற்று பெற்றுக்கொண்டு, பிரிவுக்கு இரண்டு மாணவர்கள் வீதம் பத்துபேர் அதிகமாயினர் எங்கள் வகுப்பில்.

சீனிவாசன் சார் எங்கள் வகுப்பிற்கு வந்ததிலிருந்து எங்கள் அனைவருக்கும் ஒரே குதூகலமாக இருந்தது. பாடம்தவிர, சூரியஒளி தழுவும் அனைத்தையும் பற்றி விவாதிப்போம். அவ்வாறான விவாதம் ஒன்றில், தனக்கு "வானவியல்" தெரியுமென்றும் எதிர்காலத்தை கூட தன்னால் கணிக்கமுடியுமென றும் சீனிவாசன் சார் கூற, நாங்கள் எங்களுக்குள் "டூப்பு டூப்பு" என்று மெதுவாக கூறிக்கொண்டு வாயைமூடி சிரித்தோம்.

நாங்கள் சிரிப்பத்தை கண்டுகொண்ட சீனிவாசன் சார் அதோடு நில்லாமல், தன்னுடைய சாகசத்தை அடுத்த படிக்கு உயர்த்தினார். என்னால் உங்களுடைய மனைவியின் பெயரை கூட சொல்லமுடியும் என்று ஒரு பந்தில் சதமடித்தார். வகுப்பில் கிளுகிளுப்பு விண்ணைத்தொட்டது. இருந்தாலும் சிலர் சீனிவாசன் சாரின் "அமானுஷ ஷக்தியை" நம்பாமல் தொடர்ந்தது இளித்தனர். பொறுமையிழந்த சீனிவாசன் சார், "சரிடா இன்னும் நீங்க நம்பலேன்னா வரிசையா இங்க வாங்க உங்க வருங்கால பொண்டாட்டி பேர இப்போவே நான் சொல்றேன்" என்று கட்டளையிட...

...
...              
...      
...

ஆசை அனைவரையும் தள்ளினாலும், நல்ல பையன் என்ற பிம்பத்தை உடைக்க யாருக்கும் விருப்பமில்லை. அதனால்... 

...
...              
...      
...

"என்னடா? யாரும் வரலையா? சும்மா நடிக்காதீங்கடா! வாங்கடா!!!" என்று சார் அன்புடன் அழைக்க.
...
...

நான் முதலில் சென்றேன்...

"என்னடா, ஒருத்தந்தான் வந்துருக்கான், வேற யாருக்கும் பொண்டாட்டி பேரு தெரியவேண்டாமா ?"என்று சார் தூண்டில்போட

ஆறுமுகம்
செல்லத்துரை
தவமணி
மகேஷ்

என ஐவர் வரிசையில் நின்றோம்...

மறுபடியும் சீனிவாசன் சார் தூண்டில் வேறு திசையில் வீச, புதிதாக எந்த மீனும் மாட்டவில்லை. "சரி, வராட்டி போங்க..." என்று சலித்துக்கொண்டு என்னிடம் "வலதுகை" என்றார். சிலநொடிகள் உற்றுநோக்கிவிட்டு

"உன்னோட wife பேரு..." என்று இடைவெளி விட்டு மொத்த வகுப்பையும் நோக்கினார்... வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவன்கூட சீனிவாசன் சாரின் அடுத்த வார்த்தைக்கு காத்திருந்தான்.

....

"உன்னோட wife பேரு..."

...
...
...

பொறுமையிழந்த மொத்த வகுப்பும் "சொல்லுங்க சார்..." என்று கெஞ்ச...

"உன்னோட wife பேரு... Mrs. அருண்..." 

Saturday, December 3, 2016

கட்டபொம்மனும்...நெப்போலியனும்... எனது ஒன்றுவிட்ட தாத்தாவும்...

விடுமுறைக்கு சொந்தஊருக்கு சென்றிருந்த பொழுது நிகழ்ந்த மற்றொரு சம்பவம்...

பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் அடுத்ததாக இருந்தது பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, அதைக்கண்டு வரலாமென்று அன்று காலையே புறப்பட்டோம் கோட்டைக்கு. மதி மலரும் வேளையில்தான் வீடுதிரும்பினோம். மறுநாள்காலை எங்களின் நலம் விசாரித்துவிட்டு அப்படியே ஏகாதிபத்திய மண்ணில் வாங்கிய மின்கல விளக்கை கப்பமாக பெற்றுச்செல்ல எனது ஒன்றுவிட்ட தாத்தா எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்.

மின்கலம் மறுஊட்டம் செய்யவியலாததால் விளக்கில் அவருக்கு திருப்தியில்லை சலிப்புடன் அடுத்த கேள்வியை சம்பிரதாயமாக துவங்கினர்.

"அப்புறம், நேத்து எங்க போயிருந்தீங்க?"

"பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு போயிருந்தோம் தாத்தா, நல்லாயிருந்தது. நீங்க போயிருக்கீங்களா?"

"இல்ல, அதுக்கெல்லாம் நமக்கு எங்க நேரம் இருக்கு, சிவாஜி நடிச்ச கட்டபொம்மன் படம் பார்த்ததோடு சரி" என்று கூறிக்கொண்டே என் மகனை அருகில் அழைத்தார். அவனும் தயங்கிக்கொண்டே அவர் அருகில் சென்றான். 

இந்த தாத்தா நடிகர் திலகம் சிவாஜியின் தீவிர பக்தர். வரலாற்றுப் பேராசிரியருக்கே வரலாறு கற்றுக்கொடுக்கும் பேரறிவை பிறப்பிலேயே கொண்டவர். இவரின் சின்ன தலைக்குள் இவ்வளவு தகவல்களா! என்று நான் பலமுறை வியந்துள்ளேன். ஒரு சமயம் அவர் இவ்வாறு கூறியது இன்னும் என் நினைவில் உள்ளது. "நடிகர் திலகம்(1928-2001) அவர்களே முந்தைய பிறவிகளில் "வீரபாண்டிய கட்டபொம்மு"வாகவும்(1760-1799), கப்பலோட்டிய தமிழனாகவும் (1872-1936), ஒரு படிமேலே போய் மகாகவியாகவும் (1882-1921) வாழ்ந்தார்".

"ஆரியா, கோட்டையில என்ன பாத்தேன்னு தாத்தாகிட்ட சொல்லு!" வழக்கம்போல அதற்கு அவன்  கேள்வி புரியாமல் என்னைப்பார்க்க. நானும் வழக்கம்போல அவனுடைய பதிலை என் வாய்மொழிந்தேன்...

சிறிது நேரத்தில் கோட்டை கட்ட பாஞ்சாலங்குறிச்சி ஏன் தேர்வானது என்ற கேள்வி வரவே. நான் அங்கு சுற்றுலா வழிகாட்டியிடம் கேட்டதையும் அதற்கு முன்பு புத்தகத்தில் படித்ததையும் அவரிடம் சொன்னேன்.

"ஒரு நாள் கட்டபொம்மனின் முன்னோர்கள் வேட்டைக்கு அருகில் இருந்த காட்டுப்பகுதிக்கு சென்றபொழுது, அவர்களுடன் வந்த வேட்டைநாய் அங்கோர் முயலை கண்டது. உடனே அதனைப்பிடிக்க விரட்டியது. உயிருக்குப் பயந்து ஓடத்தொடங்கிய முயல், தொடர்ந்தது ஓடியது, வேட்டைநாயும் விடாமல் விரட்டியது.  அதுவரை ஓடிய முயல் ஒரு குறிப்பிட்ட பகுதியை அடைந்ததும் ஓடுவதை நிறுத்திவிட்டு வேட்டைநாயை எதிர்த்தது. இதைக்கண்ட கட்டபொம்மனின் முன்னோர்கள், முயலுக்கே வீரம் கொடுத்த இந்த மண்ணில்தான் நாம் கோட்டை கட்டவேண்டும் என்று முடிவுசெய்து கோட்டையை கட்டிமுடித்த ஆண்டு கி.பி 1101" என்று கூறி முடிக்க.

"என்னது! முயல் நாய்கூட சண்டை போட்டுச்சா? அதுவும் வேட்டைநாய் கூடவா? இதெல்லாம் நம்புறமாதிரியா இருக்கு? நம்ம ஆளுங்க ஒண்ணுன்னா நூறுன்னுதான் சொல்லுவாங்க" என்று வரலாற்றின்(?) மீது பிராது கொடுத்தார். 

சில நொடிகள் நாம் அமைதியாக இருந்தேன் பிறகு முன்பு படித்த நெப்போலியனின் நிகழ்வு நினைவில் வரவே...

"1807 ஆண்டு, ருசியா பேரரசின் படைகளை வென்ற நெப்போலியன் அந்த வெற்றியை கொண்டாட  அவரின் படைத்தலைவர் "லூயிஸ் பெர்த்தியர்" என்பவரிடம் முயல் வேட்டைக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். அவரும் ஆணையை ஏற்று வேட்டைக்கு முயல்களை சேகரித்தார். மொத்த முயல்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3000. மதிய உணவு உண்டபிறகு வேட்டைக்கு அனைவரும் துப்பாக்கியுடன் தயாராக, கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து முயல்களும் புல்வெளிக்கு திறந்து விடப்பட்டன. கையில் துப்பாக்கியுடன் வீர்கள், அவர்களின் முன்னே (அப்போது) உலகின் சக்திவாய்ந்த மனிதன் நெப்போலியன், எதிரே அப்பாவி முயல்கள். துப்பாக்கிகளின் விசைகள் அழுத்தத்துக்கு தயாராக இருந்தன. முயல்கள் ஓட வேண்டும் அவ்வளவுதான்"

"அப்புறம் என்னாச்சு" என தாத்தா தோட்டாவை வீசினார் 

"ஓடுவதற்கு பதிலாக முயல்கள் வீரர்களை நோக்கி முன்னே வரத்தொடங்கின. இதைக்கண்டு அனைத்து வீரர்களும் சிரித்தனர், நெப்போலியனும்" அவர்களுடன் எனது ஒன்றுவிட்ட தாத்தாவும் சிரித்தார்.

"பெறகு?"

"முன்னே வந்த முயல்கள் வீரர்களின் மீது பாய்ந்தன, இதில் சிறப்பம்சம் என்னவென்றால்! ஒரு சிறிய முயல் கூட்டமே நெப்போலியன் மீது பாய்ந்தது ஒன்றின்மீது ஒன்றாக ஏறி தலைவரை சென்றுவிட்டது. இதே நிலைதான் அனைவருக்கும். வேட்டையாட வந்த கூட்டம் முயல்களால் வேட்டையாடப்பட்டது. தப்பித்தோம் பிழைத்தோம் என்று நெப்போலியன் அங்கிருந்து ஓடினார். அவரைத் தொடர்ந்து அவருடைய வீரர்களும்"

"உண்மையாவா!"

"ஆமா தாத்தா, இதப்பத்தி அவருடைய படைத்தலைவர் (Paul Thiébault) சொல்லியிருக்கார்"

"ஓ வெள்ளைக்காரனே சொல்லிட்டானா அப்ப உண்மையாத்தான் இருக்கும்..."