cookie

Showing posts with label kovilpatti. Show all posts
Showing posts with label kovilpatti. Show all posts

Tuesday, January 20, 2015

ஆரஞ்சு மிட்டாய்...

தங்கராஜ் சிறுகுறிப்பு வரைக?


எனது துவக்கப்பள்ளி நாட்களையும் தங்கராஜையும் பிரிதல் இயலாது. பிறர்நலம் போற்றிப் பேணுவதில் அவனுக்கு நிகரில்லை. அவனுக்கு இருந்த தொலைநோக்குப் பார்வைக்கும் நுண்ணறிவுக்கும் நிச்சயம் இச்சமயம் சிகரங்களைத் தொட்டிருப்பான்.

தங்கராஜ் பற்றி பெருங்குறிப்பு வேண்டுவோர் கீழ்க்காணும் சுட்டியை சொடுக்கவும்

http://arun-radhakrishnan.blogspot.com/2012/09/blog-post.html

பெருஞ்சுவர்  


தங்கராஜின் ஞானக் கண்களின் அறிவுத் தேடுதலுக்கு தகுந்த விடை மூன்றாம் வகுப்பில் அந்த ஆண்டு கிடைக்காததால், அடுத்த ஆண்டும் அதே மூன்றாம் வகுப்பில் தொடர்ந்து தேடினார். என்னுடைய பூனைக் கண்கள் எதையும் தேடாததால் அடுத்த வகுப்பிற்கு விரட்டப் பட்டேன். துவக்கப்பள்ளியில் அதுவரை சேர்ந்து படித்த இருவரும் விதியின் சதியால் முதன் முறையாகப்  பிரிக்கப்பட்டோம். 

துக்கம் தொண்டையை அடைக்க விம்மலுடன் விடைபெற்றேன் என் மானசீக குருவிடம். ஆசி வழங்கி அடுத்த வகுப்பிற்கு அனுப்பினார் "தங்கமான ராஜ்". ஒரு சுவர் மட்டுமே எங்களைப் பிரித்தது. வகுப்பு நேரம் தவிர மற்ற அனைத்து தருணங்களிலும் எங்களுடைய சிந்தனைப் பரிமாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருந்தன.

புதிய உலகம்


அன்று வெள்ளிக் கிழமை, மதியம் உணவு இடைவேளையில் உண்டமயக்கம் களைய நடை பயிற்சியில் இறங்கினோம் நானும், அவரும். பள்ளியைவிட்டு சிறிது தூரம் வெளியே வந்தவுடன், வழக்கமான வழியில் செல்லாமல் புதிய திருப்பத்தில் திருப்பினார் குரு. நானும் அவரைத் தொடர்ந்தேன். அந்தப் புனிதப் பயணம் ஒரு "பாய்" கடையை அடைந்தது. 

பெரிய "பாய்"ன் வாரிசு, சின்ன "பாய்" அங்கே வீற்றிருந்தார். அவரையும் "பாய்" என்றே அழைத்தார் தங்கராஜ். சின்ன பாயின் காதுகளில் ஏதோ மந்திரங்களை தங்கராஜ் ஜெபிக்க, ஒரு வஸ்துவை வெளியே எடுத்து கடையின் முன்புறம் தொங்கவிட்டார் சின்ன "பாய்".

வகுப்பில் வழக்கம்போல திருதிருவென்று விழிப்பதைப் போல ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன் அந்த வஸ்துவை. "தங்கராஜூ, இது என்னதுடா?" என்று பயபக்தியுடன் நான் கேட்டதற்க்கு, "இது தான் லக்கி ப்ரைஸ்" என்று விளக்கமளித்து, அந்தப் புதிய உலகத்தின் கதவுகளைத் திறந்து,  எனக்குப் பிறவிப் பயனையளித்தார் தங்கராஜ்.

லக்கி ப்ரைஸ்


செவ்வகமான அட்டையில் மேல்புறம் சில பரிசுப் பொருட்கள் எண் குறிப்பிடப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு தொங்கவிடப் பட்டிருக்கும். செவ்வக அட்டையின் கீழ்புறம், சதுரம், சதுரமாக கிழிப்பதற்கு ஏதுவாக காகிதத்தில் செய்யப்பட்ட உறை போன்ற ஒன்று ஒட்டப்பட்டிருக்கும் . 25 பைசா கொடுத்தால்(விலை மாறுதலுக் குட்பட்டது), அதில் ஒரு உறையை கிழிக்கலாம். அந்த உறையினுள் இருக்கும் மற்றொரு சிறிய காகிதத்தில் எதாவது எண் இருக்கும். அந்த எண்ணும், மேலே தொங்கவிடப் பட்டிருக்கும் பரிசுப்பொருட்களில் உள்ள ஏதாவது எண்ணும் பொருந்துமேயானால் அந்தப் பரிசு கிழிப்பவருக்குக் கிடைக்கும்.        
                 

என் செல்லப் பெயர் 


இந்த விதிமுறையை எனக்கு விளக்கிவிட்டு, "லிக்கி ப்ரைஸ்" கிழிக்க தயாரானார் தங்கராஜு. அப்போது எனக்கு ஒரு ஐயம் எழுந்தது. பொதுவாக குருநாயரிடம் சட்டையிருக்கும், சட்டையில் பையிருக்கும் ஆனால் பணம் ?

அப்போதுதான் குரு அவருடைய குருவான "ராபின் ஹூட்" என்பவரைப் பற்றி விளக்கினார். "ராபின் ஹூட்"டின் அறிவுரைப்படி தங்கராஜு, பணமிருக்கும் அவரின் அப்பாவின் சட்டைப் பையிடமிருந்து பணத்தை எடுத்து பணம் இல்லாத வேறொரு சட்டைப் பையிடம் கொடுத்துவிட்டார். அந்த வேறொரு சட்டையைத்தான் இன்று அவர் அணிந்து வந்துள்ளார்.      

தங்கராஜ் வாஸ்துசாஸ்த்திரத்திலும் வல்லுனர் என்பது அன்றுதான் எனக்குத் தெரியும். அவர் விரும்பிய பரிசுப்பொருளில் தன் வலதுகை கட்டைவிரலைப் பதித்து இரண்டு "ஜான்" கீழ்நோக்கி அளந்தார். இரணடாவது "ஜான்" முடிந்த இடத்திலிருந்த அந்தச் சதுர உரையைக் கிழித்தார். உள்ளே ஒரு எண், அந்த எண்ணும் அவர் விரும்பிய பரிசுப்பொருள் எண்ணும் ஒத்திருந்தது. அன்றுதான் எனக்குத் தெரியும் தங்கராஜூவின் "செல்லப் பெயர் அதிர்ஷ்டம்" என்பது. 

என்னையும் ஒரு உறையை கிழிக்கப் பணித்தார். என்னிடம் 10 பைசா மட்டுமே இருந்தது. அதனால் திங்கள்கிழமை கிழிப்பதாக உறுதிமொழி எடுத்துவிட்டு , இருந்த 10 பைசாவிற்க்கு மிட்டாய் வாங்கிக் கொண்டு திரும்ப வந்துவிட்டோம்.

அந்த 25 பைசா


மறுநாள், என் அம்மாவிடம் 25 பைசா கேட்டேன். தன் நலனைவிட என் நலன் பேணும் என் அக்கா, நான் "லக்கி ப்ரைஸ்கிழிக்கத்தான் காசு கேட்கிறேன் என்பதை அம்மாவிடம் போட்டு உடைக்க, வழக்கமாக கிடைக்கும் 10 பைசாவும் அன்று கிடைக்கவில்லை.    

அன்றிரவு மீண்டும் மீண்டும் "ராபின் ஹூட்" என் கனவில் வந்து ஆசி வழங்கினார். மறுநாள் (ஞாயிறு)  காலை, "ராபின் ஹூட்"டின் முழு ஆசியுடன் என்னுடைய அம்மாவின் சிறுவாடில் இருந்து 25 பைசா என்னுடைய கால்சட்டைக்கு இடம் மாறியது.

ஞாயிறு மதியம், ஒரு கோழிக்கு மோட்சமளித்த திருப்தியில் எங்கள் வீட்டில் அனைவரும் உறங்கிவிட, எனக்கு மட்டும் உறக்கம் வரவில்லை. மற்றவர்களையும் உறங்கவிடாமல் தொல்லை கொடுத்ததால், பக்கத்துக்கு வீட்டுக்கு விரட்டியடிக்கப் பட்டேன். பக்கத்துவீட்டு மேரியக்கா அவர் போகும் "சண்டே க்ளாசுக்கு" என்னையும் அழைத்துக் கொண்டுபோனார். 

"சண்டே க்ளாஸில்" வெள்ளை அங்கி அணிந்த அந்த மனிதர் இயேசு பெருமான் மகளுக்காகப்  பட்ட துன்பங்கள் அனைத்தையும் விளக்கினர். அதைக் கேட்டு கிளிசரின் இல்லமல் என் கண்கள் நீரைக் கசிந்தன. அவரின் கதை என் அப்பாவிடம் நான் வாங்கிய பல சன்மானங்களை கண்முன் நிறுத்தியது. 

பின்பு, ஒரு வழியாக ஞாயிறு வகுப்பு முடிவுக்கு வந்தது. நாங்கள் புறப்பட தயாராக இருக்கும்போது, அதுவரை உருக்கமாக கதைசொன்ன அந்த மாந்தர் கையில் உண்டியலுடன் எங்கள் முன் வந்து நின்று ஏதோ காரணம் சொல்லி தங்களால் இயன்றதை கொடுக்கும்படி கேட்டார். சற்றும் யோசிக்காமல் கால்சட்டையில் இருந்த 25 பைசாவை உண்டியலுக்கு இடம்பெயரச்செய்தேன். முகமலர்ச்சியுடன் அந்த கதைசொல்லி எனக்கு ஒரு ஆரஞ்சு மிட்டாய் கொடுத்தார்.

வீட்டுக்கு வந்த பிறகுதான் என் தானத்தின் பக்கவிளைவு புரிந்தது. 25 பைசா போனதின் பாதிப்பு மிகப் பலமாக இருந்தது. சாப்பிடக்கூட முடியவில்லை. மீண்டும் அம்மாவின் சிறுவாட்டிடம் போகலாம் மென்றால் பயம், வேறு வழியில்லை, வெறுங்கையுடன் திங்கள் காலை பள்ளிக்குச் சென்றேன்.        


மீண்டும் அதிர்ஷ்டம் 


சொன்ன சொல் மாறாத தங்கராஜ் மீண்டும் 25 பைசவுடன் அன்று பள்ளிக்கு வந்திருந்தார். உணவு இடைவேளையில் மீண்டும் பாய் கடைக்கு சென்றோம். என்னிடம் பணம் இல்லை என்பதையும், அதன் காரணத்தையும்  தங்கராஜிடம் கூறினேன். அதைக்கேட்டு "பயந்தாங்கொலிப் பக்கடா" என்று எள்ளி நகையாடினார் குரு.        

இந்த முறை  பாய் கடையில் அப்பா "பாய்" இருந்தார். "லக்கி ப்ரைஸ்" அட்டையில் இன்று அழகான "சுவர் கடிகாரம்" இருந்தது. வாஸ்து வல்லுனர் தங்கராஜ், சுவர் கடிகாரத்தை தனதாக்கிக் கொள்ள அன்று செய்தது போலவே இன்றும் தன் சித்து வேலையைக் காட்டினார். 

என்னை ஏளனம் செய்து எள்ளி நகையாடிய குருவிற்க்கு பரிசு விழக்கூடாது என்று இயேசு பெருமானை மனதிற்க்குள் வேண்டிக் கொண்டேன். ஒன்று நான் கொடுத்த 25 பைசாவை திருப்பிகொடு, இல்லை தங்கராஜுக்கும் பரிசு விழக்கூடாது என்று அவரிடம் உடன்படிக்கை செய்துகொண்டேன்.

இதற்கிடையில் தங்கராஜு அந்த சதுர உறையை கிழித்துவிட்டார். உறையை பிரித்து அவர் அந்த எண்ணை பார்ப்பதற்க்கு முன்னர் படபடப்பில் என் இதயம் வெளியே வந்து விழுந்து விடும் போலானது.

ஒரு வழியாக உள்ளே இருக்கும் அந்த எண்ணைப் பார்த்தார் தங்கராஜு, அதில் அன்று மதியம் நாங்கள் சாப்பிட்ட முட்டை பப்பறப்பா வென்று படுத்துக்கிடந்தது. சில நொடிகளில் தங்கராஜு ஓ வென்று அழத்தொடங்கி விட்டார். குரு அழுவதைப் பார்த்து நானும் ஏனென்று புரியாமல் அழுதேன். 

நாங்கள் அழுவதைப் பார்த்த அப்பா "பாய்" நடந்தது புரியாமல் என்னவென்று விசாரித்தார். பின்பு இருவருக்கும் ஆறுதல் கூறினார். தங்கராஜு சமாதானம் அடைவதாக தெரியவில்லை. பின்பு "பாய்" இருவருக்கும் "ஆரஞ்சு மிட்டாய்" கொடுத்து, இனிமேல் இந்தப் பக்கமே வரக்கூடாது என்று விரட்டியடித்தார்.       

Sunday, November 11, 2012

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

       
1997 என் வாழ்வில் மறக்க முடியாத ஆண்டு, நம் சுதந்திர இந்தியாவின் பொன் விழா ஆண்டும் கூட. என்னை எப்படியாவது ஒரு பொறியாளராக மாற்றிட தன்னால் முடிந்த அனைத்து யுத்திகளையும் என் தந்தை முழு முயற்சியுடன் செய்து விட்டு என்னுடைய பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

காலை 
     07:00 முதல் 08:00 வரை கணக்கு 
     08:00 முதல் 09:00 வரை இயற்பியல் 

என கூடுதல் பயிற்சி வகுப்புகளை முடித்து விட்டு வீட்டுக்கு வந்து காலை உணவு சாப்பிட்டு முடித்து 09:20 மணிக்கு பள்ளிக்கு செல்வேன். 

மாலை 
   06:00 முதல் 07:00 மணி வரை வேதியல்  

என்னுடைய கணக்கு மற்றும் இயற்பியல் பயிற்சி வகுப்பு பேராசிரியர்கள் என் தந்தை பணி புரியும் அதே கல்லூரியில் தான் பணி புரிந்தார்கள் என்பதால். அன்றைய வகுப்பில் நான் புரிந்த சாகசங்களை அன்றைய தினமே என் தந்தையிடம் சுட சுட தெரிவித்து விடுவார்கள். அடுத்து என்ன நடந்திருக்கும் என்பதை நான் விளக்க தேவை இல்லை (புரியாதவர்கள் இங்கே செல்லவும் ).

பள்ளியில் எனக்கு வகுப்பு எடுக்கும் அதே ஆசிரியரிடம் தான் வேதியல் கூடுதல் வகுப்பிற்கும் சென்றேன். வேதியல் ஆசிரியர் மிகவும் நல்லவர். மாதா மாதம் அவருக்கு கட்டவேண்டிய கப்பம் சரியாக கட்டிவிட்டால் வேறு எதையும் கண்டு கொள்ள மாட்டார். வருட இறுதில் செய்முறை தேர்வில் 50 மதிப்பெண் கண்டிப்பாக போட்டுவிடுவார். 

அங்கிலம் கற்றுக் கொடுத்த ஆசிரியர் இன்னும் ஒரு படி மேலே போய், தன்னிடம் கூடுதல் பயிற்சி வகுப்பு படிக்காத மாணவர்களுக்கு Internal மதிப்பெண் "20" போடப் போவது இல்லை என்றே பகிரங்கமாக அறிவித்து விட்டார். கடைசி ஒரு மாதம் அவருக்கும் கப்பம் கட்டினேன்.

கூடுதல் பயிற்சி வகுப்புக்கு போகாதது "தமிழ்" பாடத்துக்கு மட்டும் தான். பாவம் தமிழ் ஆசிரியர் கூடுதல் வருமானத்திற்கு வழியில்லமல் போய் விட்டது.     

கணிதம் மற்றும் இயற்பியல் தொல்லைகள் முழு ஆண்டுத் தேர்வு முடிந்த பின்பும் ஒரு மாதம் தொடர்ந்தன. பொறியியல் படிப்பிற்க்கான நுழைவுத் தேர்வு முடிந்தவுடன் அதோடு இந்த தொல்லைகளும் முடிவுக்கு வந்தன. சரியாக ஒரு மாதம் என் மனம் போன போக்கில் மகிழ்ச்சியாக இருந்தேன். 

அன்று தேர்வு முடிவுகள் வெளியாயின. 1100 மதிப்பெண்களுக்கு மேல் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால்  என் பெற்றோர்கள் செய்திதாளில் என்னுடைய தேர்வு எண்னை தேடவில்லை. மதிப்பெண் பட்டியலை பெறுவதற்காக மறுநாள் பள்ளிக்கு சென்று காத்திருந்தேன். காலை பத்து மணியளவில் பள்ளி அலுவலகத்திற்கு முன்பு உறங்கிக் கொண்டிருந்த மரப் பலகையில் மதிப்பெண் பட்டியல் ஒட்டப்பட்டது. ஆர்வமுடன் சென்று பார்த்தபோது, என் பெயரருகே  "சாத்தான் எண்" தலை கீழாக உறங்கிக் கொண்டிருந்தது.

அடுத்த அரை மணியில் மதிப்பெண் பட்டியல் கொடுக்க ஆரம்பித்தார்கள். ஏதாவது அச்சுப் பிழையாக இருக்கலாம், நிச்சயம் மதிப்பெண் பட்டியலில் வேறு மதிப்பெண் இருக்கும் என நம்பி, நடுங்கி, வரிசையில் நின்றேன். வேறு மதிப்பெண் வேண்டு மென்றால் வேறொருவருடைய மதிப்பெண் பட்டியலைத்தான் தர வேண்டும் என்பதைப்போல் அதே சாத்தான் மீண்டும் மிரட்டியது.

வேறு வழியில்லாமல் மதிப்பெண் பட்டியலை வங்கிக் கொண்டு என்னுடைய வீட்டுக்கே சென்றேன். என் புறநானுற்றுத் தாய், நான் புற முதுகு காட்டித் திரும்பியுள்ளேன் என்பதை அறியாமல் என்னை வரவேற்க ஆர்வமுடன் காத்திருந்தார். எத்தனை மதிப்பெண் வாங்கியுள்ளேன் என்ற கேள்வி அம்மாவிடம் இருந்து வரும் முன்பு, நானே முந்திக் கொண்டு "எதிர் பார்த்ததை விட கொஞ்சம் குறைஞ்சி போச்சு" என்றேன்.

"குறைஞ்சி" அல்ல சுத்தமாக "தேஞ்சே" போச்சு என்பதை பட்டியலை பார்த்து புரிந்து கொண்டார் என் அம்மா. அனைவரும் காத்திருந்தோம் என் தந்தையின் வரவுக்காக. சிறிது நேரம் கழித்து வீட்டுக்குள் நுழைந்த என் தந்தை, என் அம்மா முகத்தில் "பயக்" கலையையும், என் முகத்தில் "சவக்" கலையையும் கண்டு  நான் அள்ளிக் கொண்டுவந்த மதிப்பெண் என்ன என்பதை புரிந்து கொண்டார்.

அடுத்த ஒரு மணி நேரம் எங்கள் வீட்டில் "பேசும் படம்" ஓடியது.

எதுவும் சொல்லாமல் எழுந்து வெளியே சென்று விட்டார் அப்பா. திரும்பி வந்தால் என்ன நடக்கும் என்பதை புரிந்து கொண்டு அப்போதே பெட்டியை கட்டி, சித்தி ஊருக்கு என்னை அனுப்பி விட்டார் அம்மா.

ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு நான் திரும்பி வந்த போதும் நிலைமையில் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை. அம்மா பலமுறை என்னுடைய விடைத்தாள் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொண்டும் அப்பா தீவிரமாக மறுத்து விட்டார். அதற்க்கு அவர் கூறிய காரணம். "இவன் கண்டிப்பா fail தான் ஆகிருப்பன்,. பாவம்னு Pass Mark போட்டிருப்பாங்க. மறுபடியும் apply பண்றது waste".

சில நாட்கள் சென்றது, என் நண்பர்கள் அனைவரும் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர். நான்  மட்டும் வீட்டில். கல்லூரி துவங்கி 20 நாட்கள் சென்ற பிறகு ஒரு நாள் என்னை கல்லூரிக்கு வரச் சொன்னார் அப்பா ( அவர் பணிபுரியும் அதே கலை கல்லூரிக்கு). "சிபாரிசு" எந்த மொழியில் இருந்து வந்திருந்தாலும் அது அவருக்கு பிடிக்காத வார்த்தை தான். என்ன செய்ய நான் மகனாக பிறந்த பிறகு அவருக்கு வேறு வழியில்லாமல் போனது.

இயற்பியலில் நான் அதிக ( மற்ற பாடங்களை ஒப்பிடும் போது ) மதிப்பெண் பெற்றிருந்ததால் அதே பிரிவில் இளம்கலை முதல் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டேன் (குருவியின் தலையில் பனம் பழமல்ல, பலாப்பழம்).

நிறைய அறிவுரைகளும், கொஞ்சம் (அக்கறையுடன்) மிரட்டல்களும் துறை தலைவரிடம் இருந்துவந்தது (இயற்பியல் துறை தலைவர் என் தந்தையின் நலம் விரும்பி).

ஓரளவு சுமாரான படிப்போடு, சிக்கல் ஏதும் இல்லாமல் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று  முதல் பருவத் தேர்வில் தேறி விட்டதால் கல்லூரிக்கு செல்ல "TVS-CHAMP" (அக்காவுக்காக வாங்கியது) கொடுத்தார் அப்பா, அதோடு   சில அறிவுரைகளும் வழங்கினார்.

இயற்பியல் பிரிவில், கணக்கும் ஒரு பாடமாக சேர்க்கப் பட்டிருந்தது. அதே போல் வேதியல் பயிலும் மாணவர்களுக்கும் கூடுதல் பாடமாக கணிதம் இருந்தது. அதனால் அந்த கணக்கு பாடத்திற்கு மட்டும் இயற்பியல் மற்றும் வேதியல் பிரிவு மாணவர்கள் சேர்ந்து ஒரே வகுப்பில் அமர்வோம். அவ்வாறு வந்தவர்களில் எனக்கு நண்பனானவர் தான் "சங்கர்" (பெயர் மாற்றப் படவில்லை).

சங்கர் "ஸ்ரீனிவாச ராமானுஜம்" அவர்களின் பக்கத்து வீட்டுப் பையன் போலும். கணக்கில் புலி. கோவில்பட்டிக்கும் ஈரோடுக்கும் (ராமானுஜம் அவர்கள் பிறந்த ஊர்) தொலைவு அதிகம் என்பதால் எனக்கு கணக்கு "கணக்க" ஆரம்பித்தது. எவ்வளவு முயன்றாலும் 75 க்கு 45 க்கு மேல் வாங்கியதில்லை. 

"முதல்வனாய் இரு அல்லது முதல்வனோடு இரு" என்று பள்ளியில் படித்ததாக நினைவு. அதன்படி இருந்து, கணக்கு பாடங்களில் சில பல முறைகள் சங்கரிடம் தெளிவு பெற்றுள்ளேன்.          

நாட்கள் இவ்வாறு செல்ல, என்னைப் பற்றி என் தந்தைக்கு முன்பு இருந்த கருத்து மெல்ல மெல்ல நல்ல விதமாக மாறிக் கொண்டு வந்தது (எப்படி என்று கேட்டல் தெரியாது, ஒரு உள்ளுணர்வுதான்) .          

இந்த சமயத்தில் வந்தது கல்லூரி ஆண்டு விழா...

எப்போதும் கல்லூரி ஆண்டு விழா வெள்ளிக் கிழமை மாலை தான் நடக்கும். அதேபோல் 1997 ம் ஆண்டும் ஒரு வெள்ளிக் கிழமை நடைபெற இருந்தது. மாணவர்கள் எவரும் அன்றைய தினம் வகுப்புகளுக்கு வர வேண்டியதில்லை. மாலை 06:00 மணிக்கு விழாவுக்கு நேராக வந்தால் போதுமானது.

என் தந்தை வழக்கம் போல காலையில் சென்றுவிட மாலைக்காக நான் காத்திருந்தேன். நானும் எனது அக்காவும் அன்றைய தினம் வீட்டில் இருந்ததால், மதிய உணவும் சேர்த்து கலையில் சமைக்கப் படவில்லை அதனால் என் தந்தைக்கு மதிய உணவு நான் எடுத்துச் சென்றேன். எங்கள் வீட்டில் இருந்து கல்லூரி கிட்டத்தட்ட 7 k.m. "TVS CHAMP" பை எடுத்துக் கொண்டு, உணவுப் பையை மாட்டிக் கொண்டு புறப்பட்டேன். 

கல்லூரிக்கு செல்லும் வழியில் இருக்கும் ஒரு  பேருந்து நிறுத்தம் "அரச மரம் நிறுத்தம்", அங்கு பேருந்துக்காக காத்திருந்தார் "சங்கர்".  நண்பன் காத்திருப்பது தாளாமல் அவரையும் உடன் அழைத்துச் சென்றேன். கல்லூரியில் சங்கரை இறக்கி விட்டு விட்டு, மதிய உணவை என் தந்தையிடம் கொடுத்து விட்டு திரும்பி கல்லூரியை விட்டு வெளியே செல்லும் வழியில் மீண்டும் சங்கர். என்ன என்று விசாரிக்க, கல்லூரியில் இந்த நேரம் மற்ற நண்பர்கள் யாரும் இல்லை அதனால் தன்னை மீண்டும் அதே "அசர மரம்" நிறுத்தத்தில் விட்டு விடும் படி கேட்டுக் கொண்டார். சரி என்று சங்கரும் நானும் அரசமரம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தோம். 

புறப்பட்ட சிறிது நேரத்தில் சங்கர் தான் அந்த வண்டியை ஓட்ட வேண்டும் என்று வற்புறுத்தியதாலும்,தனக்கு நன்றாக வாகனத்தை செலுத்த தெரியும் என்று உறுதியாக கூறியதாலும், "TVS-CHAMP" சங்கரின் வசம் கை மாறியது. முதலில் தடு மாறினாலும் பின்பு சுதாரித்துக் கொண்டு கவனமாக மிதமான வேகத்தில் வாகனத்தை செலுத்திய சங்கர்,தேசிய நெடுஞ்சாலையை கடந்தவுடன் வண்டியின் வேகத்தை உச்சத்துக்கு உயர்த்தினார்.சில நொடிகளில் வாகனம் கட்டுப்பாடு இழந்து தடுமாறத் துவங்கியது. பதற்றத்தில் செய்வதறியாது இருந்த சங்கர், சாலையை கடக்க முயன்ற ஒருவர் மீது வண்டியை மோத விட்டு விட்டார். அடிபட்டவர் அங்கேயே விழ, வண்டி சரிந்த நிலையில் சாலையில் உரசிக் கொண்டே சிறிது தூரம் சென்று நின்றது. அதையும் தாண்டி நானும் சங்கரும் விழுந்தோம்.

வண்டிக்கோ, எங்கள் இருவருக்கோ எந்த பெரிய பாதிப்பும் இல்லை. அங்கங்கே சிறிய சிராய்ப்பு காயங்கள் தான். அந்தத் தருணத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அப்போது எனக்கு தெரிய வில்லை. அடிபட்டவரை அங்கேயே விட்டு விட்டு ஓடிவிடலாம் என்ற முடிவை எடுத்தோம்.          

 பின்பு வீட்டுக்கு சென்ற நான், யாரிடமும் இந்த விபத்து குறித்து எதுவும் சொல்லாமல், வண்டியை வீட்டில் வைத்து விட்டு பேருந்தில் கல்லூரிக்கு சென்று விட்டேன். ஆண்டு விழாவில் மனம் செல்லவில்லை.   மணி சரியாக இரவு 08:10 இருக்கும், என் தந்தை வந்தார். என்னை தேடி காவல் துறையினர் வந்திருப்பதாக கூறினார். என்ன நடந்தது என்று என்னிடம் கேட்டு தெரிந்து கொண்டார். 

மறுநாள் காலையில், காவல் நிலையம் சென்று விசாரித்து விட்டு வந்த என் தந்தை எங்களிடம் புது கதையை கூறினார்.

 "வண்டியை ஒட்டியது நான், பின்னால் உட்கார்ந்து வந்தது சங்கர். சங்கர் காயம் பட்டவர் அருகில் இருந்துள்ளார். காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த காவலர்களிடம், இந்த விபத்து குறித்த மேலே சொன்ன  அனைத்து தகவல்களையும், என்னுடைய முகவரி தெரியாததால் என்னுடைய தந்தை குறித்தும், கல்லூரி குறித்தும் அனைத்து தகவலையும் கூறியது சங்கர்". இதனால் விபத்தின் முழுப் புகாரும் என் மேல் அதனால் என்னை (கைது செய்து) அழைத்துச் சென்று விசாரிக்கவே நேற்று இரவு காவல் துறையினர் நேற்று கல்லூரிக்கு வந்துள்ளனர்.   

"குறிப்பு: TVS-CHAMP என்னிடம் கொடுத்த போது என் அப்பா கூறிய அறிவுரைகளில் முக்கியமான ஒன்று யாருக்கும் வண்டியை இரவல் கொடுக்காதே, நீயும் யாரிடமும் இரவல் வாங்காதே". 

அதன் பின்பு நடந்த சம்பவங்கள்... 

காவல் நிலையம்
       அன்று மாலை நான், எனது தந்தை, மாமா, ஒரு அரசியல் பிரமுகர்  நால்வரும்  காவல் நிலையம் சென்று காவலர்களை கவனிக்க வேண்டி இருந்தது.  ஆயிரங்களை வாங்கிக் கொண்டு சம்பிரதாயங்களை முடித்து எங்களை வீட்டுக்கு அனுப்பினார். 

என்னிடம் ஓட்டுனர் உரிமம் கிடையாது...

        சிக்கல்கள் இதோடு முடியவில்லை. மீண்டும் மண்டல போக்குவரத்து அதிகாரியை சந்திக்க வேண்டி வந்தது. அவரும் ஆயிரங்களை வாங்கிக் கொண்டு சில அறிவுரைகளை வழங்கி,முக்கியமான காகிதங்களில் கையெழுத்திட்டு என்னை திரும்ப அனுப்பினார்.

இந்த விபத்து சம்பவம் நடந்ததி லிருந்து சங்கர் என்னிடம் பேசுவது கிடையாது. காவல் நிலையம் செல்லவும், போக்குவரத்து அதிகாரியை சந்திக்கவும் நான் இரண்டு நாட்கள் விடுப்பு எடுக்க வேண்டி வந்தது. அப்போது கூட என்ன நடந்தது என்று விசாரிக்ககூட சங்கருக்கு மனமில்லை.

அடிபட்டவருக்கு என்ன ஆயிற்று?

          இதற்கிடையில் அடிபடவருக்கு என்ன ஆயிற்று என்று பார்க்க நானும் என் தந்தையும் சென்றிருந்தோம். அவருக்கு ஏற்க்கனவே ஒரு விபத்தில் கால் முறிந்து, இரண்டு மாதங்கள் மருத்துவ விடுப்பு முடிந்து ஓரவுளவு குணமாகி அன்று தான் பணிக்கு திரும்பியுள்ளார்.சங்கரின் தயவாள் மீண்டும் மருத்துவமனைக்கே திரும்பி விட்டார். மீண்டும் முறிந்தது அதே கால் எழும்பு.

வாகன காப்பீடு அப்போது தான் முடிந்துள்ளது

  என்னுடைய வாகனத்திர்க்கான காப்பீடு சமீபத்தில்தான் நிறைவடைந்துள்ளது. இதை நாங்கள் யாரும் கவனிக்க வில்லை. அதனால் விபத்தில் அடிபட்டவருக்கு இழப்பீடு என் அப்பாவின் பணத்தில் தான் கொடுக்க வேண்டும்.     

இந்த பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் என் தந்தை தத்தளிக்க ஆரம்பித்து விட்டார். அந்த கோபம் என்மேல் திரும்பியது....

பணத்திற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, நான் அதி புத்திசாலியாக  யோசித்து சங்கரிடம் சென்று பேசினேன். இதுவரை இவ்வளவு செலவு ஆகியுள்ளது. எனக்கு அத்தனை பணமும் வேண்டாம் அதில் பாதி கொடுத்தால் கூட போதும், அதனால் உன் தந்தையிடம் இது பற்றி பேசுவாயா? என்று கேட்டதற்கு சற்றும் யோசிக்காமல் "முடியாது" என்று கூறி விட்டு உடனே அவ்விடம் விட்டு நகர்ந்து விட்டார் சங்கர்.
இந்த செய்தி என் அம்மாவின் வாயிலாக என் அப்பாவை அடைய, என் அப்பா நேரடியாக சங்கரின் அப்பாவை சந்திக்க சென்று விட்டார். சங்கரின் அப்பாவும் சரியான பதில் எதுவும் கூறவில்லை ஆனால் சங்கரின் மாமா பாதி பணம் தருவதாக கூறினார்.   

அடுத்து நீதி மன்றம்.

              இதுதான் கடைசி என்று நீதி மன்றத்தையும் பார்த்து விட்டேன். என்னை  நீதி மன்றத்துக்கு வெளியே காத்திருக்கச் சொல்லிவிட்டு, என்னுடன் வந்த  காவலர் வேறொரு வழக்கை பார்க்கச் சென்று விட்டார். அதற்கிடையில் மூன்று முறை என் பெயர் அழைக்கப் பட்டுள்ளது. எனக்கு அவர்கள் அழைத்தது கேட்கவில்லை. சிறிது நேரம் கழித்து வந்த காவலர், "உன்னை அழைத்தார்களா" என்று கேட்க, தெரியாது என்றேன், பதறிக்கொண்டு உள்ளே சென்ற காவலர், அங்கே இருந்த நீதிமன்ற பணியாளரிடம் எதோ சொல்லி மீண்டும் என்னை அழைத்தனர். நாங்கள் உள்ளே சென்ற உடன். நீதிபதி  காவலரிடம் இவ்வாறு கேட்டார். "இவன இங்க திரிய விட்டிட்டு நீ எங்கையா ஊர் மேய போயிருந்த"? (நீதிபதியின் உயர்ந்த உள்ளமும், சொல்வன்மையும் என்னை மிகவும் கவர்ந்தது, இதனால் நீதிபதிகளின் மேல் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் மேலும் பல மடங்காக கூடியது )   

அதற்க்கு எதோ ஒரு பதிலை சொல்லிக் கொண்டிருந்தார் காவலர். அதை சற்றும் கவனிக்காமல் குனிந்து கொண்டார் நீதிபதி.

அடுத்து, விபத்தும் அதன் பின்னணியும் வாசிக்கப்பட்டது. அது எனக்கு,  தமிழ் மிகவும் நுணுக்கமான மொழி என்பதை  உணர்த்தியது. "அதிவேகமாக, கவனக் குறைவாக, ஒலிப்பானை ஒலிக்காமல்.." என்று  எதுகை மோனைகளுடன் சம்பவங்கள் எனக்கு எதிராக புனையப்பட்டிருந்தது.

அனைத்திற்கும் "ஆம்" என்ற பதிலை கூறிவிட்டு, நான் ஒப்புக் கொண்ட தண்டனைக்கு அபராதம் கட்டிவிட்டு, நீதி மன்ற பணியாளர்களுக்கும் அன்பளிப்பு வழங்கிவிட்டு வீட்டுக்கு வந்தேன். 


நான் செய்த தவறுகள்

1. ஓட்டுனர் உரிமம் மற்றும் காப்பீடு இல்லாமல் வாகனத்தை ஓட்டியது

2. விபத்து நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது.

3. அனைத்திற்க்கும் மேலாக தந்தையின் சொல்லை மீறியது.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
        இடுக்கண் களைவதாம் நட்பு. (788) 

Wednesday, September 12, 2012

முதல் நாள் இன்று

கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு 
மாடல்ல மற்றை யவை. (400)
(உலகில் அழிவற்ற ஒரே செல்வம் கல்வி மட்டும் தான்) 


மூன்றாவது அகவையை எட்டும் தருணத்தில், கசடறக் கற்று பின்பு அதன் வழி நடக்க, ஆர்யாவின் முதல் முயற்சி இன்று பள்ளியில் (10-Sep-2012).

நாட்கள் எவ்வளவு வேகமாக பயணிக்கின்றன என்பது அவ்வப்போது நினைவுக்கு வருவது இது போன்ற நிகழ்வுகளால் தான்.

மலரும் நினைவு...


1985 ஜூன் மாதம், தேதி நினைவில் இல்லை...

வழக்கம் போல 09:00 மணிக்கு தொடங்கும் அலுவலகத்திற்கு, வெளி வேலை முடித்து விட்டு 08:10 மணிக்கு ஒரே படப்பிடிப்போடு (பட படப்போடு) வீட்டுக்கு வரும் என் தந்தை 20 நிமிடத்துக்குள் குளித்து, சாப்பிட்டு, உடைகளை மாற்றி, அம்மாவுடன் ஒரு சின்ன பெரிய சண்டையும் போட்டுவிட்டு 08:30 மணிக்கு அலுவலகத்திற்கு கிளம்பி விடுவார். அம்மாவிடம் பாதியில் விட்ட சண்டையை மிதி வண்டியிடம்  தொடர்வார். தன்னால் முடிந்த வரை மிதி மிதி என்று மிதித்து, வருகை பதிவேடை மூடி உள்ளே வைக்க வரும் வேலையாளை ஒரு நொடி முந்தி கையெழுத்தை பதித்து விடுவார். என்றைக்கு என் தந்தை இந்த ஒரு நொடியை தவற விடுவார் என காத்துக் கொண்டிருந்தார் அந்த வேலையாள்.

இவ்வளவு இறுக்கமான அட்டவணை இடம் கொடுக்காததால் அன்றைய தினம் என்னை பள்ளியில் சேர்க்க என் தந்தையால் வர இயல வில்லை. கிட்டத்தட்ட ஐந்து வருடம் அம்மாவின் காலடி மட்டுமே உலகம் என்று இருந்த என்னை தாத்தா பாதுகாப்புடன் லாயல் மில் துவக்கப் பள்ளியின் தலை வாசலுக்கு இழுத்து வந்தார். அதுவரை உயிரைப் போல் எங்கிருக்கிறது என்று சொல்ல முடியாதபடி மனதுக்குள் இருந்த பயம், வாசலை அடைந்தவுடன் இரத்தம் போல் உடல் முழுவதும் வியாபித்து தாறு மாறாக ஓடியது. வாந்தி, மயக்கம் என அனைத்து உடல் உபாதைகளும் ஒரு நொடியில் என் உடலில் வாடகை தராமல் குடியேறின.

தாத்தா விடம் அவசரமாக "இரண்டு" க்கு போக வேண்டும் என்று கூறியும், காலையிலேயே மூன்று முறை சென்று விட்டதால் இன்றைய ஒதுக்கீடு முடிந்து விட்டது என்று கூறி என் கோரிக்கையை நிராகரித்து விட்டார். என்னைப் போல் அப்பாவி சிறுவர்கள் பலர், வழுக்கட்டாயமாக தங்களை  கடத்தி வந்த பெற்றோர்களுடன்  வரிசையில் அழுது கொண்டிருந்தார்கள். அவர்களோடு நானும், என் கல்விக் கண்ணை திறந்து வைக்க வந்ததாக எண்ணிக் கொண்ட தாத்தாவும். வழக்கமாக வரிசை மெல்லவே நகர்ந்தது. ஒவ்வொரு குழந்தையும் சேர்க்கை முடிந்தது பள்ளிக்கு உள்ள சென்றவுடன், அவர்களை அழைத்து வந்த பெற்றோர் முகத்தில் கடமை முடிந்த வெற்றிக் களிப்பை கண் கூடாகக் காண முடிந்தது. இப்போது என் தாத்தாவின் முறை.

என்னுடைய பிறந்த நாளை கேட்ட அந்த உயரமான ஆசிரியருக்கு, 1980 ம் வருடம் நவம்பரில் ஒரு தேதியை சொன்னார் தாத்தா. இன்னும் 5 வயது முடியாததால்  இந்த வருடம் பள்ளியில் சேர்க்க முடியாது என்று கூறிவிட்டார்  ஆசிரியர். என் மீது கடவுளுக்கு இவ்வளவு அன்பா? வேண்டுதல் உடனே நிறைவேறி விட்டது, உடனே வீட்டுக்கு போகலாம் என்று எண்ணிய என் எண்ணத்தில் அடுத்த கணமே Paul Tibbets ஆக மாறி என் தாத்தா "Little Boy" யை வீசினார். 

என் பிறந்த தேதி எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி "May" மாதத்திற்கு மாற்றப் பட்டு, என் பள்ளி வாழ்க்கையின் முதல் நாள் துவங்கியது. அன்றைய தினம் எந்த விதமான அசம்பாவிதமும் நிகழாமல் சற்று அமைதியாகவே கழிந்தது. இரண்டு, மூன்று, நான்கு என நாட்கள் மட்டும் நகர்ந்தன. பள்ளியின் மீது எந்த விதமான ஈர்ப்பும் வரவில்லை. Cuticles நிறைந்த தாமரை இலையும், நீரும் போலவே உறவற்று இருந்தோம். 

அப்போது தான் அந்த ஆபத் பாந்தவன், அநாத ரட்சகன், ஏழைகளின் விடிவெள்ளி என் உயிர் தோழன் "தங்கராஜ்"ன் "நட்பு" எனும் வரம் கிடைத்தது. தங்கராஜ் எங்கள் முதல் வகுப்பில் மூத்த குடிமகன். எதையும் அதன் ஆணிவேர் வரை சென்று பார்க்கும் ஆர்வம் உள்ளவர். முதல் ஆண்டில் தங்கராஜின் தரிசனம் போதுமான அளவு ஆசிரியர்களுக்கு கிடைக்கததால், அவர்களின் வேண்டு கோளுக்கு இணங்கி இரண்டாம் ஆண்டும் அதே முதலாம் வகுப்பில் தனது சேவையை தொடர்ந்தார் தங்கராஜ்.   

Thomas Babington Macaulay ன் கல்வி முறையில் உள்ள குறைகளை கண்டு மிகவும் வருந்தினார் தங்கராஜ், அதன் காரணமாக பள்ளியை துறந்து இயற்கையிடம் பாடம் கற்க ஆயத்தமானார். அடியேனின் உள்ளக் கிடக்கையை அறிந்து, அவரின் அறிவுத் தாகம் தீர்க்கும் புனிதப் பயணத்தில் என்னையும் சேர்த்துக் கொண்டார்.

நான் முதல் வகுப்பு படித்த அதே பள்ளியில் தான் என்னுடைய மூத்த சகோதரி இரண்டாம் வகுப்பில் படித்தார். வகுப்பில் உள்ள நான்கு சுவர்களுக்குள்ளும், சில அச்சடித்த காகிதங்களுக்குள்ளும் தன்னுடைய உலகத்தை சுறுக்கிக் கொண்டவர். எங்களின் அறிவுத்தாகம் என் அக்காவுக்கு கிடையாது. இதுவே எங்களுக்கு பெரும் சங்கடத்தை உண்டாக்கியது. பல நேரங்களில் ஐந்தாம் படையாக மாறி எங்களின் உன்னத தேடுதலை பல முறை தடை செய்துள்ளார். அதன் காரணமாக காலை பள்ளி செல்லும் போது அக்காவுடன் செல்வேன். இடைவேளையில் சரியாக அக்கா இருக்குமிடம் சென்று அவரின் கவனத்தை கவர்ந்து விடுவேன். அதே போல் மதியம் உணவு இடை வேளையில் அக்காவுடன் சேர்ந்து வீட்டுக்கு சென்று விடுவேன். மாலை வீடு திரும்பும் போதும் அவருடன் இணைந்து கொள்வேன். இடைப்பட்ட அனைத்து தருணங்களிலும்

ஒவ்வொரு தெருவிலும் எத்தனை வீடுகள் இருக்கின்றன.

எவ்வளவு மக்கள் வசிக்கிறார்கள்.

எத்தனை வண்டிகள் ஓடுகின்றன.      

இது போன்ற உலகத்திற்கு தேவையான புள்ளி விவரக் கணக்கெடுத்து சமூக சேவை செய்வோம். எவ்வளவுதான் சரியாக திட்ட மிட்டாலும் சுறா மீனைப் போன்ற மோப்ப (4 km அப்பால் உள்ள இரையை உணரும் மோப்ப சக்தி சுறாவுக்கு உண்டு) சக்தி கொண்ட என் அக்காவிடம் இருந்து என்னால் தப்ப முடிய வில்லை. எங்களின் இரகசிய நிறுவனம் குறித்த செய்தி வீட்டின் தலைமை செயலகத்தை அடைந்தது.

மறுநாள் பள்ளிக்கு போகும் முன்பு அம்மா எச்சரிக்கை மணி அடித்தார். இனிமேல் ஒழுங்காக பள்ளிக்கு செல்ல வேண்டும், எப்போது வேண்டுமானாலும் என் தந்தை ஆய்வுக்கு வரலாம் என்று.

காற்றுக்கென்ன வேலி? என்று வழக்கம் போல நானும், எனது குரு தங்கராஜும் வீதி உலாவுக்கு கிளம்பினோம். அன்று பள்ளியின் அருகிலேயே இருந்த வீட்டில் திருமணம். புது மணத் தம்பதிகள் எண்களின் வருகைக்காக காத்திருந்தது போல் இருந்தது. உள்ளே சென்று திருமண விழாவை சிறப்பித்தோம். அவர்களை வாழ்த்த வயதில்லாததல் வணங்கி விட்டு வெளி ஏறினோம்.

நங்கள் அந்த திருமண வீட்டை விட்டு வெளியே வரவும், அங்கு என் அப்பா வரவும் சரியாக இருந்தது. நான் செய்வதறியாது விழித்தேன். தங்கராஜ் காலத்தை கடந்த ஞானி என்பதால் எதற்கும் சலனமில்லாமல்  நின்றார். என் அப்பாவின் கண்கள் காட்டிய குறிப்பை உணர்ந்து சைக்கிள் கேரியரில் அமர்ந்தேன். சில நொடிகளில் வீட்டை அடைத்தோம். எங்கள் இருவரையும் பார்த்த என் அம்மாவின் கண்கள் அப்போதே கலங்கின.

அப்பாவின் ஆணைப்படி, அம்மா பக்கத்து வீட்டிற்கு சென்று விட்டார். தூணோடு ஒட்டி நின்ற என் கைகள் கட்டப்பட்டு நிராயுத பாணியாக நின்றேன். எங்கோ இருந்த நைலான் கயிறு அப்பாவின் கையில் தஞ்ச மடைந்தது.

என் முதுகை பலமுறை நைலான் கயிறு முத்த மிட்டது, இறுதியில் சோர்வடைந்த கயிறு தரையில் விழுந்தது. கயிறு பூசை முடிந்தவுடன் மீண்டும் குளிப்பாட்டப்பட்டு சைக்கிள் கேரியரில் ஏற்றப்பட்டேன். நீண்ட நாளைக்குப் பிறகு மீண்டும் வகுப்பாசிரியரை சந்தித்தேன்.

அன்றிலிருந்து இன்று வரை 100% வருகைப் பதிவுதான்...


இன்று முதல் நாள் வகுப்பிற்கு ஆர்வமுடன் சென்ற என் மகனை காணும் போது என்னுள் பல கேள்விகள்...








Monday, August 20, 2012

கருப்பு பெட்டி - பாகம் 2

பாகம் 1 - தொடர்ச்சி


கிருஷ்ணனை இனம் புரியாத கலவரம் ஆட்கொண்டது

"சீ சீ  அதெல்லாம் ஒன்னும் இல்ல, சுத்த மூட நம்பிக்கை" என்று சமாதானம் செய்துகொண்டு வேலையை தொடர்ந்தவர், சிறிது நேரத்திலேயே தன்னை அறியாமல் நிமிர்ந்து பார்த்தார். பார்த்தவுடன் உடலின் அனைத்து மயிர்க் கால்களும் சிலிர்த்து நின்றன...




ஒரு நிலையில்லாத பெண்ணைப் போன்ற உருவம் வெளியில் இருந்து வாசலின் வழியாக உள்நோக்கிச் சென்றது. அடுத்த சில நொடிகளில் கிருஷ்ணன் அமர்ந்திருந்த வராண்டாவில் எரிந்து கொண்டிருந்த விளக்கு அணைந்தது. இந்த அதிர்ச்சியில் தன்னை அறியாமல் வந்த கூச்சலை உணர்ந்த கிருஷ்ணன் உடனே வீட்டைப் பூட்டி விட்டு மிதிவண்டியை கிளப்பினார்.

சிறிது நேரம் சந்தையில் சுற்றி விட்டு, திரைஅரங்க வாசலில் மனைவிக்கு காத்திருந்தார். படம் முடிந்து  வெளியே வரும் மனைவியை பார்த்து ஓரளவு அறுதல் அடைந்தார். மகன் ஏற்க்கனவே தூங்கி இருந்தான். ஆறு கால்களும் வீட்டை நோக்கி நடக்கத் துவங்கின. ராணியின் தங்கை, பார்த்த படத்தை விமர்சித்துக் கொண்டிருந்தார். சம்பிரதாயத்துக்கு மட்டும் படம் எப்படி இருந்தது என்பதை மனைவியிடம் கேட்டு விட்டு வந்த பதிலை வாங்கிக் கொண்டு தொடர்ந்து நடந்தனர். வீட்டில் நடந்தது பற்றி இப்போது சொல்லி அனைவரையும் பயமுறுத்த வேண்டாம் என முடிவு செய்தார் கிருஷ்ணன். இரவு உணவு உண்ட பின்பு அனைவரும் தூங்க கிருஷ்ணன் மட்டும் எதோ யோசனையில் மூழ்கி இருந்தார். பின்பு அவரும்.


விளக்கம்       


 மறுநாள் காலையில் வழக்கம் போல் கல்லூரிக்குச் சென்றாலும், வழக்கமாக பணியில் ஈடுபட அவரால் முடியவில்லை. இதைப் பற்றி யாரிடம் கேட்பது என்று தெரியாமல் குழம்பினார். தன் பயத்தையும் வெளியே கட்டிக்கொள்ள அவருக்கு விருப்பமில்லை. இறுதியில் தன் மரியாதைக்கும் நம்பிக்கைக்கும் உரிய இயற்பியல் பேராசிரியர் முனைவர்  ராமசாமியிடம் நடந்தவைகளை கூறினார். 

அனைத்தையும் பொறுமையாக கேட்ட பேராசிரியர்,

இந்த உலகத்ல உயிருள்ள ஒவ்வொரு ஜீவராசிக்கும் "உயிர் மின்சார" சுழற்சி இருக்கு, அது 60 Hz ல இருக்கும். அந்த மின்சாரம் தான் இதயம், மூளை, நரம்பு மண்டலம் என முக்கியமான உறுப்புகள் வேலை செய்ய உதவுது. இது கூட சம்மந்தம் ஆன ஆற்றல் விதி ஒன்னு இருக்கு. அது என்னன்னா "ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஆனா ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்ற முடியும்". இந்த மனித வாழ்வு அல்லது உயிர்னு  நாம சொல்றதுல மூன்றில் இரண்டு பங்கு சிந்தனையிலும் ஆன்மாவிலும் இருக்கு, ஒரு பங்கு மட்டும் தான் இந்த உடம்பு. இரண்டு பங்கு உயிர் கண்ணுக்கு தெரியாத ஆற்றலா இருக்குதுன்னா, நாம இறந்ததுக்கு அப்புறம் அந்த ஆற்றல் எங்க போகுது? science படி அது அழிஞ்சி போக வாய்ப்பு இல்ல.

அதனால ஒரு மனிதர் இறந்த பிறகு இந்த உயிர் சக்தி உடம்ப விட்டு வெளிய போயி சுற்று சூழல் கூட கலந்ரும். அப்புறம் அது செயல் பாடற்ற நிலை ஆற்றலா மாறிடும். இல்லேன்னா ஒரு பொருள் அல்லது இடம்னு எதுகூடவாவது சக பிணைப்ப உண்டாக்கிக்கும். அப்படியும் இல்லேன்னா electron பற்றாக்குறை உள்ள எது கூடவாவது சேர்ந்துக்கும். சரி அப்படி அது அமைதியாகாம unstable லா அலைஞ்சா என்னாகும்னா... 

  1. ஒரு வகையான மின்காந்த அலைகள் உண்டாகும். அது வீட்ல இருக்குற electric devices ச affect பண்ணும்.

 2. வெப்பநிலை மாற்றம் இருக்கும். சாதாரணமா 10 இருந்து 30 டிகிரி பாரன்ஹீட் வரைக்கும் temperature குறையும் அல்லது கூடும்.   

 3. இது ஒளி அலைகளையும் பாதிக்கும் அதனால சில சமயத்ல திடீர்னு ஏதோ  உருவம் எல்லாம் தெரியும்.

புற உலகத்துல இந்த உயிர் மின்சாரத்தின் ஆற்றல்னு பாத்ததா, நீங்க lab ல பாத்திருப்பீங்களே! ஒரு சட்டக் காந்தம் அவ்வளவுதான். அப்படித்தான்  physics சொல்லுது. இது இல்லாம "பேய்" எல்லாம் சுத்த பொய். 

 England ல இருந்த ஒரு மனோதத்துவ வல்லுநர் magnetic field பத்தி ஆராய்ச்சி நடத்தி, பேய், பிசாசு இல்லைனு prove பண்ணி இருக்கார்.   அதை மக்களுக்கு காட்டுறதுக்காக பேய், பிசாசு இருந்துச்சின்னு  சொன்ன  800 வருட பழங்காலக் கட்டடத்ல பேயினால் பாதிக்கப் பட்டவங்கள வச்சி ஆராய்ச்சி பண்ணார். அதுல பேய் மற்றும் பிசாசு பிடிச்சவங்க, அவங்களுக்கு  பேய் பிடிச்சப்போ திடீர் சத்தம் கேட்டதாவும், இன்னும் ஒரு சிலர் குழந்தை அழுவதுபோல சத்தம் கேட்ட தாவும், வேறு சிலர் திடீரெனத் தன்னை யாரோ தொட்டுவிட்டு மறைஞ்சி போச்சின்னும் சொன்னாங்க.  

பேய், பிசாசு இருக்குன்னு சொன்ன அந்த இடத்துல இருந்து வழக்கத்திற்கு மாறான காந்த புலம் வெளிப்பட்டிருக்கலாம். மூளையில சில நரம்புகள் பாதிக்கப்பட்டவங்க அல்லது அதிகமாக உணர்ச்சி வசப்படுறவங்க இந்த இடத்துக்கு போகும் போது அந்த அதீத காந்தபுலம் அவங்க சொல்ற மாதிரி பிரம்மைகளை  ஏற்படுத்தி இருக்கலாம், அதனால பேயோ, பிசாசோ அதைச் செய்யலனு விஞ்ஞானக் கருவிய வச்சி அதை நிரூபிச்சார்.  

அதனால என்னோட சொந்த அபிப்ராயம், பேய் பிசாசு இது எல்லாம் நம்ம மனசுக்குள்ள உள்ள பயம் கலந்த ஒரு கற்பனை. 

ஆனா நீங்க முற்ப்போக்கு வாதியாச்சே கிருஷ்ணன்! இதை எல்லாமா நம்புவீங்க?

       இல்ல sir நான் நம்பல, இருந்தாலும் விஷயம் தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு தெளிவு படுத்திகிட்டா கொஞ்சம் நிம்மதி அதான்...

இருவரும் சிரித்துக் கொண்டனர்...     

உங்க wife கிட்ட இதப்பத்தி எதாவது பேசுனீங்களா?

      இல்ல sir, என் wife க்கு இதுல எல்லாம் நெறைய நம்பிக்கை இருக்கு. அதனால தேவை இல்லாம பயமுறுத்த வேண்டா மேன்னு யாரு கிட்டயும் சொல்லல.
  
நல்லது, நான் அடுத்த வாரம் ஒரு presentation காக வெளியூர் போறேன். இது பத்தி உங்களுக்கு வேற எதாவது தெரியனும்னா நான் ஊருக்கு போயிட்டு வந்த பிறகு பேசலாம்.

பேராசிரியரின் பதில் போதுமான நம்பிக்கை அளித்ததால், நடந்தவைகளை அன்றே முற்றிலும் மறந்து இயல்பான வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அடுத்த சில நாட்களாக எந்த விதமான சம்பவமும் நிகழாததால் கிருஷ்ணன் முற்றிலுமாக அமானுட நிகழ்வுகளை மறந்தார்.

மகன் நான்கு கால்களால் நடக்க (தவழ) ஆரம்பித்தான், கிருஷ்ணன் மற்றும் ராணியிக்கு அவர்களுடைய மொத்த மகிழ்ச்சியும் அழகான குட்டி உருவத்தில் அங்கும் இங்கும் திரிவதை கண்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்தனர்.

முன்பு போல் இல்லாமல் இப்போது மகன் அமுதன் இரவில் அடிக்கடி  முழிப்பதோ, அழுவதோ இல்லை அதனால் கிருஷ்ணன் இரவில் தடையில்லாமல் தூங்க முடிந்தது.

ராணியின் தந்தை ஜாதகங்களில் நிறைய நம்பிக்கை உடையவர். அமுதன் பிறந்த போது, பிறந்த நேரத்தை வைத்து கணித்து சில எழுத்துக்களை கூறி, அந்த எழுத்துக்கள் எதாவது ஒன்றில் குழந்தையின் பெயர் தொடங்க வேண்டும் என்றார். திருமணத்திற்கு முன்பே குழந்தையின் பெயரை முடிவு செய்துவிட்ட கிருஷ்ணன் அதை ஏற்க்கவில்லை.

"அமுதன்" என்ற பெயருக்கான காரணத்தை இவ்வாறாக ராணியிடம் விளக்கினார் கிருஷ்ணன்.

  1.  முதல் எழுத்து "அ" (A) வில் தொடங்க வேண்டும். அப்போதுதான் வகுப்பறையிலும், தேர்வரையிலும் முதலில் அமர்வான். ஆசிரியரின் முதல் கவனம் இவன் மேல் இருக்கும். 

  2. பெயரின் மொத்த எழுத்துக்கள் நான்குக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


 மீண்டும்... 


அன்று இரவு ஏதோ சத்தம் கேட்டு கிருஷ்ணன் விழித்துக் கொண்டார். மணி சரியாகத் தெரியவில்லை. மின் மினியாய் ஒளிர்ந்த இரவு விளக்கில் சுற்றிலும் பார்த்தார். இருவருக்கும் இடையில் படுத்திருந்த அமுதனை காணவில்லை. விளக்குக்கு உயிர் கொடுத்து மனைவியை எழுப்ப விரும்பாததால் அந்த சிறு வெளிச்சத்திலேயே விழிகளை அகலமாக்கி உற்று நோக்கினார். அவர் கேட்ட அந்த ஒலியின் மூலம் சமையல் அறை கதவின் அருகே அமர்ந்திருந்த அந்த சிறு உருவம், அமுதன். அழுகையா அல்லது சிரிப்பா என்று சொல்ல முடியாத சிறு சப்தம். பரண் மேல் எதையோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.

அருகில் செல்லச் செல்ல அமுதனின் முகம் கொஞ்சம் தெளிவாக தெரிந்தது. அதுவரை சிரிப்பதுபோல சப்தம் செய்தவன் கிருஷ்ணனை கண்டவுடன் சட்டென்று மௌனமானான். பின்பு மௌனம் அழுகையானது. அறையின் விளக்கு உயிர் கொண்டு எழுந்தது ராணியால்.

ஏங்க அழறான்?
 
          தெரியல ராணி, திடீர்னு முழிச்சி பார்த்த இங்க வந்து உட்கார்ந்திருக்கான். சிரிச்சிகிட்டுதான் இருந்தான்.

எங்க பாட்டி சொல்லிருக்காங்க, குழந்தைங்க கண்ணுக்கு கடவுள் தெரிவாராம், கடவுள பார்த்து குழந்தைங்க சிரிக்குமாம்!
   
          ........

கிருஷ்ணன், ராணியின் நம்பிக்கையை கலைக்காமல் தனக்குத் தானே மனதுக்குள் மட்டும் கூறிக்கொண்டார் "கடவுளா இருந்தா சரி".

அமுதனை வாரி அனைத்து தோளில் சாய்த்து தூங்கச் சொல்லி  கட்டாயப்படுத்தினார் ராணி.  அன்று மூவருக்கும் சிவராத்திரி.


இரண்டு வாரங்கள் இனிமையாக சென்ற பிறகு. ஒரு ஞாயிறு நண்பகல் மதிய உணவுக்காக கிருஷ்ணனும் ராணியும் அமர்ந்தனர். எது முதலில் வந்தது என்று தெரியாவிட்டாலும் எதை முதலில் சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்த ராணி, முட்டையில் கருவாகி குழம்பில் கறியாகிக் காத்திருந்த அனைத்தையும் கிருஷ்ணனுக்கு இறைத்து, தன் சமையலின் சுவையை கணவர் எவ்வாறு ருசிக்கிறார் என்று அறிய காத்திருந்தார். 

இந்தக் கோழி திரி சங்கின் மறுபிறவியா?  தெரிய வில்லை, கிருஷ்ணனின் தொண்டையை தாண்ட மறுத்தது, அங்கேயே சிக்கிக் கொண்டது. இவ்வளவு பார்த்து பரிமாறிய ராணி தண்ணீரை மறந்தார். தண்ணீரை மறப்பது அவருக்கு புதிதல்ல. கிருஷ்ணனிடம்   வரம் வாங்கும் முன்பு சமையல் அறை நோக்கி ஓடினார் தண்ணீரைத் தேடி. கிருஷ்ணனின் விக்கல் எச்சரிக்கை மணியாக ஒலித்தது.  அதுவரை அமைதியாக தொட்டிலில்  தூங்கிக் கொண்டிருந்த அமுதன் தொட்டிலை விட்டு இறங்கும் முயற்சியில் வெற்றி வாய்ப்பை இழந்து கீழே விழுந்து மூச்சு நின்று போகும் அளவுக்கு கதறினான். 

அமுதனின் அழுகுரல் கேட்டு, டம்ளரின் கால் பகுதி  நிரம்பிய  நீரைத் தூக்கிக் கொண்டு அமுதனிடம் ஓடினார் ராணி அவனை தூக்க. அவர் சமையலறையை விட்டு வெளியேறவும், பரண் மேலிருந்த அண்டா கீழே விழவும் சரியாக இருந்தது. சப்தம் கேட்டு விக்கலுடன் வந்த கிருஷ்ணன் கையில் தஞ்சம் அடைந்தது டம்ளர். சில நொடிகளாக வெளியேற துடித்துக் கொண்டிருந்த உயிருக்கு நீரால் அணைபோட்டார் கிருஷ்ணன். அருந்திய கால் டம்ளர் நீர் வற்றும் அளவுக்கு வரங்களை வாரி வழங்கினார் ராணிக்கு.

சோறு வைக்கிறதுக்கு முன்னால தண்ணிய வைன்னு உனக்கு எத்தன தடவ சொல்லணும் அறிவே வராதா? 

துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டதால் தற்காலிக ஊமையானார் ராணி. விழிகள் மட்டும் கங்கையை உற்பத்தி செய்து கொண்டிருந்தன. சமயலறையின் உள்ளே சென்று பார்த்த கிருஷ்ணன், மேலே உள்ள பலகையில் இருந்த "அண்டா" எவ்வாறு இறக்குமதியானது என்று புரியாமல் விழித்தார். சரியான சமையத்தில் ராணி வெளியே போயிருக்கா விட்டால்?  ஒருவேளை ஒத்த நிகழ்வாக இருக்கலாம் என்று தேத்திக்கொண்டு வெளியே வந்த கிருஷ்ணன் இரண்டு குழந்தைகள் அழுது கொண்டிருக்க முதல் குழந்தையை சமாதானம் செய்தார்.

இன்றைய நிகழ்வு கிருஷ்ணனுக்கு பெரும் சங்கடத்தை உண்டாக்கியது. எந்த சலனமும் இல்லாமல் ராணி உறங்கி விட்டார், அமுதனும். சிறுது நேரம் சென்ற பிறகு ஏதோ முனுமுனுப்பு சப்தம் கிருஷ்ணனின் தூக்கத்தை  விரட்டியது. மூச்சுவிட முடியாமல் யாரோ சங்கடப்படுவது போன்ற சப்தம். ராணிக்கு சுவாசக் கோளாறு உள்ளது. ஒருவேளை ராணியாக இருக்கலாமோ என்று ராணியை எழுப்பினார்.

திடுக்கிட்டு எழுந்த ராணி, பயத்தையும், பரபரப்பையும் கண்ணில் காட்டினார்.

  
 என்னாச்சு ராணி? எதுவும் பிரச்சனையா?

        என் கழுத்த, என் கழுத்த 

உன் கழுத்த, என்னாச்சி சொல்லு?

        என் கழுத்த யாரோ பிடிச்சி நெரிக்கிற மாதிரி இருந்ததுங்க.

கனவுலையா?
         
         இல்லங்க, நிஜமாத்தான், என்னால மூச்சு விட முடியல, கத்தலாம்னா அதுக்கும் முடியல. நீங்க என்ன எழுப்பின உடனே போயிரிச்சி. 

நீ எதையோ நினைச்சி பயந்திருக்க, அதனால தான் இந்தமாதிரி கனவெல்லாம் வருது, தண்ணிய குடிச்சிட்டு தூங்கு. எல்லாம் சரியாப் போகும் என்று கூறிவிட்டு விளக்கை அணைக்கச் சென்ற கிருஷ்ணனிடம்.

          light ட off பண்ணாதீங்க, எனக்கு பயமா இருக்கு.

என்ன பயம், நான் தான் இருக்கேன்ல, சும்மா எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டு இருக்காத. கண்ண மூடி தூங்கு.

         தயவு செஞ்சி  light ட off பண்ணாதீங்க...

ராணியை பார்க்கவே கிருஷ்ணனுக்கு பாவமாக இருந்தது. 

காலையில் மூவரும் வெகுநேரம் கழித்தே விழித்தனர். இன்று அலுவலகம் செல்ல வேண்டாம் எனும் ராணியின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு அலுவலகத்திற்கு விடுப்பு விண்ணப்பத்தை அனுப்பினார் கிருஷ்ணன்.

       வேற வீட்டுக்கு மாறி போயிடலாங்க, நேத்துல இருந்து எனக்கு ஒவ்வொரு நிமிசமும் பயம்ம்ம்மா இருக்கு.

  வீடு மாத்துறது என்ன அவ்வளவு சாதரணமா?

        இடம் மாறினா, மனம் மாறும்னு எங்க பாட்டி சொல்லிருக்காங்க..

  ........
       

சிறிது நேர வாக்கு வாதத்திற்குப் பிறகு வேறு வழியில்லாமல் சம்மதித்தார் கிருஷ்ணன். அதிர்ஷ்ட வசமாக அடுத்த தெருவிலேயே ஒரு வீடு காலியாக இருந்தது. இப்போது இருக்கும் வீட்டின் உரிமையாளர் முன்பணத்தில் இருந்து இரண்டு மாத வாடகையை கழித்துக் கொண்டுதான் மீதியை கொடுத்தார். நண்பரிடம் கடன் வாங்கி புது வீட்டிற்கு முன்பணம் கொடுத்து குடிபெயர்ந்தனர்.

புது வீட்டிற்கு மாறியது  ராணிக்கு மன தைரியத்தை தந்தது.  சில நாட்களிலேயே இயல்பு வாழ்க்கைக்கு இருவரும் திரும்பினர். இந்த வீடு குளத்துக்கு அருகில் இருந்தது. கொசுத் தொல்லையும் அவ்வளவாக இல்லாதது ஆச்சர்யமாக இருந்தது.


ஒரு மாதத்திற்குப் பின்... 

அன்று இரவு இருவரும் விரைவாகவே நித்திரையில் ஆழ்ந்தனர். சிறிது நேரம் அமுதன் மட்டும் அவனுக்கு மட்டும் புரியும் மொழியில் ஏதோ பேசிவிட்டு உறங்கி விட்டான். மணி சரியாக தெரியவில்லை, ஆனால் நள்ளிரவு. கதவு திறக்கும் சப்தம் கேட்டு முழித்தார் கிருஷ்ணன். யாரோ செல்வது தெரிந்தது. அருகில் ராணி, குழந்தை இருவரும் இல்லை. உடனே எழுந்து அவர்களை பின் தொடர்ந்தார். நடந்து சென்றவர்கள் ஓடத் தொடங்கினர். கிருஷ்ணனும் ஓடினார். அந்த உருவம் குளம் இருந்த திசை நோக்கி வேகமாக ஓடியது. தன்னால் முடிந்த அளவு வேகமாக ஓடி அந்த உருவத்தை பிடித்தார். அந்த உருவங்கள் ராணியும் குழந்தையும்.  வழுக்கட்டாயமாக இழுத்து வந்தார் ராணியை.

ராணியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு, குழந்தையோடு வீட்டுக்கு வெளியில் காவல் நின்றார். காலை 06:00 மணிக்கு அழகாபுரிக்கு தந்தி பறந்தது.

"உடனே புறப்பட்டு வரவும். நலம்,  பயப்படவேண்டாம்".

ராஜரத்தினமும் அவர் மனைவியும்  08:45 க்கு கிருஷ்ணன் வீட்டில், நடந்தவைகளை கூறினார் கிருஷ்ணன். 

மாப்ள இது ஏதோ பயந்த கோளறு மாதிரி தெரியுது, கருப்பசாமி கோவில்ல பூச பண்ணா எல்லாம் சரியாயிடும். இதுக்காக நீங்க வேற மாதிரி முடிவு...

இடைமறித்த கிருஷ்ணன், மாமா நீங்க கண்டதையும் நினைக்காதீங்க. பயந்த கோளாறா, அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது. ஒரு நல்ல டாக்டர் கிட்ட போனா சரியாயிடும். இந்த நிலைமைல ராணிய வீட்ல தனியா விட்டிட்டு நான் வேலைக்கு போக முடியாது. கொஞ்ச நாள் வேனா ராணி உங்க கூட ஊர்ல இருக்கட்டும். நான் டாக்டர் கிட்ட பேசிட்டு வந்து கூட்டிட்டுப் போறேன்.

அரை மனதுடன் மகளை அழைத்துக் கொண்டு ஊருக்கு சென்றார் ராஜரத்தினம்.

பேய் என்பதை மட்டும் நம்ப முடியாமல்,  மன நோய் மருத்துவரைத் தேடிக்கொண்டிருந்தார் கிருஷ்ணன். இதற்கிடையில்  அழகாபுரியில் ராணியின்  நிலையில் எந்த மாற்றமும் இல்லை. எம்மதமும் சம்மதம் என தேவாலயம், பள்ளிவாசல் என அனைத்தையும் முயன்றுவிட்டார் ராஜரத்தினம். 

அன்று வேலைக்குச் சென்று வீடு திரும்பும் வழியில், தேநீர் கடையின் முன்புறம் அந்த வித்தியாசமான புத்தகத்தைப் பார்த்தார் கிருஷ்ணன்.

"ஆவிகள் உலகம் "

விருப்பம் இல்லா விட்டாலும் அதை வாங்க ஏதோ ஒரு விசை அவரை செலுத்தியது. வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தார் சில பக்கங்களை புரட்டினார். பல அமானுட செய்திகள், எதுவும் நம்பும் படியாக இல்லை. நடுப்பக்கத்தில் இருந்த செய்தி, இதுவரை இந்த புத்தகத்தில் பார்த்ததிலேயே உச்சகட்ட கோமாளித்தனம். "ஆவிகளுடன் பேசலாம் -  மீடியம் ஆவி அனிதா".

மீடியம் என்ற வார்த்தையை அன்று தான் கேள்விப்படுகிறார் கிருஷ்ணன். அதற்க்கான விளக்கமும் அங்கே கொடுக்கப் பட்டிருந்தது. திருநேல்வேலியில் உள்ள ஒரு விலாசமும், தொலைபேசி எண்ணும்  கொடுக்கப் பட்டிருந்தது. தன் நம்பிக்கையை ஒருபுறம் வைத்து விட்டு, முயன்று பார்க்கலாம் என்று தோன்றியது கிருஷ்ணனுக்கு. அந்த எண்ணுக்குப் பேசி, நேரில் ஞாயிறு அன்று  சந்திக்க நாள் குறித்து விட்டார்.

"ஆவி" அனிதாவை சந்திக்க தன்னுடன் வருமாறு ராஜரத்தினத்தை அழைத்தார். அவர் தன் மகளுக்கு "ஆவி" பிடிக்க வில்லை என்று விவாதிக்க ஆரம்பித்து விட்டார். 

மாமா, நானும் இதெல்லாம் நம்ப மாட்டேன், அது உங்களுக்கே தெரியும் இருந்தாலும் ஒரு முயற்சி பண்ணிப் பாப்போமேன்னு தான். 


வேறு வழியில்லாமல் உடன் வர சம்மதித்தார் ராஜரத்தினம்.

ஞாயிறு காலை 10:00 மணிக்கு அந்த விலாசத்தை அடைந்தனர் இருவரும். குறைந்தது 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியை எதிர் பார்த்தவர்களுக்கு ஏமாற்றம். 23 வயதுக்கும்  குறைவான ஒரு பெண் (சிறுமி போல் தோற்றம்). 

சொல்லுங்க, உங்க பிரச்சனை என்ன?

      கிருஷ்ணன் விவரித்தார்.

இதுவரைக்கும் இங்க வந்தவங்க ரொம்ப பேர் சொத்து விவகாரமாத்தான் வந்திருக்காங்க. உங்க பிரச்சனை வேற மாதிரி இருக்கு. முயற்சி பண்ணி பாக்குறேன் ஆனா இப்போ எதுவும் உறுதியா சொல்ல முடியாது.

      எனக்கு உங்க கிட்ட சில கேள்விகள் கேட்கனும் மேடம். கேட்கட்டுமா?

தாராலமா கேளுங்க   
    
    இத நான் முதல் தடவையா அனுபவ படும் போது, physics department professor கிட்ட இத பத்தி கேட்டேன். அவர் உயிர் மின்சாரம் பத்தி சொன்னார். அப்புறம் இங்கிலாந்து ல யாரோ இது சுத்த பொய்ன்னு நிரூபிச்சதா சொன்னாரு.


உயிர் மின்சாரம் உண்மைதான், அந்த England news பத்தி நானும் படிச்சிருக்கேன். science ல பல நிரூபணங்கள் அனுமானத்தின் அடிப்படையில் தான் ஆரம்பிக்கும். அனுமானம் சரீன்னா  நிரூபணம் சரி. அனுமானம் தவறுன்னா நிரூபணமும் தவறு. நியூட்டன் புவிஈர்ப்பு விசை பத்தி சொல்றதுக்கு முன்னாலையே அது இருந்தது. கொலம்பஸ் கண்டு பிடிக்கிறதுக்கு முன்னாலையே அமெரிக்கா (பேரு வேறையா இருக்கலாம்)  இருந்தது. அந்த மாதிரி நம்மால உணரமுடியாத பல விசயங்கள இல்லேன்னு சொன்னா அது உண்மை ஆகாது. நம்ம கிட்ட அத கண்டு பிடிக்கிறதுக்கான கருவி இல்லேன்னு சொல்லுங்க ஆனா அப்படி ஒன்னே இல்லேன்னு சொல்லாதீங்க. இது என்னோட தாழ்மையான கருத்து.

      அனிதா சொல்வது புரிவது போல் இருந்தாலும் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் எதோ நம்பிக்கையில் அவர் சொல்வதற்கு சம்மதிக்க தொடங்கினர்.

கிருஷ்ணன் சார்,  நாளைக்கு உங்க wife இங்க கூட்டிட்டு வாங்க, நான் பேசுறேன். 

    சரி மேடம்.

கிருஷ்ணன், ராணி, அமுதன், ராஜரத்தினம் நால்வரும் அனிதாவை பார்க்க காத்துக் கொண்டிருந்தனர். இப்போது ராணியிடம் எந்த மாற்றமும் இல்லாதது கிருஷ்ணனுக்கு சற்று வியப்பாகவே இருந்தது. அழைப்புக்கு பின்பு இருவரும் உள்ளே சென்றனர். ராணியை மட்டும் அழைத்தார் அனிதா, குழந்தையும் கிருஷ்ணனும் வெளியே காத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து ராணியை  வெளியே இருக்கச் சொல்லிவிட்டு கிருஷ்ணனை அழைத்தார். கிருஷ்ணன் குழந்தையை ராணியிடம் கொடுத்து விட்டு உள்ளே வந்தார். 

கிருஷ்ணன் சார், உங்க wife கிட்ட எந்த மாற்றமும் இல்ல. அவங்கள எந்த விதமான சக்தியும் அலைகழிக்கல.

என்று கூறும்போதே வெளியில் நின்று கொண்டிருத்த watchman உள்ளே வந்தார் ராணியை இழுத்துக்கொண்டு, உடன் ராஜரத்தினம்,

மேடம், இந்தம்மா குழந்தையோட ரோட்டப்பாத்து ஓடினாங்க, நான் தான் புடிச்சி இழுத்துக் கிட்டு வந்தேன். என்று கூறி watchman ராணியை உள்ளே விட்டுச் சென்றார்.

இப்போது ராணி உள்ளே வரும் போதே அனிதா புரிந்து கொண்டார். குழந்தையை ராணியிடம் இருந்து பறித்துக் கொண்டு, குழந்தையை மட்டும் அருகில் இருந்த அறையில் போட்டு அடைத்தார். இதைக் கண்டு பதறிய கிருஷ்ணன்.

என்ன madam பண்றீங்க? சின்னக் குழந்தையை போயி..

    உங்க மனைவிய கவனிங்க (முறைத்துக் கொண்டிருந்த ராணியின் கண்கள் சாதாரண நிலைக்கு திரும்பின, இதை கண்டு ஏதும் புரியாமல் நின்றார் கிருஷ்ணன், அப்போது உள்ளே குழந்தையின் அழுகை கேட்டது.)

     கிருஷ்ணன் சார்,  அலைக்கழிக்கப்படுவது உங்க மனைவி இல்ல, உங்க குழந்தை. உங்க குழந்தை மூலமா மனைவி. இரண்டு பேரையும் பிரிச்சி வைங்க உங்க மனைவி normal லா இருப்பாங்க.

அதிர்ச்சியில் உறைந்தார் கிருஷ்ணன்.

குழந்தையை நீங்க எடுத்துக் கோங்க sir, நான் சொல்ற வரைக்கும் உங்க மனைவி கிட்ட கொடுக்காதீங்க.

சரி

அமுதனை தாத்தாவுடன் ஊருக்கு அனுப்பி விட்டு, கிருஷ்ணனும் ராணியும் அனிதாவுடன் 553 வளமனை முதல் தெருவுக்கு சென்றனர். எதிர்பார்த்த படி வீடு இன்னும் காலியாகவே இருந்தது. உரிமையாளரிடம் இருந்து சாவியை வாங்க சென்றனர் கிருஷ்ணனும், ராணியும். அனிதா அந்த வீட்டைப் பற்றி அருகில் விசாரிக்கச் சென்றார். யாரும் அந்த வீட்டைப் பற்றி பேச தயாராக இல்லை. கடைசியாக ஒரு மூதாட்டி அந்த வீட்டின் முன்கதையை கூறினார். 

சில வருடங்கள் முன்பாக அந்த வீட்டில் வாழ்ந்த குடும்பத்தில் இருந்த ஒரு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலையின் காரணம் பலவாறு கூறப்படுகிறது. அதன் பின் வெகு நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டிற்க்கு குடிவந்த வயோதிக தம்பதிகளில் மனைவி மட்டும் இறந்தார். பின்பு பல  நாட்கள் கழித்து கிருஷ்ணன் குடும்பம் வந்தது. ஆனால் நல்ல வேலையாக அசம்பாவிதம் நடக்கும் முன்பாகவே சென்று விட்டனர். இந்த வீடு பற்றி யாரும் வெளியில் பேசுவது கிடையாது ஏனெனில் பேசினாலே ஆபத்து என்கிற பயம் தான். நான் சாகப் போற கிழவி தான, என்று கூறி விட்டுச் சென்றார்.

சாவியை வாங்கிக் கொண்டு வந்த கிருஷ்ணன், அனிதாவிடம் கொடுத்தார். 

இப்போ என்ன பண்ணப் போறீங்க madam ?

   அந்த "ஆத்மா" கிட்ட பேசிப் பார்க்கலாம். கண்டிப்பா இந்த "ஆத்மா" பேச வரும். 

கிருஷ்ணன் கூறியது அனிதாவுக்கு நினைவுக்கு வந்தது. சமையல் அறை கதவுக்கு மேலிருக்கும் பரண். கிருஷ்ணனிடம் சொல்லி மச்சி வீடு போலிருக்கும் அந்த சிறிய அறையில் என்ன இருக்கிறது என்று பார்க்கச் சொன்னார். 

இங்க ஒரு கருப்பு பெட்டி இருக்கு

அத கீழே கொண்டு வாங்க sir. 

கிருஷ்ணன் பெட்டியை கீழே இறக்க முயல, ராணி வெறியுடன் கிருஷ்ணனின் காலை பிடித்து இழுத்து வீசினார். ராணியின் பற்கள் நறநறக்கும் ஓசை காதுகளை கூசச் செய்தது. 

அனிதா seance  முறை மூலம் அந்த ஆத்மாவை தொடர்பு கொள்ள முயன்றார். அனிதாவும், ராணியின் உடலில் இருக்கும் ஆத்மாவும் ஏதோ தங்களுக்குள்  மொழி இல்லாமல் பேசிக் கொண்டனர். 

சிறிது நேரம் சென்று கிருஷ்ணனிடம் சென்ற அனிதா 

உங்க மனைவிகிட்ட இங்க இருக்குற ஒரு வயசானவங்க இறந்து போன அந்த பொண்ணப் பத்தி சொல்லி இருக்காங்க. வீடு சுத்தம் பண்ணும் போது ராணி அந்த கருப்பு பெட்டிய பாத்திருக்காங்க.

கவலைப்படாதீங்க, இனி உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. நான் house owner கிட்ட பேசுறேன். இந்த வீட்டை இன்னும் 5 வருசத்துக்கு வாடகைக்கு விட வேண்டாம். அதுக்கப்புறம் என்ன வேனா பண்ணிக்கலாம், no problem 

5 வருஷம் என்ன கணக்கு?

    இந்த ஆத்மாவோட மீதி இருக்குற life time

எங்களுக்கு இனி தொல்லை இருக்காதுள்ள?

    தொல்லை இருக்காது, இருந்தாலும் வேற எங்காவது தூரமா போயிடுங்க.

அந்த கருப்பு பெட்டி ல என்ன இருக்கு madam?

     உயிர் மின்சாரம் !!!

அப்ப பேய் உண்மையா?

   ..........................

முற்றும்... 

Thursday, August 16, 2012

கருப்பு பெட்டி

உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்டது...  

இடம்: கோவில்பட்டி 
நாள்:  மார்கழி 2 1978
நேரம்: காலை 04:45


"கட்டளை நாள் இரண்டு, கட்டளைக் குரியவர் சுப்பையா. பக்தகோடிகள் அனைவரும் வந்து அம்மனை தரிசித்து, அம்மனின் அருள் பிரசாதம் பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இவன் கோவில் விழா கமிட்டியார்", என்று அதிகாலையில் சேவலுக்கு முன்பாகவே கூவி அழைத்து கோவிலுக்கு கூட்டம் சேர்க்கும் வேலை தொடங்கியது.

சுப்பையா காசு கொடுத்து வாங்கிய அன்றைய கோவில் மரியாதையை பெருமையுடன் ஏற்றுக்கொண்டார். பொங்கல் பிரசாதம் பெற்றுக்கொண்டு கோவிலின் முன்புறம் நடை பெற்றுக் கொண்டிருந்த  சமய உரையில்  தன்னையும் இணைத்துக்கொண்டார். அப்போது இறைவன் எங்கிருக்கிறான், எப்படிப்பட்டவன் என்று யாரோ கேட்ட கேள்விக்கு, வெள்ளிக் கம்பிகளின் காட்டுக்குள் புதைந்த இரு கண்களை மட்டும் கொண்ட ஒரு ஆத்மா நம்மாழ்வாரின் பாடல் ஒன்றை "திருவாய்மொழி" ந்தது      


உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்.
உளன் அலன் எனில் அலன் அவன் அருவமிவ்வருவுகள்
உளனென இலனென அவைகுணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஓழிவிலன் பரந்தே

அப்போது துர்சக்திகள்? என்ற கேள்விக்கு சிறிய அமைதிக்குப்பின் " இறைவன் அனைவரையும் காப்பார்" என்று மட்டும் கூறி உரைக்கு உறை போட்டுவிட்டு புறப்பட்டுவிட்டார்.  சுப்பையாவும் வீட்டை நோக்கி...

வளமனை தெரு   

         வளமனை முதல்  தெரு, வீட்டு எண் 553 னை அடைந்தார். வெளியில் போடப்பட்ட பூட்டை திறந்து உள்ளே நுழைந்தவருக்காக காத்திருந்த "அதிர்ச்சி" அவரை சந்தித்தது. பரண் மேல் இருந்த பொருட்கள் தரையில், இரும்புக் கட்டிலில் படுத்திருந்த அவர் மனைவி காசியம்மாவின்   தலையில் அவர்கள் திருமணம் முடிந்து வந்த போது உடன் வந்த வெண்கலப் பானை சத்தமில்லாமல் அமர்ந்திருந்தது.  

          பலமுறை மனைவியிடம் கேட்ட "உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா?" என்ற கேள்விக்கு விடை பானையில் ஒட்டிக் கொண்டிருந்தது.  அழவும் தெம்பில்லாமல் சாய்ந்தார். சிறுது நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் சூழ்ந்து கொண்டார்கள். தாமதமாக வந்தவர்களின் கேள்விக்கு முதலில் வந்தவர்கள்  பதில் அளித்துக் கொண்டிருந்தார்கள்.

         உடம்பு சரியில்லாம தூங்கிகிட்டு இருந்த அம்மாவை எழுப்ப வேண்டாம்னு கதவ வெளியில பூட்டு போட்டுட்டு அவரு மட்டும் கோவிலுக்கு போயிருக்காரு. திரும்ப வந்து பார்க்கும் போது  இப்படி ஆயிரிச்சி. பரண் மேல இருந்த "பான" உருண்டு அந்தம்மா மேல விழுந்து இறந்துட்டாங்க.    ஆனா அவ்வளவு கனமான பான எப்படித்தான் கீழ விழுந்ததோ தெரியல. பாவம் அவரு வயசான காலத்துல வேற யாரும் இல்ல. என்று பலரும் தங்களுக்கு தெரிந்த செய்திகளுக்கு கண் காது மூக்கு இணைத்து உருவம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

1979 - அழகாபுரி 

காமராசர் மாவட்டம், விருதுநகர் அருகில் உள்ள குக்கிராமம்

             "ராணி" அந்த வீட்டில் முதல் பெண். ராணி என்பதோடு அல்லாமல் அவருக்கு இன்னும் சில பல பேர்கள் இருந்தன. அன்பு, அமைதி, அறியாமை, வெகுளி.ராணி மட்டுமல்லாமல் அவரை தொடர்ந்து ஆண், பெண் , ஆண் , ஆண் என மேலும் நான்கு குழந்தைகள். அன்றைய தினம் ராணியைப்  பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதால் தன்னிடம் இருப்பதிலேயே சிறந்த தாவணியை கட்டிக்கொண்டு பயத்துடன் காத்திருந்தார். ராணிக்கு வயது 18.

       ஆலமர பிள்ளையாரை சுற்றி தன் அன்றைய தின நேத்திக் கடனை செலுத்தி விட்டு நின்றது அந்த பேருந்து. படிகளில் இறங்கும் ஒவ்வொருவரையும் ஆவலோடு அலசினார் இராஜரத்தினம். கடைசியில் இறங்கிய கிருஷ்ணனை பார்த்ததும் இவர் தான் என்பதை உறுதி செய்து விட்டு உடன் அழைத்துச் சென்றார் தன் மகளை பார்க்க. 

              காபி கொண்டு வந்த ராணியை பார்த்த மறு நொடி சம்மதத்தை சிரிப்பில் தெரிவித்து விட்டார் கிருஷ்ணன். ராணியின் விருப்பத்தை பற்றி யாருக்கு கவலை?.  பையன் அரசாங்க உத்தியோகம், காலேஜ் மெக்கானிக், அது மட்டும் இல்லாம வெளிய வேலைக்கும் போவார்,  நல்ல வருமானம், கூட பொறந்தது அவரையும் சேர்த்து 5, செந்த வீடு விவசாய நிலம்னு வசதி இருக்கு. பெருசா ஒன்னும் எதிர்பாக்கல, 15 பவுன் நகையும் கொஞ்சம் பணமும் கொடுத்துருங்க என்று பிற விவரங்களை பட்டியலிட்டார் இரு வீட்டாருக்கும் பொதுவான ந(ண்)பர்.

            கிருஷ்ணனின் விருப்பப்படி ஓதுதலும், ஊதுதலும் இல்லாமல் "குறள்"    முழங்க சான்றோர் முன்னிலையில் "தமிழ்" முறைப்படி திருமணம் இனிதே நடந்தது. திருமணம் குறித்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ராணி ஒன்றை மட்டும் நினைத்து மகிழ்ந்தார். இனி தினமும் அரிசி சோறு சாப்பிடலாம், நல்ல துணிமணி  உடுத்தலாம். பணக் கஷ்டம் இல்லை.
                
        உண்மை தான் இனி பணக் கஷ்டம் இல்லை, பணம் மட்டும் தான் கஷ்டமா?

புகுந்த வீடு 

    மறு வீடு முடிந்து மாமியார் வீட்டிற்கு திரும்ப வந்தார் ராணி.  கோவில்பட்டியில் இருந்து சுமார் 7 K.M தொலைவில் இருந்த மற்றொரு கிராமம் "அப்பனேரி", அங்குதான் கிருஷ்ணனுக்கு தவறு கிருஷ்ணன் குடும்பத்திற்கு சொந்தமான வீடு, நிலம், மாடு இருந்தது இப்போது ராணி.  
             
             கணவர் நல்லவர் தான் ஆனால் இந்த கோபம். அதை வர்ணிக்க 10 வகுப்பு   வரை படித்தும் ராணிக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.   கிருஷ்ணனுக்கு  ஜாதகம் , சம்பிரதாயம், நல்ல நேரம் இவைகளில் நம்பிக்கை இல்லை. அப்பகுதியில் உள்ள கல்லூரியில் mechanic வேலை செய்கிறார்.  தினமும் அலுவலகம்  முடிந்த வீடு திரும்பியவுடன் தன் காதல் மனைவியை அழைத்துக் கொண்டு வலம் சென்று விடுவார். எப்போதாவது ராணியின் வற்புறுத்துதலின் பேரில் கோவிலுக்கு அழைத்துச் செல்வார். திருமணம் ஆகி 1 மாதம் ஆகியும் இந்த உலா நின்ற பாடில்லை, இது கிருஷ்ணனின்  அன்னை, அக்கா, அண்ணி எவருக்கும் பிடிக்க வில்லை.  ஏனெனில் அவர்களுக்கு இது  எட்டாக் கனியாக இருந்தது தான்.  

         விவசயக் குடும்பம் என்பதால் வீட்டில் பசுமாடு உண்டு. பிரசவத்திற்கு காத்திருந்த பசு, மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லாமல், கிருஷ்ணனின் மாமா (அக்காவின் கணவர்) தானே மருத்துவரானார் அதன் விளைவு, தன்னுயிரை ஈன்ற குட்டிக்கு ஈந்தது. 

       "எத்தன வருஷமா நம்ம வீட்ல மாடு வளக்குறோம், ஒரு தடவையாது இப்படி ஆயிருக்கா? இந்த "ச..." பிடிச்சவ வந்தவுடனே இப்படி ஆயிருச்சி" என்று கிருஷ்ணனின் அக்கா தன் கணவரின் மருத்துவம் மீது பிறர் பழி போடாமல் முந்திக்கொண்டு தன் பங்கை துவங்கினார். மாலை கிருஷ்ணன் வரும் வரை அந்த வசை மாரி நிற்க வில்லை.  
    
           hospital க்கு கொண்டு போயிருக்க வேண்டியது தானே? உங்கள யாரு பாக்க சொன்னது?  என்று ராணிக்கு குடை பிடித்தார் கிருஷ்ணன்.

                 இவ்வாறாக தொடர்ந்த மாமியார் வீட்டு திருவிளையாடல்களை ஒரு  வருடம் சமாளித்து ஒரு குழந்தைக்கும் தாயனார் ராணி. பிரசவம் முடிந்து  5 மாதம் சென்ற பின்  மீண்டும் புகுந்தார் அந்த வீட்டில், கிருஷ்ணன் அலுவலகம் சென்றவுடன், ஏதோ காரணம்   சொல்லி கிருஷ்ணனின் அக்கா தன் அகலமான கையின் பத்து விரல்களை ராணியின் முதுகில் உரக்க பதித்தார். ராணியின் அலறல் கேட்டதோ என்னமோ   ! கிருஷ்ணன் அன்றைய தினம் விரைவாகவே வீட்டுக்கு வந்து விட்டார். 

                 மனைவியின் நிலை கண்டு வருந்தி, தன் குடும்ப அன்பர்களுடன்  ஒரு மணி நேர வாக்கு வாதத்திற்குப் பிறகு  அன்று இரவே தனிக் குடித்தனம்  செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.  மூவரும் கோவில்பட்டிக்கு சென்றனர். தெரிந்தவர் ஒருவர் மூலமாக வீடு பிடித்துத் தரும் இடைத் தரகர் அறிமுகம் மூலம் அன்று இரவே ஒரு வீட்டிற்கு குடி புகுந்தனர்.

                  மறுநாள் அலுவலகத்தில், தன்னுடைய முதல் நாள் அனுபவத்தையும்  புது வீட்டிற்கு சென்றதையும் பற்றி நண்பரிடம் கூறினார். 

                 உடனே எப்படி வீடு கிடைச்சது?
                          புரோக்கர் தான், வாடகையும் ரொம்ப கம்மி தான்.      


                 வீடு எங்க இருக்கு கிருஷ்ணா?
                      First Bungalow street  ராமு, ஒரு நாள் கண்டிப்பா வீட்டுக்கு வரணும். வீட்டு நம்பர் 553

புது வீடு 
             வீடு முழுவதும் மண்டிக் கிடந்தது தூசு. குழந்தையை வராண்டாவில் தொட்டிலில் தூங்க வைத்து விட்டு, கிருஷ்ணன் வேலைக்கு சென்றதும், வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தார் ராணி. ராணிக்கு கொஞ்சம் சுவாசப் பிரச்சனை உண்டு என்பதால் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு தன் வேலையை முடித்தார். மாலை கிருஷ்ணன் திரும்ப வந்ததும் காலை வெறும்  சுவர்களாக இருந்தது இப்போது வீடாக மாறியது புரிந்தது. திருமணமான போது ராணியின் நினைவில் நின்றது (அமைதியான வாழ்வு) இப்போது தான் மெல்ல நனவாகி வந்தது. 

        இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து, சில நல்ல நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்தன. கிருஷ்ணனுக்கும் நிறைய வெளி வேலைகள் வரத் தொடங்கின.   இந்த புது வீட்டுக்கு வந்து முழுதாக நான்கு மாதங்கள் முடிந்தன.  

அன்று வெள்ளிக்கிழமை...

          கிருஷ்ணன் காலை வேலைக்கு செல்லும்முன் மாலை வெளியே  கூட்டிச் செல்வதாக கூறியது நினைவுக்கு வந்தது. கடிகாரம் தீவிரமாக ஐந்தை  நெருங்கிக் கொண்டிருதது அவசரம் அவசரமாக அலுவலகத்தில் இருந்து வெளிவந்து  மிதி மிதி என மிதித்தார் மிதி வண்டியை   சரியாய் 30 நிமிடத்தில் வீட்டை அடைந்தார். 

         வீட்டில் இருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்...

      ராணி, ராணி என்ன தூங்கிக்கிட்டு இருக்க, வெளிய போகலாம்னு சொல்லி இருந்தேன்ல, கிளம்பலையா?
                      இல்லங்க, ரொம்ப தல வலியா இருக்கு, நாளைக்கு போகலாமா 

       சரி பரவால்ல நீ தூங்கு. 
                     டீ போடட்டுமா?

      இல்ல, இப்ப வேண்டாம், அப்பறம் போடு.

பதில் கூட சொல்ல முடியாமல் தலை சாய்த்தார் ராணி. வழக்கமாக ஒரு மணிக்கு ஒரு முறை உணவுக்காக அழும் குழந்தையும் இரண்டு மணிநேரம் ஆகியும் அமைதியாக இருந்தது. ராணியும்.

மணி 07:30

           ராணி, ராணி......    ராணி, ராணி.........
                    ..............

           ராணியின் தோளைப் பிடித்து உலுக்கினார் கிருஷ்ணன். மெதுவாக கண் திறந்தார்.

      இப்போ எப்படி இருக்கு? hospital போலாமா?
                    ..............

 மீண்டும் கேள்வி எதுவும்  கேட்காமல், ராணியை தூக்கி விட்டு முகம் கழுவச் சொல்லிவிட்டு. குழந்தையை தூக்கிக் கொண்டு தயாரானர்.

       ரிக்க்ஷா கூட்டிட்டு வரவா?
               இல்லங்க, அதெல்லாம் வேண்டாம், நான் மெல்ல நடந்தே வந்துர்றேன். குழந்த முழிச்சிட்டான் அவன கொடுங்க.

     தளர்ந்த நடையுடன் வீட்டை விட்டு வெளியே வந்த ராணி சிறிது தூரம் நடந்தவுடன்  தெளிவானார். 

               இப்போ கொஞ்சம் பரவா இல்லங்க, சைக்கிள்ள கூட ஏறிக்கிறேன்.

சரி என்று ராணியை குழந்தையுடன்  பின்னால் உட்காரச் சொல்லி விட்டு,  கிருஷ்ணன்  மிதி வண்டியை இயக்க முயற்சிக்க, சற்று தூரத்திலேயே தெரு விளக்கின் அடியில் இரண்டு நாய்கள் எதோ ஒன்றுக்காக வெறிப் பிடித்தது போல சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அந்த குறுகிய தெருவில் ஒதுங்கி செல்லவும் வாய்ப்பில்லை. திரும்பி செல்லவும் மனமில்லாமல் அங்கேயே நின்றார் கிருஷ்ணன். சில நொடிகளில் இரண்டு நாய்களும் கிருஷ்ணனை நோக்கி அதே வெறியுடன் ஓடி வந்தன.  மிக அருகில் வந்த நாய்கள், வந்த  அதே வேகத்தில் நிற்க முயற்சி செய்து நிற்க முடியாமல் வழுக்கிக் கொண்டு சாலையின் இருபுறமும் இருந்த சாக்கடையில் விழுந்து எழுந்து வந்த திசையிலேயே ஓடின. படபடப்பில் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்ற கிருஷ்ணன் திரும்பினார், பின்னால் உட்கார்ந்திருந்த ராணி குழந்தையுடன்  இறங்கி நின்று கொண்டிருந்தார்.

            "நல்ல வேளை ஒன்னும் ஆகல"  என்று தேற்றிக்கொண்டு மிதிவண்டியை மருத்துவமனைக்கு செலுத்தியவரை ராணி இடைமறித்தார்.
                  
              நல்லா தூங்கினதால தலைவலி சரியாப் போச்சு, hospital போகவேண்டாம். வேற எங்காவது போகலாம்.  

இரவு உணவு உண்டு விட்டு மூவரும் 09:30 மணிக்கு வீடு திரும்பினர்.

 அடுத்த இரண்டு வாரங்களில் மீண்டும் ஒருமுறை தலை வலி, மருத்துவமனை, வழியில் வேறு ஒரு சம்பவம்.

ஒரு மாதம் சென்ற பின்பு, விடுமுறைக்காக ராணியின் தங்கை வந்திருந்தார். வந்து ஒருவாரம் ஆகியும் வெளியில் எங்கும் கூட்டிச்செல்ல முடியாததால் ராணியையும், தங்கையையும் திரைப்படத்திற்கு முதல் காட்சிக்கு சென்று வரச்சொன்னார் கிருஷ்ணன். 

  ராணி, நீயும் உன் தங்கச்சியும் பக்கத்து theater க்கு சினிமாக்கு போயிட்டுவாங்க, எனக்கு இந்த motor re-winding வேலை இருக்கு.

                     நாங்க மட்டும் எப்படிங்க போறது?

   உங்கள நான் theater ல விட்டுர்றேன், படம் முடியிற நேரத்துல வந்து கூப்ட்டுக்குறேன். பக்கத்துல தான நடந்து போகலாம்.
                             
                    சரிங்க, குழந்தையும் நானே கொண்டு போயிர்றேன். அழுதா நாங்க ரெண்டு பேறும்  சமாளிச்சிக்குவோம்.

கூச்சல் 


இருவரையும் திரையரங்கத்தில் விட்டு விட்டு வந்து தன் வேலையை தொடர்ந்தார் கிருஷ்ணன். வயலுக்கு நீர் பாய்ச்ச, கிணற்றில் இருந்து நீர் இறைக்கும் 4  குதிரை திறன் கொண்ட  மோட்டாரின் உள் பக்கத்தில் குனிந்து  தாமிர கம்பிகளை அடுக்கிக் கொண்டிருந்தார். வேலை மும்மரத்தில் எதையும் அறியாதவர், சட்டென்று தன்னருகில் யாரோ இருப்பதைப் போன்று உணர்ந்தார்.  யாரும் இல்லை என்று தெரிந்தாலும் திரும்பி பார்த்து அதை உறுதி செய்து கொண்டு மீண்டும் பணியை தொடர்ந்தார்.     

வீட்டின் முன்புறம் போடப்பட்ட மரச் சட்டங்களினால் ஆன கதவு திடீரென சத்தமில்லாமல் தானாக மெல்ல ஆட ஆரம்பித்தது. 

குனிந்திருந்த கிருஷ்ணன், தலையை உயர்த்தாமல் கண்களை மட்டும் மேலே உயர்த்திப் பார்த்தார். ஆட்டம் மெல்ல குறைந்து அமைதியானது. மனதுக்குள் எந்த கேள்விக்கும் இடம் கொடாமல், தரைக்கும் கதவுக்கும் இருந்த இடைவெளியை திருப்புளி (screwdriver)  கொண்டு மீண்டும் ஆடாதபடி நிரப்பினார்.

கவனத்தை தாமிர கம்பியின் மீது திருப்பி வேலையை தொடங்க முயற்ச்சித்தார், இனம் புரியாத கலவரம் அவரை ஆட்கொண்டது. 

"சீ சீ  அதெல்லாம் ஒன்னும் இல்ல, சுத்த மூட நம்பிக்கை" என்று சமாதானம் செய்துகொண்டு வேலையை தொடர்ந்தவர், சிறிது நேரத்திலேயே தன்னை அறியாமல் நிமிர்ந்து பார்த்தார். பார்த்தவுடன் உடலின் அனைத்து மயிர்க் கால்களும் சிலிர்த்து நின்றன...

என்ன  அது ?