cookie

Thursday, April 18, 2013

பால்

திருமணத்திற்குப் பின் சில வருடங்கள் கிராமத்திலேயே வாழ்ந்துவிட்டு, இரத்த உறவுகள் கசந்ததால் அருகில் இருந்த கோவில்பட்டிக்கு தள்ளப்பட்டனர் என் பெற்றோர்கள். கிராமத்தில் இருந்தவரை தொழுவத்தில் மாடுகளும் வீட்டில் பாலும் நிறைவாக இருந்தது. ந(க)ர(க)த்திற்கு வந்த பிறகு புதிதாக வந்த சில பல சிக்கல்களோடு பாலும் சேர்ந்து கொண்டது.

தினமும், காலையில் பாலுடன் வீட்டு வாசலுக்கே வந்துவிடுவார் அண்ணாமலை. ஊரெங்கும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடினாலும் அண்ணாமலையின் கிணறு மட்டும் ஜீவ ஊற்றை தன்வசம் கொண்டிருந்ததால் நிறமற்று, மணமற்று, சுவையற்று இருந்த நீருக்கு சிறிதளவு பாலின் குணத்தை புகுத்தி குறைந்த விலையில் விநியோகித்து சமுதாயத் தொண்டாற்றினார் அண்ணாமலை.

ஆசுகவி காளமேகப் புலவர் புகழ்ந்து பாடிய அந்த ஆய்ச்சியின் பேரப்பிள்ளை தான் இந்த அண்ணாமலை.

"கார் என்று பேர் பெற்றாய்

ககனத்தே உறும்போது

நீர் என்று பேர் பெற்றாய்!

நீணிலத்தில் வந்ததன் பின்

வார் என்றும் மென் கொங்கை

ஆய்ச்சியர்கை வந்ததன் பின்

மோர் என்று பேர் பெற்றாய்!

முப்பேரும் பெற்றாயே!"


எங்கள் வீட்டில் அன்னப் பறவை இல்லை, அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே கோவில்பட்டி நகராட்சியில் கட்டணம் செலுத்தி தண்ணீர் வாங்குவது போதும்,  மீண்டும் அண்ணாமலையிடமும் வாங்க வேண்டும் என்று அவரிடம் பால்(?) வாங்குவதை நிறுத்தினோம்.

உணர்ச்சி வசப்பட்டு அண்ணாமலையை உதறியதன் பின் விளைவு, எங்கள் வீட்டில் பசுமாடு ஒன்று கன்றுக் குட்டியுடன் தஞ்சமடைந்தது. எங்கள் குடும்பத்திற்குத் தேவையானது போக மீதம் இருந்த பால் விற்ப்பனைக்கு.

பசும் பாலில் இயற்கையாக இருக்கும் 87% சதவீதம் நீரைத் தவிர்த்து மேலும்  அதிகப் படியாக நீர் எதுவும் சேர்க்கக் கூடாது என்பது அம்மாவின் அன்புக்கட்டளை. அதன்படியே பால் வியாபாரமும் நடைபெற்றது. 

சில நாட்கள் சென்ற பிறகு, பல செவிகள் வழியாக திரிந்து வந்தது அந்தச் செய்தி 

"தேனெடுத்தவன் புறங்கையை பின்னாலயா தடவுவான் ?" 

ஏற்கனவே எங்கள் ஊரில் இருந்த அண்ணாமலைகளின் பட்டியலில் நாங்களும் சேர்க்கப் பட்டோம். வருத்தப்பட எதாவது வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த என் அம்மா, இந்தச் செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்து, ஆத்திரமடைந்து, கொதிப்படைந்து வழக்கம் போல வேறேதும் செய்ய முடியாமல் சமுதாயத்தை கோபம் தீர திட்டிவிட்டு, பால் விற்ப்பனைக்கு அன்றுடன் முற்றுப் புள்ளி வைத்தார். அடுத்த சில நாட்களிலேயே மாடும் வேறொருவருக்கு விலை போனது. 

மீண்டும் பாலுக்காக தெருவுக்கு வந்தோம்.

இந்த முறை நிச்சயம் அண்ணாமலை அல்ல "ஆவின்" பாக்கெட் பால். அன்றைய காலகட்டத்தில், இப்போது உள்ளது போல பால் விற்கும் வேறு தனியார் நிவனங்கள் இல்லை.பாக்கெட்களில் விற்ப்பனைக்கு வருவது ஆவின் மட்டுமே. முதலில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்த ஆவின் பால் சில            மாதங்களில் எங்களை சிக்கலில் தள்ளியது.

அவ்வாறு பால் தட்டுப்பாடு உள்ள கால கட்டங்களில் ஆவின் பால் விற்கும் முகவர்தான் ஊரில் மிகவும் மதிப்பு மிக்க மனிதர்.அன்றைய தினம் பால் காப்பி குடிக்க வேண்டும் என்றால் காலையில் 5 மணிக்கெல்லாம் வரிசையில் நிற்கவேண்டும். சில நிமிடங்கள் தாமதமானாலும் அன்றைய தினம்  கடுங்காப்பிதான்.

எங்கள் முழுக் குடும்பமும் காப்பியின் போதைக்கு அடிமையாகி இருந்தது. காலையில் காபி குடிக்கவில்லை என்றால் எந்த வேலையும் நடக்காது. அதனால் சரியாக அட்டவணை போடப்பட்டு பால் வாங்கும் வேலை எனக்கும், என் அக்காவிற்கும் பகிர்ந்தளிக்கப் பட்டது. 

அன்று என் முறை, தூக்கத்திடம் செய்த உடன்படிக்கையை 10 நிமிடம் மீறியதால், பால் பறிபோனது. என்னையும் சேர்த்து அனைவருக்கும் போதை வஸ்த்து கிடைக்காத ஆத்திரம் தலைக்கு ஏறியது. வேறு யாரிடமும் அதை காட்ட முடியாததால் அனைவரின் ஆத்திரமும் என் மேல் திரும்பியது. நான் மிகுந்த கோபத்தோடு அவை அனைத்தையும் வாங்கிக் கொண்டேன்.

பால் இல்லாததை காரணம் காட்டி அன்றைய தினம் விடுப்பு எடுத்து விடலாமா என்று எண்ணிய போது முதல் நாள் இன்று நினைவுக்கு வர, வாயையும் சேர்த்து மூடிக்கொண்டு பள்ளிக்கு கிளம்பினேன்.   
       
பள்ளியில் அன்று முதல் வகுப்பு "தமிழ்" பாடம். நற்றிணையில் 172 வது பாடலை விளக்க ஆரம்பித்தார் "தமிழ் அம்மா".

விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,
‘நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்த்தது;
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்’ என்று
அன்னை கூறினள், புன்னையது நலனே -
அம்ம! நாணுதும், நும்மொடு நகையே,
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க! நீ நல்கின்,
இறைபடி நீழல் பிறவுமார் உளவே

இந்தப் பாடலை அவர் வாசிக்கும் போது வழக்கம் போல ஒன்றும் புரியவில்லை. அதன் விளக்கத்தை கூறிய போதுதான் நான் வெறியானேன்.

அடிமனதில் ஆத்திரத்தை மூட்டிய இந்தப் பாடல் ஆண்டு முழுவதும் என்னைத் துரத்தியது.

"புன்னை மரத்தின் பெருமைகளாக அன்னை கூறியவை யாவை? " என்ற கேள்வி ஆண்டு இறுதித் தேர்வில் தவறாமல் இடம் பிடித்தது.

அந்தப் பாடலின் விளக்கம்

"குழந்தைப் பருவத்தில் மணலில் விளையாடும் போது தலைவி புதைத்து வைத்த புன்னை விதை துளிர் விடத் தொடங்கியது. அது வளர்வது கண்ட தலைவி அதற்குப் பாலும், தேனும் கலந்து ஊற்றி வளர்த்து வந்தாள்.

அதைக் கண்ட தலைவியின் தயார், இந்தப் புன்னை மரம் உனக்கு தங்கை முறையாகும் என்றரர்"

இந்தச் செய்தியை தோழி, தலைவனிடம் கூறினாள். மேலும் தன் தங்கையின் முன்பு தலைவனோடு காதல் புரிவதை தலைவி விரும்பவில்லை (வெட்கப் படுகிறாள்), அதனால் விரைவாக தலைவியை தலைவன் மணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறினாள். 

2 comments: