cookie

Friday, April 19, 2013

A for அம்மா


புவி ஈர்ப்பு விசையை விளக்கிய நியூட்டன் கூட பணமீர்ப்பு விசையை விளக்க வில்லை. வர்க்க பேதம் ஏதும் இல்லாமல் அனைவரையும் எல்லையில்லாத ஆற்றலுடன் தன்னை நோக்கி வசீகரிக்கும் உலகின் உண்ணத விசை. அதன் ஆற்றலுக்கு நானும் தப்பவில்லை.

ஆங்கில வழிக்கல்வியே பெற்றோருக்கு கனவாக இருந்தபோதும், கல்விக்கண் திறந்தவர் பெயரில் இயங்கும் பள்ளிகளில் கூட கட்டணம் கடுமையாக இருந்ததால், வீட்டுக்கு அருகில் இருந்த அரசு உதவி பெறும் தமிழ்வழிக் கல்வி பயிற்றுவிக்கும் பள்ளியில் தஞ்சம் அடைந்தேன்.

ஆங்கிலம் எப்போதுதிருந்து என்னை மிரட்டத் தொடங்கியது என்று சரியாக நினைவில்லை, ஆனால் முதல் நடுநிலை (6 -8) வகுப்பில் விடுப்பு விண்ணப்பத்தில் தொடங்கியதாக நினைவு.மிகவும் எளிதான  விண்ணப்பத்தை ஆங்கில ஆசிரியை (பள்ளிக்குப் புதிதாக வந்தவர்) கரும்பலகையில் எழுதிவிட்டார். அப்போது பசுமரத்தாணி போல என் மூலையில் இறங்கியதுதான் "As I am suffering from fever"(இன்றுவரை அதுதான் என்னுடைய எல்லா விடுப்பு விண்ணப்பத்திற்கும் மூலம்).

மறுநாள் வீட்டுப்பாடமும் கொடுத்து விட்டார். "அண்ணனின் திருமணதிற்கு செல்வதற்காக விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்". ஆங்கிலப் புத்தகம் முழுவதும் தேடியும் அண்ணன் திருமணத்திற்குப் பெண் கிடைக்கவில்லை. என்ன செய்ய? இருக்கும் கொஞ்ச மூளையும் கசக்கிப் பிழிந்து காகிதத்தில் கொட்டிவிட்டேன்.

அன்று முதல் வகுப்பே ஆங்கிலம் தான். அகர வரிசையில் என் பெயர் முதலில் வருவதால், ஆசிரியை கையில் தானாக வந்து சரணாகதி அடைந்தது நான் எழுதிய விடுப்பு விண்ணப்பம்.அதைப்  படிக்கத் தொடங்கிய ஆசிரியை என்ன நினைத்தார் என்று தெரியவில்லை அனைவருக்கும் கேட்கும் வகையில் உரக்க வாசிக்க ஆரம்பித்து விட்டார்.

"As i am suffering from my brother's marriage" என்று போனது அந்த விண்ணப்பம். அதை வாசித்த போது, ஆசிரியை மாணவர்களிடம் வெடிச்சிரிப்பை எதிர்பார்த்திருப்பார் போல, ஆனால் வகுப்பு அமைதியாக இருந்தது. மற்ற மாணவர்கள் சலமில்லாமல் புத்தர் போல காட்சியளிப்பது ஏன் என்ற காரணம் புரியாமல் மற்ற விண்ணப்பங்களையும் விசாரணைக்கு ஆட்படுத்திய போதே அவருக்கு உண்மை புரிந்தது. அதிக ஓட்டுக்களைப் பெற்று முன்னணியில் இருந்தது நான் எழுதிய விண்ணப்பமே. எங்களின் சமயோசித புத்தியை பாராட்டி ஆளுக்கு 5 பிரம்படிகளை உள்ளங்கையில் பரிசாக வழங்கினார் (பிரம்பும் எங்கள் பணத்தில் வாங்கியது).

ஆங்கிலத்தில்தான் அரைகுறை என்றால் தமிழையும் போற்றிப் படிக்கவில்லை. வாத்தியாருக்கு அடுத்தபடியாக வசைச்சொற்கள் வாங்குவது வள்ளுவர்தான். அவரின் பெரும்பாலான குறள்கள் புரியவில்லை, அதன் சுவையை எவரும் புரியும் படி எங்களுக்குப் புகட்டவில்லை.
     
வருடங்கள் ஓடியது ஆனால் மூளையின் ஆங்கில மொழிப்பகுதி மட்டும் அப்படியே வளராமல் நின்று விட்டது. பொதுத் தேர்வுகளில் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெறுவதற்க்கான சில வழிமுறைகளை மட்டும் கண்டறிந்து கொண்டதால் எந்த பொதுத்தேர்வினிலும் தவறியதில்லை.

பள்ளியில் ஆங்கிலப் பாடம் மட்டும் தான் ஆங்கிலம், கல்லூரிக்குச் சென்ற பிறகு தமிழ்ப் பாடம் தவிர்த்து அனைத்தும் ஆங்கிலம். என்னைப் போன்ற மாணவர்களின் மொழிப் புலமையை புரிந்துகொண்டு பெரும்பாலான விரிவுரையாளர்களும், பேராசியர்களும் தமிழ்வழி ஆங்கிலக்கல்வி போதித்து தமிழ்த் தொண்டாற்றினர். இதன் உச்ச கட்டம் ஆங்கிலப் பேராசிரியர்களும் இந்த தமிழ்த் தொண்டில் தங்களை இணைத்துக் கொண்டதுதான்.

கல்லூரி பேராசிரியர்களின் தமிழ்த்தாகத்திற்கு முதுகலை பயிலும் போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.கல்விக்கு மட்டுமல்ல கருத்துப் பரிமாற்றத்திற்கும் கட்டாயமாக்கப் பட்டது கடல் கடந்து வந்த மொழி.

ஆங்கிலத்தில் நடக்கும் (seminar)கருத்துப் பரிமாற்ற வகுப்பில் பங்கேற்கவில்லை எனில் இந்தியர்கள் கண்டுபிடித்த அதே எண்தான்  (zero ) மதிப்பெண்ணாகும் என்ற கட்டாயத்தில் 3 மணிநேர தயாரிப்பிற்குப் பின் 35 நிமிட ஆங்கிலம் முழுமதிப்பெண் வாங்கிக் கொடுத்தது. தொடர்ந்து மூன்று வார்த்தைகள் பேசப் பயந்த எனக்கு இது ஒரு நல்ல தொடக்கமாக இருந்தது. சரியோ தவறோ எதற்கும் அஞ்சவில்லை.ஆங்கிலக் கால்வாயை குற்றாலீஸ்வரனுக்கு அடுத்து நான்  கடந்தது போல உணர்ந்தேன். என்னுள் புதைந்திருந்த அந்நியன் வேகமாகவும் விரைவாகவும் வெளிவரத் தொடங்கினான். நாட்கள் நன்றாக நகர்ந்து கொண்டிருக்க பணியில் சேர்ந்தபிறகு  Onsite வடிவத்தில் வந்தது ஆபத்து.

2008 மே மாதம், பல கனவுகளோடு விமானத்தில் ஏறினேன் அமெரிக்காவிற்கு.விமான நிலையத்திலேயே தொடங்கியது சிக்கல். ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து அமெரிக்க கண்டத்திற்கு குடிபெயர்ந்த, வஞ்சனையில்லாமல் குறுக்கும், நெடுக்கும் வளர்ந்த அந்த விமான நிலையப் பெண் அதிகாரி ஏதோ கேட்டார், புரியவில்லை மீண்டும் கூறுங்கள் என்றேன். மீண்டும் அதையே அதே சுவரத்தில் கேட்டார் (அதைத்தானே முன்பு புரியவில்லை என்றேன், மீண்டும் அதையே கேட்டால் புரிந்து விடுமா?), இம்முறையும் புரியவில்லை என்றேன். பூமாதேவியை மிஞ்சும் பொறுமை உடைய அந்தப் பெண்மணி ஒரு புழுவைப் பார்பதைப் போல என்னை பார்த்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டார். நான் விட்டால் போதும் என்று அந்த இடத்தை காலி செய்தேன்.

மறுநாள் காலையில் அலுவலகம், உள்ளே நுழைந்ததும் சிரித்த முகத்துடன் வரவேற்ப்பு கிடைத்தது, வரவேற்ப் போடு நிற்காமல், "How are you doing?" என்று அவர் கேட்க, "good" என்று கூறிவிட்டு வந்து Google லில் தேடினேன் சொன்னது சரிதானா என்று. அடுத்த 5 நிமிடத்தில் status meeting இருப்பதாக அழைப்பு வந்தது, அதற்குள் முடித்து விடலாம் என rest room க்கு சென்று அவசரமாக கடனைக்  கழித்துக்கொண்டிருக்க, மீண்டும் ஒருவர் "How is it going?" என்றார். எதைக் கேட்கிறார் என்று புரியாததால்,அசட்டுச் சிரிப்பை பதிலாக்கிவிட்டு ஓடிவந்தேன். status meeting ல் இருவர் தவிர பிறர் எவர் பேசிய ஆங்கிலமும் புரியவில்லை. அந்த இருவரும் இந்தியர்கள்.

தவறான முடிவு எடுத்து விட்டோம் என்பது கால தாமதமாகத்தான் புரிந்தது. இங்கேயே சில காலம் இருந்து சமாளிப்பதை தவிர வேறு வழியில்லை என்பதை நினைவில் நிறுத்தினேன். இப்போது எனக்கிருக்கும் சிக்கல்கள் என்னென்ன வென்று எழுதினேன். பல மறு பரிசீலனைக்குப் பின் ஒரே ஒரு சிக்கல் மட்டும் மிஞ்சியது.

அமெரிக்கர்கள் பேசும் ஆங்கிலம் சரியாகப் புரியவில்லை

இந்த சிக்கலுக்கு என்ன தீர்வு.

"அவர்கள் பேசிய விடயத்தை அவர்களையே  இமெயிலில் அனுப்பச் சொல்லலாம்"

"Status meeting ல் அரைகுறையாக புரிந்ததை, திரும்ப நான் இமெயிலில் அவர்களுக்கு அனுப்பி சரிபார்த்துக் கொள்ளலாம்" 

அல்லது

"ஊருக்கு ஓடிவிடலாம்"  (புறநானூறு படித்துவிட்டு வந்த மாணவன் இந்த முடிவு எடுப்பது சரியாகாது)

மேற்ச்சொன்ன எந்த வழிமுறைகளும் திருப்தி  அளிக்காததால். அமரிக்க ஆங்கிலத்தின் பேச்சு வழக்கை புரிந்து கொள்ள நான் தேர்வு செய்த ஆயுதம் "ஆங்கிலப் படம்".

கவனம் சிதறக் கூடாது என்பதற்காக "G, PG, PG-13" சான்றிதழ் பெற்ற, வசனங்கள் நிறைந்த ஆங்கிலப் படங்களை தேர்வு செய்தேன். தொடக்கத்தில்  "Subtitle" எனும் பேசும் வார்த்தைகளை, எழுத்துக்களாக திரையில் காட்டும் நுட்ப்பத்தை உபயோகித்துக் கொண்டேன்.

சில நாட்கள் கழித்து "Subtitle" சேவையை நிறுத்து விட்டு (சில மணித்துளிகள்) கதாப்பாத்திரங்கள் பேசுவதை மட்டும் கேட்டு அதை எழுதி வைத்துக்கொண்டு மீண்டும் Subtitle உபயோகித்து நான் எழுதியதை சரிபார்ப்பேன்.

இதன் அடுத்த கட்டம், படத்தில் ஒருவர் பேசும் அல்லது கேட்கும் கேள்விக்கு, (படத்தின் ஒலியை சுழியாக்கி விட்டு "mute") நான் பதிலளிப்பேன்.

அலுவலகத்தில் ஒவ்வொரு கலந்துரையாடலின் போதும் புரிகிறதோ இல்லையோ என் கவனம் முழுவதையும் செலுத்தி பேசுபவர் உண்டாக்கும் ஒலி அலைகளை அப்படியே உள்வாங்கிக் கொள்வேன்.

நான் முயற்சி செய்த இந்த பரிசோதனைகள் சிறந்த பலனை அளித்தன. அதோடு நில்லாமல் சந்தர்ப்பங்களை நானே உருவாக்கிக் கொண்டு அமெரிக்கர்களுடன் உரையாட ஆரம்பித்தேன். உரையாடலின் பெரும் பகுதி தொழில் சம்பந்தம் இல்லாமல் பொதுவானதாக இருக்கும்படி பார்த்துக் கொண்டேன் (தொழில் சம்பந்தமான கலந்துரையாடலில் எந்த சிக்கலும் இல்லை என்பதால்).

என் தன்னம்பிக்கையை இரண்டு படிகள் குறைத்த ஆங்கிலத்தின் மேல் ஏறி 10 படிகள் உயர்ந்ததாக ஒரு புத்துணர்வு கிடைத்தது.

மனைவி, மகன் என்று ஆனபிறகு மீண்டும் அமெரிக்க வாய்ப்பு. மகன் பேசத் தொடங்கும் முன்பாகவே அமெரிக்கா வந்து விட்டதால், சுற்றிலும் இருந்த ஆங்கிலம் அவனை இருக்கப் பற்றிக் கொண்டது. நுனி நாக்கில் ஆங்கிலம் பேசவும் செய்கிறான். ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் நாங்கள் பேசும் தமிழ் அவனுக்கு ஓரளவிற்குப் புரிந்தாலும் அவனால் தமிழில் பதில் கூற இயலவில்லை. தமிழை முந்திக் கொண்டு வந்து விடுகிறது ஆங்கிலம்.

இன்னும் சிறுது காலம் இங்கே இருந்து பணம் சேர்த்து விட்டு ஊருக்குப் போகலாம் என்றால், என்னை ஆங்கிலம் வாட்டியது போல அவனைத் தமிழ் வாட்டுமோ என்ற கவலையும் சேர்ந்து கொ(ல்)ள்கிறது.

மீண்டும் மொழிப் பாடம் தொடர்கிறது எனக்கு...

A - அ, அ....   அம்மா....

2 comments:

  1. Good title Anna... I have worried about various other issues for these kids but I have never thought about this language problem.. really an important issue.

    ReplyDelete