cookie

Thursday, October 10, 2013

மனக்கணக்கு

செல்வம் நீ அமெரிக்கா போயி மூனு வருஷம் ஆச்சு, எப்போடா திரும்ப வருவ? அம்மாவ பாக்கனும்னு உனக்கு தோணலையா ?

இந்த வருஷம் வந்துருவேம்மா, சென்னைல ஒரு வீடு வாங்கணும். என்னோட friends குமாரு, கணபதி  எல்லாரும் வாங்கிட்டாங்க, நானும் வாங்க வேண்டமா அதுக்குதானமா இங்க இருக்கேன். உனக்கு தெரியாதா?

நமக்குத்தான் ஊர்லையே வீடு இருக்கே கண்ணு அது போதாதா? சென்னைல எதுக்குப்பா வீடு?      

எம்மா, நாலு வருசத்துக்கு முன்னால கணபதி, 25 லட்சத்துக்கு வாங்குன வீடு இப்போ 35 லட்சம் விக்குது.

ஏம்ப்பா கணபதி வீட்ட விக்கப் போறானா?

இல்லம்மா !!!

அப்புறம் அது எத்தன லட்சத்துக்கு வித்தா என்ன?

சும்மா இரும்மா உனக்கும் ஒன்னும் தெரியாது.

பொண்ணு வீட்டுக்காரங்க நேர்ல பார்க்காம எதுவும் பேச முடியாதுன்னு சொல்றாங்க பா.

நேர்ல பார்க்கணும்னா, online ல வரச்சொல்லு  Skype ல பேசுறேன்.

அதுக்கெல்லாம் அவங்க ஒதுக்க மாட்டாங்கப்பா.

இன்னும் ரெண்டு மாசத்துல வந்துருவேன், முதல்ல வீடு அப்புறம் கல்யாணம். சரியம்மா?

நீ வந்தாலே போதும்பா.

--------*******-----------

என்ன செல்வம் போன்ல யாரு அம்மாவா? என்ன சொல்றாங்க?

ஆமா பாலா,  ஊருக்கு வரச்சொல்றாங்க.

ஒரு தடவ போய் பாத்துட்டு வர வேண்டியதுதான?

போகலாம், ticket ஒன்னேகால் லட்ச ரூபாய் ஆகும் அதான் யோசிக்கிறேன். வீடு வாங்குறதுக்கு down payment க்கு மட்டும் 12 லட்ச ரூபாய் சேர்த்துட்டா போதும் அப்புறம் ஊருக்கே போயிடுவேன்.

சேத்துட்டீங்களா?

கிட்ட தட்ட 10 லட்சம் சேத்துட்டேன்.

VISA எப்போ முடியுது செல்வம் ?

2 மாசத்துல முடியுது extension apply பண்ணா இன்னொரு 3 வருஷம் கெடைக்கும்.

Extension க்கு  apply பண்ண வேண்டியதுதான?

போதும் பாலா ஊருக்கு போயிற வேண்டியதுதான். extension approve ஆயிடிச்சின்னா அப்புறம் போக மனசு வராது.

இந்த ஊருக்குன்னு ஒரு ராசி இருக்கு செல்வம். வந்தவங்க யாரையும் திரும்ப விடாது.

கிரீன் கார்டு எல்லாம் வேண்டாமா செல்வம்?

எனக்கு ரேஷன் கார்டே போதும் பாலா.

ஆ ஹா ஹா ஹா...

--------*******-----------

7 நாட்களுக்குப் பிறகு

என்ன செல்வம் தூங்கலையா?

தூங்கிட்டுதான் இருந்தேன் பாலா, லேசா வயிறு வலிக்கிற மாதிரி இருந்தது.

மதியம் சாப்ட சாப்பாடு சேரலையா?

குமார் வீட்ல birthday party ல சாப்டேன். வெல கம்மியா இருக்கணும்னு வால்மார்ட் ல இருந்து expiry ஆன சிக்கன் வாங்கி சமச்சிட்டங்கலான்னு தெரியல !

ஆ ஹா ஹா ஹா...

ஆ, ஐயோ, அம்மா........

இது சரியா வராது செல்வம் வா உடனே ER (emergency room) க்கு போகலாம்.

இந்த நாசமாப் போன நாட்ல govt office மாதிரி 5 மணிக்கு மேல hospital லையும் மூடீர்ரானுங்க.

.......

.......

.......


பாலா கார speed limit க்கு உள்ளயே ஓட்டுங்க, இன்னைக்கி சனிக்கிழம வேற, மாமா எங்க வேணா நிப்பான். அய்யோ அம்மா...

நீங்க பேசாம வாங்க செல்வம் நான் பாத்துக்கிறேன்.



ER ல்


செல்வம், form fill பண்ணனும் உங்க இன்சூரன்ஸ் கார்டு கொடுங்க.

என்னோட wallet ல இருக்கு பாலா எடுத்துக்கோங்க.

.....

.....

.....

செல்வம் எல்லா formalities ம் முடிஞ்சது. நான் இங்க wait பண்றேன். எதாவது வேணும்னா சொல்லுங்க.


--------*******-----------

இரண்டு நாட்களுக்குப் பிறகு

ரொம்ப thanks பாலா.

no problem செல்வம்.

அம்மாகிட்ட இருந்து போன் வந்ததா?

ஒரு தடவ பண்ணாங்க, நானே சமாளிச்சிட்டேன்.

Thanks பாலா.

--------*******-----------

3 வாரங்களுக்குப் பிறகு

செல்வம், உங்களுக்கு mail வந்துருக்கு.

CHASE லிருந்து credit card தர்றேன்னு மெயில் வந்துருக்கா?

இல்ல செல்வம், NT Health னு போட்ருக்கு. hospital bill னு நெனைக்கிறேன்.  

குடுங்க பாக்குறேன்.

.....

.....

.....


எவ்வளவு bill வந்துருக்கு செல்வம்?

$18,393.44

Insurance company எவ்வளவு pay பண்ணுவாங்க?

$2,000.00

Wednesday, September 4, 2013

ஆசிரியர் பா

இறைவன் ஈன்ற
ஆசுடைய மாக்களை
ஆசு இரிய மனிதர்களாக்க - எண்ணையும்
எழுத்தையும் அறிவித்து, இவன்
இவன்தான் என அண்டத்தை அறியவைத்த ஞாயிறு

எங்கள் கண்கள் காணாது காட்சிகளை
ஞானம் எனும் நீங்கள் அருளிய
ஒளி இல்லையெனில்.

விண்ணைத்தொட
எங்களை ஏற்றுவித்த ஏணி
விந்தைகள்
பலவும் அறியவைத்த ஞானி

போற்றுதலுக்கு உரியவ(ர்)ன்  இறைவன்
(மட்டும்)  அல்ல, அவனின் படைப்பை
முழுமையாக்கிய ஆசிரியர்தான்.



என்னை ஏற்றிவிட்ட படிகள்


தொடக்கம்
      திரு. சௌந்திரராஜன்

நடுநிலை
     திருமதி. தங்கரத்தினம் (நிஜப்பெயர் மட்டுமல்ல, காரணப் பெயரும்கூட) 
     திரு. தங்கச்சாமி
     திருமதி. கனலட்சுமி 
     திருமதி. ரீட்டா

மேல்நிலை
     திரு. கந்தசாமி
     திரு. ராமசாமி
     திரு. பாண்டியராஜன்

உயர்நிலை
     திரு. மூர்த்தி 
     திருமதி. அய்யம்மாள்
     திரு. ராஜாமணி
     திரு. ஸ்ரீனிவாசன்

இளங்கலை
      திரு. துளசிதாஸ்
      திரு. ராமசாமி
      திரு. வேலாயுதம்
      திரு. பெருமாள்சாமி
      திரு. சிங்காரவேலன்

முதுகலை
      திரு. வெங்கடேஷ்பாபு
      திருமதி. மாயா
      திருமதி. சோபின் சீலி
      திரு. ஜான்
      திரு. ராமலக்ஷ்மி

Wednesday, July 17, 2013

மிதிலையை தேடி

"ஆறு வருஷமா ஒரே Company ல வேலை பாக்குறேன்னு சொல்லி, பொண்ணு  வீட்ல என்ன வேணாம்னு சொல்லிட்டாங்க" 

சமீபத்தில் மணமகள் தேடி வரும் நண்பர் என்னிடம் கூறியது. 

கம்பராமாயணத்தில் சிறந்த பகுதி "சுந்தர காண்டம்" என்பது பொதுவான கருத்து. ஆனால், எனக்குப் பிடித்த பகுதி "அயோத்தி காண்டம்". அதன் காரணம், (Handsome) ராமனும், (Gorgeous) சீதையும் சந்தித்துக் கொண்ட அந்த நிகழ்வுகளை அவர் விளக்கிய விதம்.

"பெண் பார்க்கும் படலத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்".


மன்னிக்கணும், இன்னும் நான், என்னப்பத்தி உங்ககிட்ட அறிமுகம் செஞ்சுக்கல.

எம் பேரு வெங்கடேசன் ராஜாராம்.

நீங்க என்ன "வெங்கட்" ன்னே கூப்பிடலாம். M. C. A படிச்சிட்டு, ஒரு தனியார்   நிறுவனத்துல வேலை பார்க்கிறேன். ரெண்டு வருசத்துக்கு முன்னாலதான்  MIDDLE CLASS ங்கிற STATUS  ல  இருந்து UPPER MIDDLE CLASS ங்கிற STATUS க்கு UPGRADE ஆனேன் (ஊதிய உயர்வுக்குப் பின்). 

அப்பா, GOVT. EMPLOYEE (கையூட்டு பெற முடியாத, பெற விரும்பாத துறை), இன்னும் 2 YEARS ல RETIRED ஆயிருவார். அம்மா அன்பான குடும்பத் தலைவி.

கூடப் பொறந்தவங்க  இல்லை. அப்பா, அம்மாவுக்கு ஒரே பையன். அவங்க சொல்றபடி கேக்குற நல்ல பையன் (அப்படீன்னு அவங்க நெனச்சிக்கிட்டு இருக்காங்க).

எனக்கு பொண்ணு பாக்கும் போது நடந்ததத்தான் உங்ககிட்ட சொல்லப் போறேன். 

என்னோட FRIENDS எல்லோரும் CAMPUS லையே SELECT ஆயிட்டாங்க, நான் மட்டும்தான் தேடி அலஞ்சிகிட்டு இருந்தேன்.

என்ன சொல்றேன்னு புரியலையா? படிக்கும்போதே LOVE பண்ணி, அப்புறம் கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிட்டாங்க. நான் மட்டும்தான் எங்க அப்பா அம்மாவோட RECOMMENDATION காக WAIT பண்ணேன்.

பொண்ணு தேட ஆரம்பிக்கிறதுக்கு முன்னால, அம்மா கிட்ட என்னோட REQUIREMENTS எல்லாம் சொன்னேன். அதையே உங்ககிட்டையும் சொல்றேன்.
       
1. SLIM மா அழகா இருக்கணும், குறிப்பா என்ன விட COLOR ரா இருக்கணும்.
     
இதே மாதிரி பொண்ணுங்களும் கேட்டா, உனக்கு எப்படி கல்யாணம் ஆகும்.?

2. B. E / M.C.A / M.Sc படிச்சிருக்கணும்.    

எதுக்கு வேலைக்கு அனுப்பலாம் னு PLAN னா?

3. உயரம் 5, 6" to 5, 8" இருக்கணும்

கல்யாணத்துக்கு பொண்ணு வேணுமா, இல்ல Military க்கு ஆள் வேணுமா?

4. நகை, பணம்னு எதுவும் வேண்டாம்
         
பரவயில்லையே... ஆச்சர்யகுறி

5. UPPER MIDDLE CLASS FAMILY யா, வீட்டுக்கு ஒரே பொண்ணா இருந்தா பரவால்ல.

இப்போ புரியுது உன்னோட தாராள மனசும், தொலைநோக்குப் பார்வையும்.

6. கவிதை எழுத தெரியனும், குறைந்தபட்சம் ரசிக்கவாவது தெரியனும்.

எதுக்கு, உன்னோட கிறுக்கள்கள வசிக்க ஒரு ஆளாவது வேணுமோ?

7. தலைமுடி இடுப்பு வரைக்கும் இருக்கணும்.

இப்பெல்லாம், பொண்ணுங்களுக்கும் வழுக்கை விழுது, ரொம்ப கஷ்டம்....

8. நல்லா "தமில்" பேசத் தெரியனும்.

உனக்கு "தமிழ்" னு  சொல்லவே தெரியலையே...

   
நான் சொன்ன ஒவ்வொரு POINT க்கும் நீங்க உங்க மனசுக்குள்ள பச்ச, பச்சையா என்ன நினைச்சீங்கன்னு, எனக்கு நல்லா தெரியுது.

வேலைக்கு APPLY பண்ணும்போது கூட, நான் இவ்வளவு சிரமப்படலங்க. ஆனா, இந்த பொண்ணுங்க வீட்ல கொடுக்க தயார் பண்ண BIO-DATA இருக்கே, அத முடிக்கிறதுக்குள்ள போதும், போதும்னு ஆயிடிச்சி. ஒரு வழியாக தரகர் கிட்ட MODEL ஒன்ன வாங்கி, அம்மா, அப்பா, உதவியோடு கடைசியாக எனக்குன்னு ஒரு BIO-DATA தயார் பண்ணிட்டேன்.

அதுக்கு முன்னால வரைக்கும், சினிமா பாக்குறது இல்லாம எனக்கு வேற எந்தப் பொழுது போக்கும் கிடையாது.  எனக்கு BIO-DATA மாதிரி கொடுத்த மகராசன், "புத்தகம் படிப்பது" னு அவரோட பட்டியல்ல போட்டு இருந்தாரு. நல்லா இருந்ததுன்னு அத சுட்டு என்னோட BIO-DATA ல போட்டுக்கிட்டேன். ஒருத்தங்க கிட்ட இருந்து நல்ல விசயத்த கத்துக்கிறது நல்லதுதான, அதுனால தான்.

என்ன கொடுமை சரவணன் இது? 

இப்போதாங்க முக்கியமான கட்டம், "PHOTO".

நம்ம ஊர்ல, ஒரு STUDIO ல கூட யாருக்கும் PHOTO எடுக்கவே தெரியலங்க.

இப்போ என்ன எடுத்துக்கோங்க, நேர்ல பார்க்க எவ்வளவு SMART டா, HANDSOME மா இருக்கேன்.

கடவுளே...

PHOTO ல பார்த்தா, ரொம்ப சுமாராத்தாங்க தெரியுது.

ஜட்டில அய்யய்யோ தப்பு,  சட்டியில என்ன இருக்கோ அது தான அகப்பைல வரும்.

என்ன செய்ய? சுமாரா இருந்தாலும் போதும்னு, இருக்குற PHOTO வ குடுத்தேன். பெருசா எந்த RESPONSE ம் இல்ல.

கல்யாண வீடு, கோவில்னு ஒன்னு விடல. சொந்தகாரங்க யாரு கல்யாண  பத்திரிக்க குடுத்தாலும் சரி, எந்த நாளா இருந்தாலும், எந்த ஊரா இருந்தாலும் பரவாயில்லன்னு OFFICE க்கு LEAVE போட்டிட்டு கூட சுத்திப் பாத்தேன். ஒன்னும் அமையல.

இதுவரைக்கும் ஜாதக பொருத்தம் பார்க்க குடுத்த காசுல சென்னைல ஒரு வீடே வாங்கி இருக்கலாம்.

கொஞ்ச நாள் போனதுக்கப்பறம் எங்க அம்மாவே சொல்லிடுவாங்க. இந்த STAR க்கு, இந்த PLANET க்கு இந்த SATELLITE தான் பொருந்தும்னு. எங்க அம்மா பொருத்தம் பார்த்து சரின்னு சொன்னாதான் அடுத்து ஜோசியர்கிட்ட போறது.

அப்படித்தான் ஒரு நாளு அந்தப் பொண்ணோட ஜாதகம் வந்தது. அம்மாவும் பொருத்தம் இருக்குதுன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் என்ன பொண்ணப் போய் பாக்க வேண்டியதுதான். என்னோட முதல் அனுபவம்.

டார்க் பிரவுன் கலர் புடவை ல வந்தது பொண்ணு. நல்லா இல்லேன்னு சொல்ல முடியாது. ஆனா கொஞ்சம் அதிகமா சதைப்பிடிப்போடு இருந்தது. பெங்களுர்ல வேலை பாக்குறதா சொன்னாங்க.

சினிமா பார்த்து வளர்ந்த பலவீனமான கூட்டத்துல நானும் ஒருத்தன், அதனால பெட்டர்மாஸ் லைட் டேதான் வேணும்னுட்டு, அந்தப் பொண்ண வேண்டாம்னு சொல்லிட்டேன்.

அதுக்கு அடுத்த வாரம் எங்க வீட்ல இருந்து போன் பண்ணாங்க, எங்க ஊர்லையே இன்னொரு பொண்ணு இருக்குதுனு. அவங்க அந்தப் பொண்ண ஏற்கனவே பாத்துட்டாங்கலாம், எல்லாருக்கும் புடிச்சிருக்குதாம், நான் வந்தா மட்டும் போதும், பேசி முடிச்சிரலாம்னு சொன்னங்க.

வெள்ளிகிழமை OFFICE க்கு போறதுக்கு முன்னாலையே "லூயிஸ் பிலிப்பே" ஷோ ரூம்க்கு போய் லைட் கலர்ல ஒரு ஷர்ட் வாங்கிட்டேன். அந்த மாதிரி ஷர்ட்லதான் நான் கொஞ்சம் ப்ரைட்டா தெரிவேன். அடுத்த நாள், சலூன்ல போய் ஷேவ் பண்ணிட்டு காலைலையே ரெடி ஆயிட்டு, சாயங்காலம் வரைக்கும் வெயிட் பண்ணேன்.

05:00 மணிக்கு கிளம்பி பொண்ணு வீட்டுக்கு போனோம், முதல் மாடில வீடு. படில ஏறி உள்ள போகும் போது பொண்ணோட அம்மா வந்தாங்க. எங்கள ஹால்ல உட்காரச் சொல்லிட்டு, ரூக்குள்ள போயிட்டாங்க கொஞ்ச நேரம் கழிச்சி வந்தாங்க. காபி, பலகாரம் எல்லாம் பொண்ணோட அம்மாதான் குடுத்தாங்க. கடைசி வரை பொண்ணு வெளிய வரவே இல்ல. எங்க மாமா  "பொண்ண கூப்பிடுங்கன்னு" கேட்கவே செஞ்சிட்டாரு. அப்புறமா பொண்ணு வெளிய வந்தாங்க. என்னோட முதுகிக்கு பின்னால நின்னிட்டு அப்படியே உள்ள போயிட்டாங்க. அடுத்த 2 நிமிஷத்துல நாங்களும் கிளம்பிட்டோம். கடைசிவர பொண்ணப் பாக்கவே இல்லை.

ரெண்டு நாள் கிழிச்சிதான் விசயமே தெரியவந்துச்சி, எங்க அம்மா, அப்பாவ பாத்துட்டு நானும் கலரா இருப்பேன்னு பொண்ணோட அம்மா தப்பா நினைசிட்டாங்களாம். என்ன முதல்லையே பாத்திருந்தா, எங்கள பொண்ணு பாக்க வரச்சொல்லி இருக்க மாட்டங்களாம்  

அதுக்கு அப்புறம் தான் கண்ணாடில என் முகத்த இன்னொரு தடவ நல்லா பார்த்தேன். என்னுடைய கற்பனை மனைவிக்கு அதுவரைக்கும் போட்டிருந்த மேக்கப்ப கொஞ்சம் மாத்திட்டேன். ரெண்டு மூணு வாரம் ஆயிரிச்சி மனசுல பட்ட அந்தக் காயம் சரியாக.

அதுக்கப்புறம் எங்க வீட்ல தெளிவா சொல்லிட்டேன், நான் கலர் கம்மிதான்னு முதல்ல சொல்லிரனும்,போட்டோவயும் காட்டிரணும்.அதுக்கப்புறமும் பொண்ணு வீட்ல புடிச்சிருந்தாவேணா  போயி பொண்ணப் பாக்கலாம். இப்படி சும்மா சும்மா அவமானப் படமுடியாதுனு.

நான் சொன்ன மாதிரியே எங்க வீட்லயும்,என்னப்பத்தி சொல்லி போடோவையும் காட்டி ஒரு பொண்ண முடிவு பண்ணாங்க. ரெண்டுபேர் வீட்லையும் எல்லாருக்கும் புடிச்சி போச்சி. நானும், பொண்ணும் நேர்ல பாக்கணும் அவ்வளவுதான். பொண்ணு, சென்னைலதான் வேலை பாக்குறதா சொன்னங்க. அதனால ரெண்டுபேர் வீட்லயும் பெரியவங்க சென்னைக்கு வந்துட்டு, வடபழனி முருகன் கோவில்ல வச்சி பொண்ணு பாக்குறதா பேசி முடிச்சாங்க.

வெள்ளிக்கிழம காலைலே எங்க அப்பா, அம்மா MORNING TRAIN ல சென்னைக்கு கிளம்பிட்டாங்க. கிளம்புறதுக்கு முன்னால எனக்கும்,பொண்ணு வீட்டுக்கும் போன் பண்ணி "கிளம்புரோம்னு" சொல்லிட்டாங்க.

ஒரு மூணு மணிநேரம் கழிச்சி மறுபடியும் எங்க அம்மா எனக்கு போன் பண்ணாங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, பொண்ணோட தம்பி எங்க அப்பாகிட்ட போன்ல பேசினதாகவும், நாளைக்கு பொண்ணு வீட்ல இருந்து யாரும் கோவிலுக்கு வரப்போறது இல்லைன்னு சொன்னதாகவும்,  சொன்னங்க. வேற எதுவும் சொல்லாம உடனே கட் பண்ணிட்டாங்காலமா. மறுபடி எங்க அப்பா போன் பண்ணா, யாருமே எடுத்து பேசலன்னு சொன்னங்க.

வெறுப்பின் உச்சத்துக்கே போன என்னோட அப்பாவும், அம்மாவும் அடுத்த ஸ்டாப்லயே இறங்கி அப்படியே திரும்ப ஊருக்கு போயிரலமானு முடிவு பண்ணிட்டாங்க. அப்புறம் நான் தான் சமாதனப் படுத்தி சென்னைக்கு வரச்சொன்னேன்.

திங்கள் கிழமை திரும்ப எங்க ஊருக்கு போன அப்பா, தரகர்கிட்ட விசாரிக்கும் போதுதான் தெரிய வந்தது. அந்தப் பொண்ணு, கூட வேலை பாக்குற பையனை வீட்ல சொல்லாம ஏற்கனவே கல்யாணம் பண்ணிக்கிட்டதாம். இந்த விஷயம் அவங்க வீட்டுக்கே வெள்ளிகிழமதான் தெரியுமாம். கோபமா போன எங்கப்பா, இந்த விஷயம் தெரியவும் பொண்ணோட அப்பாவுக்கு அறுதல் சொல்லிட்டு பாவமா திரும்பி வந்தாரு.    

இந்த மாதிரி மொத்தமா நாலு Incidents நடந்தது எனக்கு. அதுக்கப்புறம், இனிமே பொண்ணே பாக்கப் போறதில்லன்னு முடிவு பண்ணிட்டேன். இந்த சமயத்துலதான் வேலை விஷயமா வெளிநாடு போக வேண்டி வந்தது. இத காரணமா வச்சி எங்க வீட்ல சொல்லிட்டேன். நீங்களே ஒரு பொண்ண பார்த்து முடிவு பண்ணி, கல்யாணம் Fix பண்ணிட்டு, என்னக்கு சொல்லுங்க தாலி கட்டுறதுக்கு மட்டும் நான் வர்றேன்னு.

5 மாசத்துக்கு அப்புறமா, மறுபடியும் கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சது. "பொண்ணு வீட்ல பாக்கணும்னு சொல்றாங்க"னு எங்கம்மா போன் பண்ணாங்க. SKYPE ல பார்க்கலாம்னு DATE, TIME Fix பண்ணிட்டோம்.

அந்த நாளும் வந்துச்சி, SKYPE ல VIDEO வ ON பண்ணா CALL  CUT ஆகுது. LOW BANDWIDTH காரணமா ரெண்டு பேருடைய முகம், ரெண்டு பேருக்கும் தெரியல. மறுபடியும் இன்னொரு நாள் TRY பண்ணினோம், அப்பாவும் இதே PROBLEM தான்.

இதுக்கு இடைல என்ன நடந்ததுன்னு தெரியல, பொண்ணு வீட்ல ஒத்துகிட்டு கல்யாணத்துக்கு நாள் பார்த்துட்டாங்க. நான் இல்லாமலே நிச்சயதார்த்தம் முடிஞ்சது.

நிச்சயதார்த்த போட்டோ தான் எனக்கு அனுப்பினாங்க.போட்டோ வ பார்த்துட்டு மோசம் இல்லன்னு தோணுச்சி.கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாலதான் ஊருக்கு போனேன், என் வருங்கால மனைவியை பார்க்க.
            
பொண்ணு, அவங்க பாட்டி வீட்ல இருந்தாங்க. எங்க வீட்டுக்கு பக்கத்துலதான் அவங்க பாட்டி வீடு, என்னப் பாக்க  வெட்கப்பட்டுகிட்டு கதவுக்கு பின்னால  போய் ஒளிஞ்சிருந்த டார்லிங்க, எங்க அம்மாதான் வெளிய கூட்டி வந்தாங்க.

1. Slim மா, அழகா, என்ன விட COLOR ரா.

2. M.Sc படிப்பு     

3. உயரம் 5, 6"

4. நகை, பணம் -  (இஹிஹிஹி )

5. Upper Middle Class Family, வீட்டுக்கு ஒரே பொண்ணு.

6. கவிதை ரசிக்க தெரியும்.

7. தலைமுடி இடுப்புக்கு மேல வரைக்கும்.

8. நல்லா "தமில்" பேச தெரியும்.


இன்னமும் நம்ப ஊர்ல யாருக்கும் சரியா PHOTO எடுக்க தெரியல.

கல்யாணத்துக்கு இன்னும் 6 நாள் காத்திருக்கனுமா...?

Tuesday, July 16, 2013

தந்தி

 163 வருடங்களாக இயங்கிவந்த தந்தி சேவைக்கு, ஜூலை 14 ம் நாள் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தரித்திரத்தின் காரணமாக நிறுத்தப்பட்ட தந்தி சேவை இனி சரித்திரத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும்.

இனிவரும் ஆண்டுகளில், "வரலாற்றில் இன்று" என்று ஜூலை 14 ம் நாள், இந்திய தந்தி சேவையும் சேர்த்து தொலைக்காட்சியில் காட்டப்படும்.    

80 களின் இடையில் விஸ்வரூபம் எடுத்து இயங்கிய இந்த சேவையில், சமயங்களில் 6 கோடி தந்திகள் கூட ஒரே நாளில் அனுப்பிய மெடிக்கல்  மிராக்கில்களும் அடங்கும்.

இது போன்ற பல சாதனை விளக்கப் பட்டியல்களை பல முறை நீங்கள் சமீபத்தில் படித்திருப்பீர்கள் என்பதால், மேலும் உங்களை புள்ளி விவரம் கொடுத்து சலிப்பை ஏற்படுத்த விரும்பாமல் சொல்ல விரும்பிய செய்திக்கு வருகிறேன்.

நான் கொடுத்த முதல் (கடைசி) தந்தி...

அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அரையாண்டு தேர்வு விடுமுறையில்,வீட்டில் இருப்பவர்களின் உயிரை தவணை முறையில் எடுத்துக் கொண்டிருந்தேன். இதே சமயத்தில் ஊரில் இருந்து மாமாவின் புதல்விகள் இருவர் விடுமுறையில் என்னிடம் அடி வாங்கு வதற்கு என்றே பாட்டி வீட்டிற்கு வந்திருந்தனர்.

பாட்டி வீடும், எங்கள் வீடும் வெகு அருகில் இருந்தன. விடுமுறையில் என்னுடைய முக்கிய பொழுதுபோக்கு என்னவென்றால் அக்கா, தங்கை, தம்பி (தம்பி,தங்கை இருவரும் சித்தியின் வாரிசுகள்) மற்றும் மாமா மகள்கள் அனைவரையும் பட்டியல் போட்டு பந்தாடுவது.

அரைமணிக்கு ஒரு முறை யாராவது ஒருவர் என் அம்மாவிடம்  என்னைப் பற்றிய புகாருடன் பஞ்சாயத்துக்கு போய் நிற்ப்பார்கள். எங்கள் வீட்டின் IRON MAN வரும் வரை இது இப்படியே தொடரும்.

இந்த சமயத்தில் ஒரு நாள், காலை 10:00 மணி ஆகியும் அன்றைய அடிகளை வாங்க அன்னக்கிளிகள் வரவில்லை. சிறுது நேரம் கழித்து பாட்டிதான் வந்தார். மாமாவின் மூத்த மகள் பூப்படைந்து விட்டதாகவும் அந்த செய்தியை மாமாவின் வீட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறிக்கொண்டிருந்தார்.

அன்றைய தினம் எங்களின் உற்றார் உறவினர் யார் வீட்டிலும் தொலைபேசி கிடையாது. விரைவாக செய்தி அனுப்ப தந்திதான் ஒரே வழி, கையில் கொஞ்சம் காசு கொடுத்து (சுருக்கமாக) தந்தி கொடுக்க என்னை அனுப்பினர்.

இந்த நிகழ்விற்கு சில நாட்களுக்கு முன்பு, எங்கள் வகுப்பு ஆசிரியை தங்கரத்தினம் அவர்கள், அவரின் சொந்த ஆர்வத்தாலும், தன்னுடைய மாணவர்களின் நடைமுறை வாழ்விற்கு தேவையான அறிவை வளர்த்துக் கொள்ளவும் பல முயற்சிகளையும் எடுப்பார்கள். அதில் ஒன்றுதான் தந்தி எவ்வாறு அனுப்பவேண்டும் என்பது குறித்த விளக்க வகுப்பு. 

"நானெல்லாம் எதுக்கு தந்தி அடிக்கப் போறேன்", என்ற எண்ணத்தில் அரைகுறையாக ஏதோ கற்றுக்கொண்டதாக நினைவு.

பணத்தை வங்கிக் கொண்டு, கோவில்பட்டி மெயின் ரோடு,  பாரத ஸ்டேட் வங்கிக்கு அருகில் இருந்த தந்தி அலுவகத்திற்கு சென்றேன். அலுவலரிடம் இருந்து படிவம் பெற்றுக்கொண்டேன். அனுப்புநர் மற்றும் பெறுனர் குறித்த விவரம் நிரப்பப்பட்டு விட்டது. அடுத்தது செய்தி...

முதலில் அனுப்ப வேண்டிய செய்தியை தனியாக ஒரு காகிதத்தில் எழுதினேன்.

"<பெயர்> குத்த வச்சிட்டா "

"<பெயர்> சமஞ்சிட்டா."

நல்லா இல்லையே, சரி இப்படி சொல்லுவோம்.

"<பெயர்> பெரிய மனுசி ஆயிட்டா. மஞ்சள் தண்ணி நாளைக்கு ஊற்றுகிறோம். உடனே வரவும் "

அடுத்து தான் "Mission: Impossible", இந்த செய்தியை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்வது எப்படி?

இத அப்படியே மாத்துவோம், அவ்வளவு தானே. என்று மனதை தேற்றிக் கொண்டு பலமுறை முயன்றும் செய்தியை தொடங்கக்கூட முடியவில்லை.  தந்தி அலுவலரிடமும் உதவி கிடைக்கவில்லை. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, அருகில் மிடுக்கான உடை அணிந்த ஒருவர் தந்தி படிவத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்தார். அவரிடம் உதவியை நாடலாம் என்று முயன்று பார்த்தேன்.

நான் கூறிய செய்தி அனைத்தையும் முழுமையாக கேட்டுவிட்டு, என்னைப் பார்த்து  "என்ன படிக்கிற" என்றார். 8 ம் வகுப்பு என்று நான் கூறியதும். என்னையும் இந்த சமுதாயத்தையும் கடுமையாக சாடினார். 8ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு இந்த சாமர்த்தியம் கூட இல்லையே என்று. போனால் போகட்டும் நமக்கு உதவி செய்தால் போதும் என்று நினைத்தேன் ஆனால் கண்டிப்பாக மறுத்துவிட்டார்.

வேறு வழியில்லாமல் ஒரு ஓரமாக நின்று கொண்டேன், வேறு யாரிடம் உதவி கேட்கலாம் என்று காத்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் முந்தய அந்த மிடுக்கு மனிதரை கவனித்தேன். அவரும் செய்தியை சொந்தமாக எழுதவில்லை, யாரோ எழுதிக் கொடுத்ததை அச்சு பிறளாமல் பிரதி எடுத்துக் கொண்டிருந்தார்.

இனி யாரிடமும் உதவி கிடைக்காது என்பதால், என்னிடம் இருந்தே உதவியை பெற்றுக்கொள்வது என்று முடிவு செய்து மீண்டும் நான் ஏற்கனவே எழுதி வைத்த செய்தியை மொழி மாற்றம் செய்ய முயன்றேன்.

            
"<பெயர்> பெரிய மனுசி ஆயிட்டா. மஞ்சள் தண்ணி நாளைக்கு ஊற்றுகிறோம். உடனே வரவும் "

"<NAME> IS BIG LADY NOW. YELLOW WATER TOMORROW. START NOW".

இந்த செய்தி பொறிக்கப்பட்ட படிவம் அலுவலரின் கைக்கு மாறியது. எந்த சலனமும் இல்லாமல் அவரும் வங்கிக் கொண்டார். செய்தியும் காற்றில் பறந்தது.  

அன்று மாலையே என்னுடைய மாமாவும், அத்தையும் வந்ததன் மூலம், நான் அனுப்பிய தந்தி அவர்களுக்கு சென்று விட்டது, புரிந்தும் விட்டது என்பதை நினைத்த போது, கொல்கத்தாவில் இருந்து டைமண்டு ஹார்பர்க்கு முதல் தந்தி அனுப்பியவரின் வெற்றிக்களிப்பை அன்று நான் உணர்ந்தேன். 

Friday, April 19, 2013

A for அம்மா


புவி ஈர்ப்பு விசையை விளக்கிய நியூட்டன் கூட பணமீர்ப்பு விசையை விளக்க வில்லை. வர்க்க பேதம் ஏதும் இல்லாமல் அனைவரையும் எல்லையில்லாத ஆற்றலுடன் தன்னை நோக்கி வசீகரிக்கும் உலகின் உண்ணத விசை. அதன் ஆற்றலுக்கு நானும் தப்பவில்லை.

ஆங்கில வழிக்கல்வியே பெற்றோருக்கு கனவாக இருந்தபோதும், கல்விக்கண் திறந்தவர் பெயரில் இயங்கும் பள்ளிகளில் கூட கட்டணம் கடுமையாக இருந்ததால், வீட்டுக்கு அருகில் இருந்த அரசு உதவி பெறும் தமிழ்வழிக் கல்வி பயிற்றுவிக்கும் பள்ளியில் தஞ்சம் அடைந்தேன்.

ஆங்கிலம் எப்போதுதிருந்து என்னை மிரட்டத் தொடங்கியது என்று சரியாக நினைவில்லை, ஆனால் முதல் நடுநிலை (6 -8) வகுப்பில் விடுப்பு விண்ணப்பத்தில் தொடங்கியதாக நினைவு.மிகவும் எளிதான  விண்ணப்பத்தை ஆங்கில ஆசிரியை (பள்ளிக்குப் புதிதாக வந்தவர்) கரும்பலகையில் எழுதிவிட்டார். அப்போது பசுமரத்தாணி போல என் மூலையில் இறங்கியதுதான் "As I am suffering from fever"(இன்றுவரை அதுதான் என்னுடைய எல்லா விடுப்பு விண்ணப்பத்திற்கும் மூலம்).

மறுநாள் வீட்டுப்பாடமும் கொடுத்து விட்டார். "அண்ணனின் திருமணதிற்கு செல்வதற்காக விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்". ஆங்கிலப் புத்தகம் முழுவதும் தேடியும் அண்ணன் திருமணத்திற்குப் பெண் கிடைக்கவில்லை. என்ன செய்ய? இருக்கும் கொஞ்ச மூளையும் கசக்கிப் பிழிந்து காகிதத்தில் கொட்டிவிட்டேன்.

அன்று முதல் வகுப்பே ஆங்கிலம் தான். அகர வரிசையில் என் பெயர் முதலில் வருவதால், ஆசிரியை கையில் தானாக வந்து சரணாகதி அடைந்தது நான் எழுதிய விடுப்பு விண்ணப்பம்.அதைப்  படிக்கத் தொடங்கிய ஆசிரியை என்ன நினைத்தார் என்று தெரியவில்லை அனைவருக்கும் கேட்கும் வகையில் உரக்க வாசிக்க ஆரம்பித்து விட்டார்.

"As i am suffering from my brother's marriage" என்று போனது அந்த விண்ணப்பம். அதை வாசித்த போது, ஆசிரியை மாணவர்களிடம் வெடிச்சிரிப்பை எதிர்பார்த்திருப்பார் போல, ஆனால் வகுப்பு அமைதியாக இருந்தது. மற்ற மாணவர்கள் சலமில்லாமல் புத்தர் போல காட்சியளிப்பது ஏன் என்ற காரணம் புரியாமல் மற்ற விண்ணப்பங்களையும் விசாரணைக்கு ஆட்படுத்திய போதே அவருக்கு உண்மை புரிந்தது. அதிக ஓட்டுக்களைப் பெற்று முன்னணியில் இருந்தது நான் எழுதிய விண்ணப்பமே. எங்களின் சமயோசித புத்தியை பாராட்டி ஆளுக்கு 5 பிரம்படிகளை உள்ளங்கையில் பரிசாக வழங்கினார் (பிரம்பும் எங்கள் பணத்தில் வாங்கியது).

ஆங்கிலத்தில்தான் அரைகுறை என்றால் தமிழையும் போற்றிப் படிக்கவில்லை. வாத்தியாருக்கு அடுத்தபடியாக வசைச்சொற்கள் வாங்குவது வள்ளுவர்தான். அவரின் பெரும்பாலான குறள்கள் புரியவில்லை, அதன் சுவையை எவரும் புரியும் படி எங்களுக்குப் புகட்டவில்லை.
     
வருடங்கள் ஓடியது ஆனால் மூளையின் ஆங்கில மொழிப்பகுதி மட்டும் அப்படியே வளராமல் நின்று விட்டது. பொதுத் தேர்வுகளில் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெறுவதற்க்கான சில வழிமுறைகளை மட்டும் கண்டறிந்து கொண்டதால் எந்த பொதுத்தேர்வினிலும் தவறியதில்லை.

பள்ளியில் ஆங்கிலப் பாடம் மட்டும் தான் ஆங்கிலம், கல்லூரிக்குச் சென்ற பிறகு தமிழ்ப் பாடம் தவிர்த்து அனைத்தும் ஆங்கிலம். என்னைப் போன்ற மாணவர்களின் மொழிப் புலமையை புரிந்துகொண்டு பெரும்பாலான விரிவுரையாளர்களும், பேராசியர்களும் தமிழ்வழி ஆங்கிலக்கல்வி போதித்து தமிழ்த் தொண்டாற்றினர். இதன் உச்ச கட்டம் ஆங்கிலப் பேராசிரியர்களும் இந்த தமிழ்த் தொண்டில் தங்களை இணைத்துக் கொண்டதுதான்.

கல்லூரி பேராசிரியர்களின் தமிழ்த்தாகத்திற்கு முதுகலை பயிலும் போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.கல்விக்கு மட்டுமல்ல கருத்துப் பரிமாற்றத்திற்கும் கட்டாயமாக்கப் பட்டது கடல் கடந்து வந்த மொழி.

ஆங்கிலத்தில் நடக்கும் (seminar)கருத்துப் பரிமாற்ற வகுப்பில் பங்கேற்கவில்லை எனில் இந்தியர்கள் கண்டுபிடித்த அதே எண்தான்  (zero ) மதிப்பெண்ணாகும் என்ற கட்டாயத்தில் 3 மணிநேர தயாரிப்பிற்குப் பின் 35 நிமிட ஆங்கிலம் முழுமதிப்பெண் வாங்கிக் கொடுத்தது. தொடர்ந்து மூன்று வார்த்தைகள் பேசப் பயந்த எனக்கு இது ஒரு நல்ல தொடக்கமாக இருந்தது. சரியோ தவறோ எதற்கும் அஞ்சவில்லை.ஆங்கிலக் கால்வாயை குற்றாலீஸ்வரனுக்கு அடுத்து நான்  கடந்தது போல உணர்ந்தேன். என்னுள் புதைந்திருந்த அந்நியன் வேகமாகவும் விரைவாகவும் வெளிவரத் தொடங்கினான். நாட்கள் நன்றாக நகர்ந்து கொண்டிருக்க பணியில் சேர்ந்தபிறகு  Onsite வடிவத்தில் வந்தது ஆபத்து.

2008 மே மாதம், பல கனவுகளோடு விமானத்தில் ஏறினேன் அமெரிக்காவிற்கு.விமான நிலையத்திலேயே தொடங்கியது சிக்கல். ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து அமெரிக்க கண்டத்திற்கு குடிபெயர்ந்த, வஞ்சனையில்லாமல் குறுக்கும், நெடுக்கும் வளர்ந்த அந்த விமான நிலையப் பெண் அதிகாரி ஏதோ கேட்டார், புரியவில்லை மீண்டும் கூறுங்கள் என்றேன். மீண்டும் அதையே அதே சுவரத்தில் கேட்டார் (அதைத்தானே முன்பு புரியவில்லை என்றேன், மீண்டும் அதையே கேட்டால் புரிந்து விடுமா?), இம்முறையும் புரியவில்லை என்றேன். பூமாதேவியை மிஞ்சும் பொறுமை உடைய அந்தப் பெண்மணி ஒரு புழுவைப் பார்பதைப் போல என்னை பார்த்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டார். நான் விட்டால் போதும் என்று அந்த இடத்தை காலி செய்தேன்.

மறுநாள் காலையில் அலுவலகம், உள்ளே நுழைந்ததும் சிரித்த முகத்துடன் வரவேற்ப்பு கிடைத்தது, வரவேற்ப் போடு நிற்காமல், "How are you doing?" என்று அவர் கேட்க, "good" என்று கூறிவிட்டு வந்து Google லில் தேடினேன் சொன்னது சரிதானா என்று. அடுத்த 5 நிமிடத்தில் status meeting இருப்பதாக அழைப்பு வந்தது, அதற்குள் முடித்து விடலாம் என rest room க்கு சென்று அவசரமாக கடனைக்  கழித்துக்கொண்டிருக்க, மீண்டும் ஒருவர் "How is it going?" என்றார். எதைக் கேட்கிறார் என்று புரியாததால்,அசட்டுச் சிரிப்பை பதிலாக்கிவிட்டு ஓடிவந்தேன். status meeting ல் இருவர் தவிர பிறர் எவர் பேசிய ஆங்கிலமும் புரியவில்லை. அந்த இருவரும் இந்தியர்கள்.

தவறான முடிவு எடுத்து விட்டோம் என்பது கால தாமதமாகத்தான் புரிந்தது. இங்கேயே சில காலம் இருந்து சமாளிப்பதை தவிர வேறு வழியில்லை என்பதை நினைவில் நிறுத்தினேன். இப்போது எனக்கிருக்கும் சிக்கல்கள் என்னென்ன வென்று எழுதினேன். பல மறு பரிசீலனைக்குப் பின் ஒரே ஒரு சிக்கல் மட்டும் மிஞ்சியது.

அமெரிக்கர்கள் பேசும் ஆங்கிலம் சரியாகப் புரியவில்லை

இந்த சிக்கலுக்கு என்ன தீர்வு.

"அவர்கள் பேசிய விடயத்தை அவர்களையே  இமெயிலில் அனுப்பச் சொல்லலாம்"

"Status meeting ல் அரைகுறையாக புரிந்ததை, திரும்ப நான் இமெயிலில் அவர்களுக்கு அனுப்பி சரிபார்த்துக் கொள்ளலாம்" 

அல்லது

"ஊருக்கு ஓடிவிடலாம்"  (புறநானூறு படித்துவிட்டு வந்த மாணவன் இந்த முடிவு எடுப்பது சரியாகாது)

மேற்ச்சொன்ன எந்த வழிமுறைகளும் திருப்தி  அளிக்காததால். அமரிக்க ஆங்கிலத்தின் பேச்சு வழக்கை புரிந்து கொள்ள நான் தேர்வு செய்த ஆயுதம் "ஆங்கிலப் படம்".

கவனம் சிதறக் கூடாது என்பதற்காக "G, PG, PG-13" சான்றிதழ் பெற்ற, வசனங்கள் நிறைந்த ஆங்கிலப் படங்களை தேர்வு செய்தேன். தொடக்கத்தில்  "Subtitle" எனும் பேசும் வார்த்தைகளை, எழுத்துக்களாக திரையில் காட்டும் நுட்ப்பத்தை உபயோகித்துக் கொண்டேன்.

சில நாட்கள் கழித்து "Subtitle" சேவையை நிறுத்து விட்டு (சில மணித்துளிகள்) கதாப்பாத்திரங்கள் பேசுவதை மட்டும் கேட்டு அதை எழுதி வைத்துக்கொண்டு மீண்டும் Subtitle உபயோகித்து நான் எழுதியதை சரிபார்ப்பேன்.

இதன் அடுத்த கட்டம், படத்தில் ஒருவர் பேசும் அல்லது கேட்கும் கேள்விக்கு, (படத்தின் ஒலியை சுழியாக்கி விட்டு "mute") நான் பதிலளிப்பேன்.

அலுவலகத்தில் ஒவ்வொரு கலந்துரையாடலின் போதும் புரிகிறதோ இல்லையோ என் கவனம் முழுவதையும் செலுத்தி பேசுபவர் உண்டாக்கும் ஒலி அலைகளை அப்படியே உள்வாங்கிக் கொள்வேன்.

நான் முயற்சி செய்த இந்த பரிசோதனைகள் சிறந்த பலனை அளித்தன. அதோடு நில்லாமல் சந்தர்ப்பங்களை நானே உருவாக்கிக் கொண்டு அமெரிக்கர்களுடன் உரையாட ஆரம்பித்தேன். உரையாடலின் பெரும் பகுதி தொழில் சம்பந்தம் இல்லாமல் பொதுவானதாக இருக்கும்படி பார்த்துக் கொண்டேன் (தொழில் சம்பந்தமான கலந்துரையாடலில் எந்த சிக்கலும் இல்லை என்பதால்).

என் தன்னம்பிக்கையை இரண்டு படிகள் குறைத்த ஆங்கிலத்தின் மேல் ஏறி 10 படிகள் உயர்ந்ததாக ஒரு புத்துணர்வு கிடைத்தது.

மனைவி, மகன் என்று ஆனபிறகு மீண்டும் அமெரிக்க வாய்ப்பு. மகன் பேசத் தொடங்கும் முன்பாகவே அமெரிக்கா வந்து விட்டதால், சுற்றிலும் இருந்த ஆங்கிலம் அவனை இருக்கப் பற்றிக் கொண்டது. நுனி நாக்கில் ஆங்கிலம் பேசவும் செய்கிறான். ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் நாங்கள் பேசும் தமிழ் அவனுக்கு ஓரளவிற்குப் புரிந்தாலும் அவனால் தமிழில் பதில் கூற இயலவில்லை. தமிழை முந்திக் கொண்டு வந்து விடுகிறது ஆங்கிலம்.

இன்னும் சிறுது காலம் இங்கே இருந்து பணம் சேர்த்து விட்டு ஊருக்குப் போகலாம் என்றால், என்னை ஆங்கிலம் வாட்டியது போல அவனைத் தமிழ் வாட்டுமோ என்ற கவலையும் சேர்ந்து கொ(ல்)ள்கிறது.

மீண்டும் மொழிப் பாடம் தொடர்கிறது எனக்கு...

A - அ, அ....   அம்மா....

Thursday, April 18, 2013

பால்

திருமணத்திற்குப் பின் சில வருடங்கள் கிராமத்திலேயே வாழ்ந்துவிட்டு, இரத்த உறவுகள் கசந்ததால் அருகில் இருந்த கோவில்பட்டிக்கு தள்ளப்பட்டனர் என் பெற்றோர்கள். கிராமத்தில் இருந்தவரை தொழுவத்தில் மாடுகளும் வீட்டில் பாலும் நிறைவாக இருந்தது. ந(க)ர(க)த்திற்கு வந்த பிறகு புதிதாக வந்த சில பல சிக்கல்களோடு பாலும் சேர்ந்து கொண்டது.

தினமும், காலையில் பாலுடன் வீட்டு வாசலுக்கே வந்துவிடுவார் அண்ணாமலை. ஊரெங்கும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடினாலும் அண்ணாமலையின் கிணறு மட்டும் ஜீவ ஊற்றை தன்வசம் கொண்டிருந்ததால் நிறமற்று, மணமற்று, சுவையற்று இருந்த நீருக்கு சிறிதளவு பாலின் குணத்தை புகுத்தி குறைந்த விலையில் விநியோகித்து சமுதாயத் தொண்டாற்றினார் அண்ணாமலை.

ஆசுகவி காளமேகப் புலவர் புகழ்ந்து பாடிய அந்த ஆய்ச்சியின் பேரப்பிள்ளை தான் இந்த அண்ணாமலை.

"கார் என்று பேர் பெற்றாய்

ககனத்தே உறும்போது

நீர் என்று பேர் பெற்றாய்!

நீணிலத்தில் வந்ததன் பின்

வார் என்றும் மென் கொங்கை

ஆய்ச்சியர்கை வந்ததன் பின்

மோர் என்று பேர் பெற்றாய்!

முப்பேரும் பெற்றாயே!"


எங்கள் வீட்டில் அன்னப் பறவை இல்லை, அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே கோவில்பட்டி நகராட்சியில் கட்டணம் செலுத்தி தண்ணீர் வாங்குவது போதும்,  மீண்டும் அண்ணாமலையிடமும் வாங்க வேண்டும் என்று அவரிடம் பால்(?) வாங்குவதை நிறுத்தினோம்.

உணர்ச்சி வசப்பட்டு அண்ணாமலையை உதறியதன் பின் விளைவு, எங்கள் வீட்டில் பசுமாடு ஒன்று கன்றுக் குட்டியுடன் தஞ்சமடைந்தது. எங்கள் குடும்பத்திற்குத் தேவையானது போக மீதம் இருந்த பால் விற்ப்பனைக்கு.

பசும் பாலில் இயற்கையாக இருக்கும் 87% சதவீதம் நீரைத் தவிர்த்து மேலும்  அதிகப் படியாக நீர் எதுவும் சேர்க்கக் கூடாது என்பது அம்மாவின் அன்புக்கட்டளை. அதன்படியே பால் வியாபாரமும் நடைபெற்றது. 

சில நாட்கள் சென்ற பிறகு, பல செவிகள் வழியாக திரிந்து வந்தது அந்தச் செய்தி 

"தேனெடுத்தவன் புறங்கையை பின்னாலயா தடவுவான் ?" 

ஏற்கனவே எங்கள் ஊரில் இருந்த அண்ணாமலைகளின் பட்டியலில் நாங்களும் சேர்க்கப் பட்டோம். வருத்தப்பட எதாவது வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த என் அம்மா, இந்தச் செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்து, ஆத்திரமடைந்து, கொதிப்படைந்து வழக்கம் போல வேறேதும் செய்ய முடியாமல் சமுதாயத்தை கோபம் தீர திட்டிவிட்டு, பால் விற்ப்பனைக்கு அன்றுடன் முற்றுப் புள்ளி வைத்தார். அடுத்த சில நாட்களிலேயே மாடும் வேறொருவருக்கு விலை போனது. 

மீண்டும் பாலுக்காக தெருவுக்கு வந்தோம்.

இந்த முறை நிச்சயம் அண்ணாமலை அல்ல "ஆவின்" பாக்கெட் பால். அன்றைய காலகட்டத்தில், இப்போது உள்ளது போல பால் விற்கும் வேறு தனியார் நிவனங்கள் இல்லை.பாக்கெட்களில் விற்ப்பனைக்கு வருவது ஆவின் மட்டுமே. முதலில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்த ஆவின் பால் சில            மாதங்களில் எங்களை சிக்கலில் தள்ளியது.

அவ்வாறு பால் தட்டுப்பாடு உள்ள கால கட்டங்களில் ஆவின் பால் விற்கும் முகவர்தான் ஊரில் மிகவும் மதிப்பு மிக்க மனிதர்.அன்றைய தினம் பால் காப்பி குடிக்க வேண்டும் என்றால் காலையில் 5 மணிக்கெல்லாம் வரிசையில் நிற்கவேண்டும். சில நிமிடங்கள் தாமதமானாலும் அன்றைய தினம்  கடுங்காப்பிதான்.

எங்கள் முழுக் குடும்பமும் காப்பியின் போதைக்கு அடிமையாகி இருந்தது. காலையில் காபி குடிக்கவில்லை என்றால் எந்த வேலையும் நடக்காது. அதனால் சரியாக அட்டவணை போடப்பட்டு பால் வாங்கும் வேலை எனக்கும், என் அக்காவிற்கும் பகிர்ந்தளிக்கப் பட்டது. 

அன்று என் முறை, தூக்கத்திடம் செய்த உடன்படிக்கையை 10 நிமிடம் மீறியதால், பால் பறிபோனது. என்னையும் சேர்த்து அனைவருக்கும் போதை வஸ்த்து கிடைக்காத ஆத்திரம் தலைக்கு ஏறியது. வேறு யாரிடமும் அதை காட்ட முடியாததால் அனைவரின் ஆத்திரமும் என் மேல் திரும்பியது. நான் மிகுந்த கோபத்தோடு அவை அனைத்தையும் வாங்கிக் கொண்டேன்.

பால் இல்லாததை காரணம் காட்டி அன்றைய தினம் விடுப்பு எடுத்து விடலாமா என்று எண்ணிய போது முதல் நாள் இன்று நினைவுக்கு வர, வாயையும் சேர்த்து மூடிக்கொண்டு பள்ளிக்கு கிளம்பினேன்.   
       
பள்ளியில் அன்று முதல் வகுப்பு "தமிழ்" பாடம். நற்றிணையில் 172 வது பாடலை விளக்க ஆரம்பித்தார் "தமிழ் அம்மா".

விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,
‘நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்த்தது;
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்’ என்று
அன்னை கூறினள், புன்னையது நலனே -
அம்ம! நாணுதும், நும்மொடு நகையே,
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க! நீ நல்கின்,
இறைபடி நீழல் பிறவுமார் உளவே

இந்தப் பாடலை அவர் வாசிக்கும் போது வழக்கம் போல ஒன்றும் புரியவில்லை. அதன் விளக்கத்தை கூறிய போதுதான் நான் வெறியானேன்.

அடிமனதில் ஆத்திரத்தை மூட்டிய இந்தப் பாடல் ஆண்டு முழுவதும் என்னைத் துரத்தியது.

"புன்னை மரத்தின் பெருமைகளாக அன்னை கூறியவை யாவை? " என்ற கேள்வி ஆண்டு இறுதித் தேர்வில் தவறாமல் இடம் பிடித்தது.

அந்தப் பாடலின் விளக்கம்

"குழந்தைப் பருவத்தில் மணலில் விளையாடும் போது தலைவி புதைத்து வைத்த புன்னை விதை துளிர் விடத் தொடங்கியது. அது வளர்வது கண்ட தலைவி அதற்குப் பாலும், தேனும் கலந்து ஊற்றி வளர்த்து வந்தாள்.

அதைக் கண்ட தலைவியின் தயார், இந்தப் புன்னை மரம் உனக்கு தங்கை முறையாகும் என்றரர்"

இந்தச் செய்தியை தோழி, தலைவனிடம் கூறினாள். மேலும் தன் தங்கையின் முன்பு தலைவனோடு காதல் புரிவதை தலைவி விரும்பவில்லை (வெட்கப் படுகிறாள்), அதனால் விரைவாக தலைவியை தலைவன் மணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறினாள். 

Saturday, January 26, 2013

காதல் பாடம்

1. விணையூக்கி 


இரவு 09:00 மணி

கார்த்திக் அப்போதுதான் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டிருந்தான். பயணக் களைப்பு தெரியாமல் இருக்க பண்பலை வானொலியிடம் உதவியை நாடினான்.

 சில விளம்பரங்களுக்கு அடுத்து, ஒரு பெண்ணின் கொஞ்சலாக அப்போதைய  நிகழ்ச்சியின் விவரம் தெரிவிக்கப்பட்டது.

"நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது காதல் காதல் With Me" என தன்னுடைய பெயரையும் கூறிக்கொண்டார் அதே கொஞ்சலுடன்.

பல மணித்துளிகள் வரிசையில் காத்திருந்து சிலர் அந்த நிகழ்ச்சியில் பேசினார்கள். அனைவரிடமும் ஒரே கேள்வி வேறு, வேறு சுருதியில் கேட்கப்பட்டது.

"காதல்னா என்ன? "

அதற்க்கு பல வார்த்தைகளில் ஒரு பொருள் தரும்  பதிலை கூறிக்கொண்டிருந்தார்கள் காதலிடம் வசியப் பட்டு வரிசையில் காத்திருந்தவர்கள்.

"இனம் புரியாத அன்பு"

"அன்பை பரிமாறிக் கொள்ளுதல்"

"அன்பு செலுத்துதல்"

"எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பு காட்டுவது"

"விவரிக்க முடியாதது"

"அனைவரும் அனுபவிக்க வேண்டிய அற்புதமான அனுபவம்"

"Feelings that makes the world keep moving"

இவை அனைத்தயும் கேட்டுக் கொண்டிருந்த கார்த்திக்கின் மூளை,  19 வகையான சிரிப்புகளில் புன்சிரிப்பை அவன் இதழ்களுக்கு அனுப்பியது.

வானொலி, தொடர்ந்து காதல் ரசத்தை காதில் ஊற்றிக் கொண்டிருந்தது.

"உங்களுக்கு என்ன பாட்டு வேணும்?"

"இதயத் தாமரை படத்துல இருந்து "ஒரு காதல் தேவதை" பாட்டுப் போடுங்க"

"கண்டிப்பா,  இதயத்தாமரை படத்துல வைரமுத்துவின் வரிகளுக்கு, சங்கர்-கணேஷ் இசை அமைத்து S.P.B மற்றும் சித்ரா பாடிய ஒரு காதல் தேவதை பாடல் இந்த நேயருக்காகவும் மற்றும்  உங்கள் அனைவருக்காகவும் இதோ காற்றலைகளில்"  

பாடல் ஆரம்பித்து 3 நிமிடம் 53 நொடிகளில்.

சித்ரா கேட்ட கேள்விக்கு
        "கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது?"

அதற்க்கு S.P. B எதிர் கேள்வி கேட்க
       "ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது?"

இரண்டிற்கும் சித்ராவே விடையும் அளித்தார்.
       "இயல்பானது"

கார்த்திக்கை அறியாமலே இந்த வார்த்தைகள் அவன் ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருந்த நினைவுகளை வருடின...

1997 வருடம் ஜூன் மாதம்,  

ஒரு நாள்...


கல்லூரி தொடங்கி சில நாட்கள் ஆகிட்டபோதிலும் கார்த்திக் அன்று தான் முதல் முறையாக கல்லூரிக்கு செல்கிறான். 

"Ragging" எனும் சில்மிஷ பண்டிகையின் முக்கிய கொண்டாட்டங்கள் ஓய்ந்து இருந்ததன. அவ்வப்போது சில அன்புக் கட்டளைகள் துறையின் மூத்த (வருங்கால) தூண்களிடம் இருந்து வரத்தான் செய்தன.

அன்றைய தினம் கார்த்திக் சற்று  முன்னதாகவே கல்லூரிக்கு சென்று விட, அவனுடைய வகுப்பில் அவன் துறையை சார்ந்த முன்னோடிகள் அமர்ந்திருந்தனர். இடதுபக்கம் சில மாணவிகளும் அமர்ந்திருந்தனர். சீக்கிரம் வந்து வம்பின் வலையில் சிக்கிக் கொண்டதை உணர்ந்தான் கார்த்திக்.

"உன் பேரென்ன?" 

      "கார்த்திக்" 

"பதில் சொல்லும் போது மரியாதையோட 'Sir'' னு சொல்லணும், இருக்கட்டும்   பழைய Cinema Heroines ல புன்னைகை அரசி யாருன்னு தெரியுமா?"

      "K. R. விஜயா Sir"

"ஏன்டா  Cinema Heroine பேருக்கெல்லாம் Initial செல்ற, உன் பேருக்கு Initial சொல்ல மாட்டியா?"

      "R. கார்த்திக் Sir"    

"சரி, ஒரு College Salute அடி"

      "College Salute எனக்கு தெரியாது Sir"

அதற்கு ஒரு சீனியர், கார்த்திக்கு முன்னதாகவே வகுப்பிற்கு வந்திருந்த மற்றொரு இளம்கலை மாணவனை கைகாட்டி, "நீ அவனுக்கு Salute அடிச்சி காட்டு டா" என்றான். அதற்க்கு உடனே அந்த மாணவன் எழுந்து "Abdomen Guard" போல இடது கையை வைத்துக் கொண்டு, வலது கையை உயர்த்தி, மடக்கி வலது நெற்றியை தொடுட்டவுடன், இரண்டு பின்னங்கால்களை உயர்த்தி "Yes Sir" என்று உரக்க கூறிவிட்டு பின்பு இயல்பு நிலைக்கு திரும்பினான்.

       "தம்பி கார்த்தி, College Salute என்னன்னு தெரிஞ்சிக்கிட்டேள்ள இப்போ அடி"

சம்மதமோ, எதிர்ப்போ தெரிவிக்காமல் அப்படியே நின்றான் கார்த்திக்.

     "என்னடா, சொல்றது கேக்கலையா? அடின்னா..."

"Sir நான் வேணா வேற எதாவது பண்ணட்டுமா?"

       நீ வேற ஒன்னும் பண்ண வேண்டாம், இதப் பண்ணு"

கார்த்திக் கைக்கடிகாரத்தை நோக்கினான் மணியடிக்க இன்னும் 15 நிமிடங்கள் இருந்தது. அதுவரை எப்படியாவது சமாளிக்க வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.

பொறுமை இழந்த சீனியர் மாணவன் எழுந்து கார்த்திக்கை நோக்கி வந்தான். அப்போது சரியாக வாசலில் ராம் வந்து நின்றான். "ராம்" அந்த சீனியர்களில் ஒருவன். 

"இங்க என்னடா பண்றீங்க வாங்க போகலாம்" என்று தன்னுடைய சீனியர் பட்டாளத்தை அழைத்தான்.

"இருடா ராம், இவன் ரொம்ப நேரமா Salute அடிக்காம நிக்கிறான், அவன கொஞ்சம் கவனிப்போம்." என்றான் மற்றொரு சீனியர் மாணவன்.

"என்ன தம்பி, எவ்வளவு நேரம்தான் இப்படியே நிப்ப, சட்டு புட்டுன்னு Salute அடிச்சிட்டு போயேன்" என்றான் ராம்.

 கார்த்திக் பதில் ஏதும் கூறவில்லை.

"ராம், அவன் Salute அடிக்க மாட்டானாம், வேற எதாவது செய்றானாம்."

"அப்படியா, சரி பரவாயில்ல, இவன் பேரென்ன?" என்று ராம் தன் கூட்டத்திடம் கேட்க.

"கார்த்திக்" என்றான் பங்காளி.

"சரி கார்த்திக், நான் உனக்கு ரெண்டு Options தர்றேன், ஒன்னு Salute அடி, அல்லது நான் கொடுக்குற problem ல solve பண்ணு. என்ன பண்ற?" என ராம் கேட்க.

"Problem என்னனு சொல்லுங்க Sir" 

"உன்னால solve பண்ண முடியலன்னா, Salute தான்" என்று தன்னுடைய புதிரை கார்த்திக்கை நோக்கி எய்தான் ராம். 
                                    
வகுப்பில் இருந்த கரும்பலகையில் இவ்வாறு எழுதினான். 

x^2 - 10 y^2 = +1 or -1 

"இதுல  X, Y values என்ன வரும் சொல்லு கார்த்திக்? உனக்கு 3 minutes time தர்றேன்."

.......

"ஒரு Clue வேணா தர்றேன். first answer 3,1 அடுத்த answer என்னன்னு சொல்லு" என்று கேட்டு விட்டு மெல்ல சிரித்தான்.

இரண்டு நிமிடங்கள் முடிந்து, நொடி முள் மூன்றாவது முத்தம் கொடுக்க "12" நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. 30 வினாடிகள் மீதம் இருக்கும் சமயத்தில் சீனியர் கூட்டம் Count Down செய்ய ஆரம்பித்தது.

"30, 29, 28, 27..."

கார்த்திக் மெல்ல கரும் பலகை நோக்கி நகர்ந்தான்.   தனக்கு தெரிந்ததை கிறுக்கினான். கரும் பலகையில் கார்த்திக் கொட்டிய வெண்ணிற கோடுகள் ராமின் கண்களை அகலமாக்கின.

      3 + \cfrac{1}{6+\cfrac{1}{6+\cfrac{1}{6+\cfrac{1}{6+\dotsb}}}}



கார்த்திக் கடைசி மூன்று புள்ளிகள் வைக்கவும், காலக்கெடு மூன்று நிமிடம் முடியவும் சரியாக இருந்தது. கார்த்திக் எழுதியது யாருக்கு புரிந்ததோ இல்லையோ ராம் நன்றாகவே புரிந்து கொண்டான். காலை வகுப்பு தொடங்க இன்னும் சில நிமிடங்கள் மீதம் இருப்பதை தன்னுடைய கைக்கடிகாரத்திடம்  உறுதி செய்து கொண்டு ராம் அடுத்த கேள்வியையும் தொடுத்தான்.

"இன்னும் ஒரு Test இருக்கு தம்பி, இதுக்கும் correct டா Answer சொல்லிடு அதுக்கப்புறம் உனக்கு எந்த problem வராம நான் பாத்துக்குறேன்" என்றான் ராம்.

"சொல்லுங்க Sir"  என்று புத்தியை கூராக்கி எதிர் நின்றான் கார்த்திக். 

கரும் பலகை அடுத்த போருக்கு தயாரானது. குதர்க்கமாக குண்டலகேசியில் இருந்து கேள்வி கேட்கலாமா என்று யோசித்து விட்டு பின்பு அதை கைவிட்டான் ராம். ஏனெனில் குண்டலகேசி, குண்டு மணி அளவுகூட அவனுக்கு தெரியாது. "all is fair in war" என்று அரைகுறையாக எங்கோ படித்தது நினைவுக்கு வரவே, மேல் படிப்பிற்கு தன்னை தயார் செய்து கொள்ள உதவிக்கொண்டிருக்கும் புத்தகத்தில் இருந்து அடுத்த கேள்வியை உருவினான் ராம்.  

"  L L L, 

   L C C, 

   C,

அடுத்து என்ன வரும் ?" என்று தன் கேள்வியை முடித்தான் ராம். 

இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சீனியர் சேகர், "ரொம்ப படித்து ராமுக்கு மூளை குழம்பி போச்சி போல A, B, C ய தப்பு தப்பா எழுதிட்டு கேள்விங்கிறானே" என்று அலுத்துக் கொண்டான்.    

கார்த்திக்கின் தேடுபொறி சில நொடிகளில் பல ஆங்கில எழுத்துக்களை அள்ளிக் கொண்டு வந்தது. சுண்ணாம்புக்கட்டி கார்த்தியின் கைவசம் மாறியது.தொடரை பூர்த்தி செய்தான்.

L C 


இதை பார்த்த ராம், பதில் ஏதும் கூறாமல் வகுப்பறையில் இருந்த பிற சீனியர் மாணவர்களை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

"என்னடா  ராம், நீ எதோ கேட்ட, அதுக்கு அவன் எதோ எழுதுனான். நாமளும் வந்துட்டோம். ஒண்ணுமே புரியலையே" என்றான் சீனியர் சேகர்.

"கார்த்திக் எழுதினது Correct தான் சேகர். First Question அது 'Continued fraction', அதுல இருந்து ஒவ்வொரு sequence சா எடுத்து Solve பண்ணா, வேற வேற answer கிடைக்கும். அதுல பிரஸ்ட் sequence ல இருந்த answer தான் 3 னும் 1 னும்".

Second question, English alphabets ச represent பண்ணுது.   L னா Line; C னா Curve. L L L மூணு lines சேர்ந்து "A" ய  form பண்ணும்.  B க்கு ஒரு line and ரெண்டு Curves. C க்கு ஒரே Curve. next D, அதுக்கு ஒரு Line ஒரு Curve. அததான் கார்த்திக் எழுதினான்.           

"ராம், நீ சொல்றத பார்த்தா கார்த்திக் என்ன அவ்வளவு பெரிய தில்லாலங்கடியா?"

"அப்படிதான் தெரியுது, இனிமே அவன ragging பண்ணாதீங்க" என்று மற்ற சீனியர்களுக்கு கட்டளையிட்டான்.   

காலை வகுப்புகள் தொடங்கவிருப்பதை மிசார மணி ஒலி அறிவித்தது. பேராசிரியர் முதலாம் ஆண்டு வகுப்பில் நுழைந்தார். முதல் வரிசையில் கார்த்திக். 

மாணவர்கள் ஒவ்வொருவராக தங்களுடைய வரிசை எண்னை குறிப்பிட, வராத மாணவர்களின் எண்களை மட்டும் குறித்துக் கொண்டார் பேராசிரியர். கார்த்திக் தன்னுடைய எண்ணான 127 ஐ முழங்கிவிட்டு அமர்ந்தான்.

கரும் பலகையில் காத்திருந்த "தொடர் பின்னம்", இந்த வகுப்பிற்கு தொடர்பில்லாததால், பேராசிரியரால் சுத்தம் செய்யப்பட்டு "Properties of Matter" பாடம் ஆரம்பிக்கப் பட்டது.

பெரும்பாலான மாணவர்கள் தமிழ் வழிக்கல்வி கற்றவர்கள் என்பதால் பேராசிரியர், "மேஜர்" ஆகவும் மாறவேண்டி இருந்தது. "Rotation, Rotation" னா "சுழற்சி,சுழற்சி"னு அர்த்தம் என அறிவியல் தமிழை போதித்துக்கொண்டிருந்தார்.

அந்த கல்லூரியில் இருபாலரும் கலந்துரையாட தடை. உரையாடலின் நோக்கம் கடலையாக இருந்தாலும் தடை, கல்வியாக இருந்தாலும் தடை. அதுவரை ஆண்கள் பள்ளியிலேயே படித்து விட்டு முதல் முறையாக இருபாலரும் படிக்கும் கல்லூரியில் சேர்ந்திருப்பது கார்த்திக்கு சற்று புதிதாக இருந்தது.  அவன் வகுப்பில் 21 மாணவிகள், 7 மாணவர்கள்.  ஒரு சில மாணவிகள் தவிர பிறரை பார்த்தது கூட கிடையாது.

  

2. காதலின் முதல் விதி 


விழிஈர்ப்பு விசையொன்று செயல்படாத வரை எந்த ஒரு மனதும் சலமில்லாமல் சயனித்துக் கொண்டுதான் இருக்கும்.


கல்லூரியில் சேர்ந்து, முதல் சில நாட்கள் சாதரணமாகத்தான் சென்றன. அன்று வெள்ளிக்கிழமை காலை முதல் வகுப்பு ஆரம்பமானது. வழக்கம் போல "மேஜர்" பேராசிரியர் பாடம் நடத்த ஆரம்பித்தார். அன்றைய பாடம் மின்னோட்டம் (electric current).

"எலக்ட்ரான்களின் ஓட்டம் மின்னோட்டம்". என்று எளிய தமிழில் விளக்கிக் கொண்டிருந்தார்.

"excuse me sir, may I come in?"

அனுமதி கேட்டு குரல் வந்த திசை நோக்கி கார்த்திக்கின் விழிகள் பயணித்தன. 

"வண்ணப் புடவையில் வாசலில் தேவதை". 

கார்த்திக்கின் மூளை "Norepinephrine" வெளியிட பணித்தது.அது அதிகப்படியான "adrenaline" னை சுரக்க ஆரம்பித்தது. இதயத்துடிப்பு இருமடங்கானது, உள்ளங்கை வியர்க்க தொடங்கியது. "மேஜர்" எதாவது கேள்வி கேட்டு சிறுது நேரம் "தேவதையை" அங்கேயே நிற்க வைக்க மாட்டாரா என்று ஏங்கியது அவன் உள்ளம். அது நடக்கவில்லை, ஆனால் அவள் உள் நோக்கி   நடக்க ஆரம்பித்தாள். நடந்தால், அவளின் கால் நோகுமென அவளை விழிகளில் ஏற்றிக் கொண்டான் கார்த்திக்.

"மேஜர்" தன் சேவையை விட்ட இடத்தில் தொடர்ந்தார். "உலோக கடத்திகளில் எலெக்ட்ரான்கள் இயங்கும் மின்னூட்டங்களாகச் செயல்படுகின்றன".   

கார்த்திக்கின் மனது மின்சாரத்திற்கு புதிய வரையறை கொடுத்தது.

கம்பிகளின் வழியே பாயும் மின்சாரத்தை - இன்றுதான் 
கண்டேன் அவள் கண்களின் வழியாக.

அதற்கடுத்து, யார் பேசியதும் கார்த்திக்கின் காதுகளில் விழவில்லை. அவனுக்கு அடுத்து உடனடியாக தேவைப்பட்டது, அவளின் பெயர். மெல்ல மிதந்து சென்று மூன்றாவது வரிசையில், இரண்டாவது இடத்தில் அமர்ந்தாள். அருகில் அமர்ந்திருந்த யாரோ "பிரியா ஏன் லேட்டு?" என 20 Hz ல் கேட்ட கேள்வி கூட கார்த்திக்கின் காதுகளில் தெளிவாக கேட்டது.

பிரியா

பிரியா

என்னை விட்டு 
என்றும் பிரியா(ள்)...   


அன்றைய தினம் வீட்டிக்கு வந்ததும் முதலில் அம்மாவிடம் சென்றான் கார்த்திக்.

"அம்மா, நான் எப்படிம்மா இருக்கேன்"

  "நீ என்னடா கண்ணு, வீட்ல ஆக்குரதுல மூகல்வாசி சாப்பாட்ட சாப்ட்டுட்டு நல்லா size சா தான் இருக்க"

"அத கேட்கல மா, பாக்குறதுக்கு நான் எப்படி இருக்கேன், நல்லா இருக்கனா, இல்லையா"

    "உனக்கென்ன ராஜா மாதிரித்தான் இருக்க"

"உன்கிட்ட கேட்டா நீ இப்படித்தான் சொல்லுவ"

     "அப்பறம் எதுக்கு என்கிட்ட கேட்ட" என்று அலுத்துக் கொண்டு அம்மா சமயலறைக்குள் சென்று விட்டார். கார்த்திக் கண்ணாடியின் முன்பு நின்று கொண்டு  சில கேள்விகள் அவனிடம் கேட்டுக் கொண்டான். 

"உனக்கு இது தேவைதானா?" 

"மத்ததெல்லாம் கூட O.K, இந்த கலர்க்கு என்ன பண்ணலாம்?"

"நீயோ கலர் கம்மி, அவளோ கொஞ்சம் உத்து பாத்தாலே சிவந்து போற நிறம். இதெல்லாம் சரியா வருமா?"

சுயமரியாதையை மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கும் அவனால் பல கேள்விகளுக்கு விடை தேட முடியவில்லை. இப்போது அவனுக்கு வந்திருக்கும் வியாதியின் பெயர் என்னவென்று அவனால் விவரிக்க இயலவில்லை. நிச்சயம் காதலாக இருக்க முடியாது. கண்டதும் காதலா? அபத்தம். இறுதியாக இது "இனக்கவர்ச்சி" அன்றி வேறல்ல என்று முடிவுக்கு வந்தான். 

சனி, ஞாயிறு இரண்டு நாட்கள், பொது நூலகத்தில் இருந்து எடுத்து வந்த புத்தகத்தில் தன்னை புதைத்துக் கொண்டான். திங்கள் அன்று இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாக தன்னை தேற்றிக்கொண்டு கல்லூரிக்கு சென்றான்.  சில, பல நாட்கள் இதே உபாதையால் அவதிப் பட்டாலும் மீண்டும் மீண்டும் தன்னை தேற்றிக்கொண்டு இயல்பு நிலைக்கு திரும்பினான்.

முதல் பருவம் முடிந்து, இரண்டாம் பருவம் தொடங்கியது. தேர்வு முடிவுகளும் வெளியாகின. தன்னுடைய மதிப்பெண் என்னவென்று பார்க்கும் முன்பாக பிரியாவின் மதிப்பெண்களை அவன் கண்கள் தேடின. கார்த்திக்கை விட 5 விழுக்காடு அதிகம். கார்த்திக் 65 விழுக்காடு பெற்றிருந்தான். துறைத்தலைவர் கார்த்திக்கை தனியாக அழைத்து விசாரித்தார். 

"Classல நல்லா தானப்பா answer பண்ற, பின்ன Mark மட்டும் ஏன் கம்மியா வாங்கியிருக்க?"

பதில் ஏதும் சொல்ல முடியாமல் திரும்பி விட்டான் கார்த்திக். 28 மாணவர்கள் படிக்கும் வகுப்பில் 12 வது இடத்தில் கார்த்திக். முதல் மூன்று மதிப்பெண்கள்  வாங்கியது வழக்கம் போல பெண்களே.

இந்த சமயத்தில் வந்தது சுற்றுலா...

இந்த சுற்றுலா, பிரியாவை பற்றி தெரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு என்று எண்ணிக் கொண்டிருந்த கார்த்திக்கின் கனவில் "தடா" வை இறக்கினார் அவன் அப்பா. வேறு வழியில்லாமல் மனதை தேற்றிக்கொண்டான் கார்த்திக்.

சுற்றுலா முடிந்து வந்தவுடன், இருபாலரும் தங்களுக்குள் பேசிக்கொள்ள கூடாது என்ற கல்லூரியின் விதி, வீதியில் எறியப்பட்டது. oxygen tank இல்லாமல் சுவாசிக்க முடியாது என்ற அளவுக்கு கடலை வறுப்பதினால் உண்டான புகை முழுவகுப்பையும் ஆக்கிரமித்தது. கார்த்திக்கின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. விஸ்வாமித்திரர் வேடம் ஏன் பூண்டோம் என்று தன்னை தானே நொந்து கொண்டான். இதில் ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் "பிரியா டார்லிங்" இன்னும் யாருடனும் பேசுவதில்லை.

முதல் வருடம் முடிந்து, இரண்டாம் வருடம் தொடங்கியது. மதிப்பெண் பட்டியலில் கொஞ்சம் முன்னேறி இருந்தான் கார்த்திக். மீண்டும் முதல் மூன்று இடங்கள் பெண்களுக்குத்தான். பல சமயங்களில் கார்த்திக்கின் மனது அலை பாய்ந்தாலும் எதையும் வெளியே சொல்லும் தைரியம் மட்டும் வரவில்லை. 

இந்த சமயத்தில் வந்தது "inter college competition". மாவட்ட தலைநகரில் இருந்த ஒரு கல்லூரியில் நடைபெற்றது போட்டி. 

  • விநாடி - வினா 
  • பேச்சுப் போட்டி
  • கட்டுரை 
  • கதை 


என நான்கு போட்டிகளில் முதல் பரிசை அள்ளினான் கார்த்திக். பரிசுகளை வென்று கொண்டு மறுநாள் கல்லூரிக்கு வந்தவனுக்கு மீண்டும் ஒரு பரிசு. "பிரியாவிடம் இருந்து வாழ்த்துகள்" அப்புறம் ஒரு "சிரிப்பு". 

அதன் பிறகு எப்போதாவது இருவரும் சிர்ப்பதுண்டு மற்றபடி பேசிக்கொள்வது கிடையாது. ஒரு வருடம் கழித்து, சென்றமுறை கார்த்திக் தவறவிட்ட வாய்ப்பு மீண்டும் அவனுக்கு கிடைத்தது.

"சுற்றுலா"

இந்த முறை அவனுக்கு அப்பாவிடம் இருந்து அனுமதி கிடைத்தது. இந்த முறை சரித்திரம் சற்று மாற்றி எழுதப்பட்டது. இவன் வகுப்பில் இருந்து "21" மாணவிகளும், மாணவர்களில் இவன் ஒருவன் மட்டும் சுற்றுலாவிற்கு சென்றனர். "டார்லிங்" உடன் பேசுவதற்கு நல்ல வாய்ப்பு என்று எண்ணிக் கொண்டே சுற்றிப் பார்க்க சென்றான் ஊட்டிக்கு.

மறுநாள் மேட்டிப்பாளையத்தில் காலை உணவுக்காக அனைவரும் புறப்பட்டனர். இரு பேராசியர்கள் அனைத்து மாணவர்களையும் கவனிக்க முடியாது என்பதால், பல  குழுக்களாக மாணவர்களை பிரித்தனர். பிரியாவுடன் சேர்த்து இன்னும் 6 மாணவிகளுக்கு பாதுகாப்பாக கார்த்திக் நியமிக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டான்.

அந்த 7 பேர்களுக்கு இடையே  பேச்சு வார்த்தை மெல்ல துவங்கியது. பேச ஆரம்பித்த சில நிமிடங்களில்.

"கார்த்திக் நீ இவ்வளவு நல்லா பழகுவியா, எங்களுக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. நீ பேசவே மாட்டனு நினைச்சோம்." என்று ஒரு மாணவி கூறவும். கொஞ்சம் அடக்கி வசிக்க வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான் கார்த்திக்.

"இந்த டூர்க்கு மத்த பசங்க ஏன் வரலன்னு தெரியுமா கார்த்திக்"

"இல்ல, தெரியாது"

"போன வருஷம் டூர்க்கு போயிட்டு வந்த பிறகு, நாங்கெல்லாம் கொஞ்சம் Free யா பசங்க கூட பேச ஆரம்பிச்சமா"

"சரி, அதனால"

"ஒவ்வொரு பையனும், ஒவ்வொரு பொண்ண Love பண்றேன்னு சொல்லிட்டாங்க" என்று கார்த்திக்கின் எண்ணத்தில் தீவைத்தாள் அந்த மாணவி. அதோடு நிற்காமல் "நட்பின் காவலன்" என்ற பட்டம் வேறு கார்த்திக்கு வழங்கிவிட்டார்கள்."உலக உத்தமனாக" தன்னை காட்ட நினைத்து , சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டான் கார்த்திக்.

இப்படியே இரண்டாம் ஆண்டும் முடிந்தது. படிப்பில் மட்டும் நல்ல முன்னேற்றம் இருந்தது கார்த்திக்கிடம்.

மூன்றாம் ஆண்டு, முழுக்கவனமும் படிப்பு மட்டும்தான் என்று ஆனது. இப்போது வகுப்பில் இரண்டாம் இடத்தில் கார்த்திக். முதல் மதிப்பெண் மீண்டும் பெண் குலத்திற்கே.

கல்லூரியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்த பிரியாவின் ஊரில் நண்பனின் அண்ணன் திருமணம் நடக்கவிருப்பதாக பிரியாவிடம்  தெரிவித்தான் கார்த்திக். தன்னுடைய வீட்டிற்கு நிச்சயம் வரவேண்டும் என்று பிரியா அழைத்தாள். அதுவரை திருமணதிற்கு செல்லும் எண்ணம் இல்லாமல் இருந்த கார்த்திக், இப்போது நிச்சயம் போகவேண்டும் என்று முடிவெடுத்து விட்டான்.

பிரியாவின் மனதில் என்ன இருக்கிறது என்பதை தன்னால் புரிந்துகொள்ள முடியாததால். காதலில் "கரை" கண்ட தன் நண்பனையும் உடன் அழைத்துச் சென்றான் கார்த்திக். திருமணத்தை முடித்துவிட்டு சாப்பாடுகூட வேண்டாம் என்று பிரியாவின் வீட்டிற்கு சென்றனர் இருவரும். "சாதாரண உடையிலும் அசாதாரணமாக ஜொலித்தாள்  பிரியா"                  

உபசரிப்பு பலமாகத்தான் இருந்தது. அதற்க்கு தமிழர் பண்பாடு மட்டும்தான் காரணமா என்று இருவருக்கும் புரியவில்லை. இருவரும் இரண்டு மணிநேரம் பிரியாவின் வீட்டில் இருந்தனர். கடைசியாக வெளியே வந்த பிறகு நண்பனிடம் கேட்டான் கார்த்திக். 

"என்னடா சொல்ற, எதாவது feelings இருக்கா?"

    "ஒன்னும் இருக்குற மாதிரி தெரியலடா கார்த்திக்"

"நீ சரியா கவனிக்கலடா, வள்ளுவரே சொல்லி இருக்காரு...  
                       
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்."


"இப்படி எதாவது சொல்லி உன்ன நீயே ஏமாத்திக் கிட்டாதான் உண்டு" என்று நண்பன் தன் அறிவுரையை முடித்துக் கொண்டான்.

வருடமும் முடிந்தது, அன்று வரை மனதில் தோன்றியதை சொல்ல தைரியம் வரவில்லை கார்த்திக்கு. "autograph" வாங்க பல diary கள் இடம்பெயர்ந்தன. பிரியாவின் diary யில் பல, சில மாணவர்களிடம் இருந்து indirect proposal கள் இருந்தன.  பத்தோடு ஒன்றாக தன்னையும் இணைத்துக் கொள்ள அவன் விரும்பவில்லை. 

"இரண்டு உடல்களில் வசிக்கும் ஒரு உயிர்தான் நட்ப்பு" என்று மட்டும் எழுதிவிட்டு முடித்துக் கொண்டான்.

வீட்டுக்கு வந்துதன் diary யை புரட்டினான் கார்த்திக். பல direct proposal கள் இருந்தன. அவை அனைத்தயும் கடந்து November மாதத்திற்கு ஓடினான். அங்கு பிரியாவின் பிறந்தநாளை தேடினான்.அவளின் தொலைபேசி எண்ணைத் தவிர அங்கு வேறு ஒன்றும் இல்லை. மீண்டும் ஒரு புதிர்...

மூன்றாம் ஆண்டு தேர்வுகள் முடிந்தன, கடைசி தேர்வு. அவளை பார்க்கப்போகும் கடைசி நாள். அதுவும் முடிந்தது, அவன் இதயம் இரும்புப் பெட்டிக்குள் அடைக்கப்பட்டது.

கல்லூரி முடிந்து சில நாட்கள் பிரியாவுடன் தொலைபேசியில் உரையாடினான். பின்னர் அதற்கும் முற்றுப்புள்ளி. மேல்படிப்புக்கு இருவரும் வேறு, வேறு ஊர்களுக்கு  அனுப்பப்பட்டனர்.      



3. காதலின் இரண்டாம் விதி 


      அவளின்  விருப்பம் அதுவானால், கடலினை கடப்பதும் கணநேர வேலைதான்.  



மேல்படிப்பு இரண்டு ஆண்டுகள் முடியும் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

மூன்றாம் பருவத்தின் தொடக்கத்திலேயே, "campus interview" மூலமாகவே தன்னுடைய வேலையை உறுதி செய்துகொண்டான் கார்த்திக். வேலை உறுதியான சில நாட்களில் அமெரிக்காவில் விழுந்த குண்டு இவன் வாழ்க்கையிலும் விழுந்தது. உறுதியான வேலை உருக்குலைந்து போனது.

"நடப்பதெல்லாம் நன்மைக்கே" என்று நம்பும் கார்த்திக்கின் மனதால், இந்த வேலை இழப்பும்  நன்மைக்கு என ஏற்க முடியவில்லை.

நான்காம் பருவத்தின் தொடக்கத்தில் project செய்வதற்காக மாநிலத்தின் தலைநகருக்கு சென்றான். நல்லபடியாக project முடித்துவிட்டு வந்தவனுக்கு கல்லூரியின் முதல் மதிப்பெண் பெற்றதற்க்கான பதக்கம் காத்திருந்தது.

எங்கும் வேலையில்லை, என்ன செய்ய என்று திகைத்தவன். கல்லூரி விரிவுரையாளர் வேலையாவது கிடைக்குமாவென அனைத்து கல்லூரிகளுக்கும் விண்ணப்பித்தான். 

அவன் ஊருக்கு அருகில் இருந்த கல்லூரியில் இருந்து நேர்முக தேர்வுக்கு அழைப்பு வந்தது. வேலைக்கான முதல் நேர்முகத்தேர்வு, ஆவலுடன் சென்றான் கார்த்திக்.

தற்செயலோ, விதியின் செயலோ மீண்டும் சந்தித்தான் பிரியாவை.

12 ம் வகுப்பில் அங்கில ஆசிரியர் கூறிய சரித்திரக் (அவரின் சொந்த கற்பனைக்) கதை நினைவுக்கு வந்தது.

"சீசரின் (ஆசை)நாயகி கிளியோபட்ரா. சீசர் தன்னுடைய அரண்மனைக்கு அந்தோணியை விருந்துக்கு அழைக்க, அந்தோணியும், கிளியோபட்ராவும் ஒருவரை ஒருவர் சந்திக்க, மன்மதன் எய்த அம்பு இருவரையும் தைக்க, இந்த நேரம் அந்தோணியை அரண்மனையில் கிளியோபட்ராவின் உபசரிப்பில் விட்டு விட்டு சீசர் வெளியே பயணிக்க. காதல் கிளிகள் இரண்டும் அரண்மனையை விட்டு தப்பிக்க, திரும்பி வந்த சீசர் துரோகம் இளைத்தவரை தண்டிக்க துடிக்க, விரைந்தார் அந்தோணியின் இருப்பிடம் நோக்கி.

அரண்மனையின் வாசலில் அந்தோணியை  பதம் பார்த்த சீசரின் வாள், தாகம் அடங்காமல் கிளியோபட்ராவை நோக்கிப் பயணித்தது. ஆத்திரம் மறைத்ததால் கிளியின் அழகு சீசரின் கண்களுக்கு தெரியவில்லை.திரைச்சீலைக்கு பின்புறம் நின்றுகொண்டிருந்தாள் கிளியோபட்ரா. திரையை வெட்டியது சீசரின் வாள். நீங்கியது அந்தத்திரை மட்டுமல்ல சீசரின் கோபத்திரையும்தான். கிளியோபட்ராவின் கூரான விழிகளிடம் சீசரின் வாள் தோல்வி அடைந்தது. அவளின் அழகில் மீண்டும் தஞ்சம் அடைந்தார் சீசர்". 

இரும்புப் பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்ட காதல் இதயம் பிரியாவை மீண்டும் பார்த்ததும் துள்ளி எழுந்தது. அவள் இன்னும் தன்னவள் தானா என்பதை உறுதி செய்ய கழுத்தையும், கால் விரல்களையும் நோக்கினான். பிரியாவின் இதயமும், கழுத்தும், கால்விரல்களும் இவனுக்கான இன்னும் காத்திருப்பதாக தோன்றியது. நலம் மட்டும் விசாரித்துவிட்டு திரும்பிவிட்டான்.  

நேர்முகத்தேர்வின் முடிவுகளுக்காக காத்திருந்தான். அந்தக் கல்லூரியில்  இருந்து எந்த தகவலும் வரவில்லை, ஆனால் கார்த்திக் படித்த கல்லூரியில் இருந்து பணி நியமனக் கடிதம் வந்திருந்தது. "புருஷ லட்சணத்தின்" முதல் படியை எட்டினான் கார்த்திக். இதை தெரிவிக்க பிரியாவை தொலைபேசியில் அழைத்தான். அந்த எண்ணில் யாரும் இல்லை.

சில நாட்கள் கழித்து தோழியின், தோழியின், தோழி வழியாக பிரியா பள்ளியில் பணிபுரிவதை தெரிந்து கொண்டான் கார்த்திக். தீவிர முயற்சிக்குப் பின்பு மீண்டும் அவளின் தொலைபேசி எண் கிடைத்தது.


மிகுந்த சிந்தனைக்குப் பிறகு...

"Hello, பிரியா இருக்கங்களா?"

"Hey, கார்த்திக் நான்தான் பேசுறேன்"

சிறுது நேர உரையாடலுக்குப் பின், கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிவதை தெரிவித்தான்.

"Congratulations கார்த்திக்".....   "எப்போ IT job க்கு try பண்ணப் போற, இங்கேயே இருந்திடாத" என்று அழுத்தம் கொடுத்தாள் பிரியா...

கொஞ்சம் ஏமாற்றமாக இருந்த போதிலும், அவளின் அக்கறை அவனுக்குப் பிடித்திருந்தது. 8 மாதங்கள் விவுரையளராக பணியாற்றிவிட்டு கொஞ்சம் பணம் சேர்த்துக்கொண்டு மென்பொருள் வேலை தேடி மாநிலத் தலைநகரை நோக்கிப் புறப்பட்டான் கார்த்திக்.

இரண்டு மாத தீவிர தேடுதலுக்குப் பின்பு ஒரு சிறிய மென்பொருள் நிறுவனத்தில், சுமாரான வருமானத்தில் பணியில் சேர்ந்தான். மென்பொருள் துறையில் வேலை கிடைப்பதுதான் கடினம், விடாமுயற்சி, கடின உழைப்பு  இருந்தால் அடுத்த நிலைக்கு முன்னேறுவது மிகவும் எளிது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும், அதனால் கிடைத்த வேளையில் உடனே சேர்ந்து விட்டான். வேலை கிடைத்த செய்தியை அம்மா, அப்பாவிடம் தெரிவித்துவிட்டு அடுத்து கார்த்திக் தொடர்பு கொண்டது பிரியாவை.

"Congratulations கார்த்திக், சீக்கிரம் நல்ல salary கிடைக்கிற வேலையா பாரு..."

புதிதாக வந்திருக்கும் மென்பொருள் மொழிகளை விடாமல் பயின்றான். அடுத்த 8 மாதத்தில் அடுத்த வேலைக்கு மாறினான். அந்த புதிய வேளையின் ஊதியம் தற்போது  வாங்குவதை விட நான்கு மடங்கு அதிகம்.               

    
"Congratulations கார்த்திக், ரொம்ப நல்லது. இந்த company ல Onsite offer எல்லாம் இருக்கா?"


இவ்வளவு தூரம் ஓடிவந்த கார்த்திக்கால் நிற்க முடியவில்லை. அவளின்  விருப்பத்திற்கு கண்டங்களைத் தாண்டவும் தயாரானான். வேறு சில, பல நிறுவனங்களில் வேலை கிடைத்தபோதும் உடனே வெளிநாட்டுக்கு அனுப்ப யாரும் முன்வரவில்லை. அதனால் தற்போது வேலை செய்யும் அதே நிறுவன மேலாளரிடம் Onsite குறித்து பேசினான். உண்மையான காரணத்தையே கூறினான். 

இரண்டு மாதத்திற்குப் பிறகு அதற்க்கான ஏற்ப்பாடு செய்வதாக கூறினார் மேலாளர்.

     

4. காதலின் மூன்றாம் விதி 


மேலாளர் கூறியபடி இரண்டு மாதங்களில் கார்த்திக்கின் VISA உறுதி செய்யப்பட்டது அமெரிக்காவிற்கு. Stamping க்காக Passport டை american embassy யில் கொடுத்து விட்டு VISA உறுதியான செய்தியை வீட்டுக்கு தெரிவித்தான். சிறுது நேரத்தில் பிரியாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. முதல் முறையாக பிரியாவின் அழைப்பு. இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

"Hello பிரியா"

      "Hi கார்த்திக், எப்படி இருக்க"

"நான் நல்லா இருக்கேன் பிரியா, நானே உனக்கு call பண்ணலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நீயே call பண்ணிட்ட"

    "Oh அப்படியா, நானும் உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசத்தான் call பண்ணேன்."

"சொல்லு பிரியா, உனக்கு Marriage fix பண்ணிட்டாங்களா? தயவு செஞ்சி ஆமான்னு மட்டும் சொல்லாத."

       "என்ன கார்த்திக் சொல்ற..."

"நான் ஒரு நல்ல நிலைமைக்கு வந்துட்டுதான் உன்கிட்ட இதப்பத்தி பேசணும்னு wait பண்ணிக்கிட்டு இருந்தேன். அதுமட்டுமில்லாம இப்போ எனக்கு வந்த இந்த தைரியம் இத்தன நாளா எனக்கு வரல. இப்போகூட நீ எனக்கு இல்லாம போயிடுவியோங்கிற பயம்தான் தைரியத்த கொடுத்திருக்கு. 

......

என்ன நீ கல்யா.."

      "Love பண்றியா கார்த்திக்..."

"6 வருசமா... "


கார்த்திக்கின் அலைபேசி ஒலித்தது. நிகழ் காலத்திற்கு திரும்பினான் கார்த்திக். 

"எங்க இருக்கீங்க, வீட்டுக்கு வர எவ்வளவு நேரம் ஆகும்?"

"Car, Service station ல இருக்கு, bus ல தான் வந்துக்கிட்டு இருக்கேன். இன்னும் 30 minutes ல வந்துருவேன். நீ சாப்பிடு, எனக்காக wait பண்ணாத. குழந்தைங்க என்ன பண்றாங்க"

"ரெண்டு பேரும் விளையாடிக்கிட்டு இருக்காங்க, நான் wait பண்றேன் நீங்க வாங்க சேர்ந்து சாப்பிடலாம்".

அலைபேசியை சட்டைப் பையில் செருகிவிட்டு நினைவுகளை தொடர்ந்தான் கார்த்திக்.

           
      "Love பண்றியா கார்த்திக்..."

"6 வருசமா... "

       ......

       ......


      "சரி எங்க அப்பகிட்ட வந்து பேசுங்க..."




மூன்றாம் விதி 


காதலே வாழ்க்கை என்று முடிவான பின்பு, இல்லை என்ற பதில் எற்றுக் கொள்வதற்க்கில்லை 


30 நிமிடத்தில் வீட்டுக்கு சென்ற கார்த்திக்காக. காதல் மனைவி பிரியவும், மகன் அர்ஜுனும், மகள் ஆராதனாவும் காத்துக்கொண்டிருந்தனர்...