cookie

Wednesday, April 12, 2017

நிர்வாணம் - யார் குற்றம்?


மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் 
உயிர்நீப்பர் மானம் வரின் 


தமிழக விவசாயிகள் "விவசாயக்கடன்" தள்ளுபடி செய்யவேண்டி போராட்டம் நடத்தி வரும்  வேளையில். அரசின் பாராமுகம் காரணமாக, போராட்டம் அடுத்த கட்டமாக "ஆடை துறப்பு" நிலையை எட்டியுள்ளது. இதைப்பற்றி சமீபத்தில் என்னுடனிருத்தவரிடம் உரையாடியபோது, "தலையை அடமானம் வைத்தாவது கடனை கட்ட வேண்டாமா?  கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்று பாடியது உங்கள் ஊரில்தானே என்றார். 

"ஆடை துறப்பு" என்பதை சாதாரண நிகழ்வாக என்னால் எடுத்துக்கொள்ள முடிவதில்லை, அது கடை நிலை. "வந்தார்கள் வென்றார்கள்" எனும் புத்தகத்தில் மதன் இதை உணர்வுப்பூர்வமாக விளக்கியிருப்பார்.

பாபருக்கும், மெதினிராய் (ராஜபுத்திரர், ராணா சங்கா வின் நண்பர்) க்கும் நடந்த யுத்தம்.

பாபரின் படையை தாக்குப் பிடிக்க முடியாமல் ராஜபுத்திரப் படைகள் கோட்டைக்குள் புகுந்து கொண்டு நீண்ட நேரம் வெளியே வரவில்லை. திடீரென்று பாபரை வியப்பில் ஆழ்த்திய அந்த நிகழ்ச்சி நடந்தது.

கோட்டைக்குள்ளிருந்து நெற்றியில் சிவந்த திலகங்களுடன், பிறந்த மேனியுடன், கையில் வாட்கள் பளீரிட ராஜபுத்திர வீரர்கள் சாரி சாரியாக வெளியே பெருங்கோஷத்துடன் ஆவேசமாக பாய்ந்து வந்தனர்!

"என்ன இது" ? என்று குழம்பிய பாபரிடம் அவரது தளபதி கூறினார்.

"போரில் இனி தோல்வி உறுதி என்கிற நிலை ஏற்ப்படும் மாத்திரத்தில் இந்த ராஜபுத்திரர்கள் தங்கள் குடும்பங்களின் மானத்தை காக்கவேண்டி தாய், மனைவி, குழந்தைகளை வாலைப்பாய்ச்சி கொன்று விட்டு, தங்கள் போர் உடைகளை கலைந்து விடுவார்கள். அந்தக் கணமே உயிர் தியாகத்துக்கும், வீர சொர்கத்துக்கும் அவர்கள் தயாராகிவிட்டார்கள் என்று அர்த்தம். ராஜபுத்திர இனத்தின் சம்பிரதாயம் அது. இனி இவர்களுடைய உயிரற்ற உடல்களை மிதித்துக்கொன்டுதான் நாம் கோட்டைக்குள் நுழைய முடியும்..."

சரி, அவர்களின் துன்பத்திற்கு நாம் என்ன செய்ய முடியும்? என்று நாமிருக்கலாமா? தெரியவில்லை... இது போன்ற சிக்கலான ஒரு வழக்கு தன்னிடம் விசாரணைக்கு வந்தபோது நியூயார்க் நகரின் அப்போதைய மேயர் Fiorello La Guardia என்ன செய்தார்?

1935 ஆண்டு, பொருளாதார சிக்கலில் நகரம் தத்தளித்த தருணம். ஒரு நாள், இரவுநேர வழக்கு விசாரணை. நீபதியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மேயரே வழக்கை விசாரிக்க தொடங்கினார். சில நிமிடங்களில் கந்தலாடையுடன் வயது முதிர்ந்த பெண்மணி விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார். அவர்மீது சுமத்தப்பட்ட குற்றம் "திருட்டு". அங்கிருந்த வெதுப்பக்கத்தில் ரொட்டித்துண்டை களவாடிவிட்டார். குற்றத்தை அப்பெண்மணியும் ஒப்புக்கொண்டு விட்டார்.

ஒருவேளை உணவுக்காக நூற்றுக்கணக்கான மக்கள் தத்தளிக்கும் வேளையில் இதை பெரிதுபடுத்தாமல் விட்டுவிடலாமென மன்றத்தில் இருப்பவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் வெதுப்பாக உரிமையாளர், இதை மன்னித்து விட்டால் திருட்டு தொடர்கதையாகிவிடும், அதனால் தண்டனை கொடுத்தே ஆகவேண்டுமென முறையிட்டார். வேறு வழியில்லாமல் மேயரும் குற்றம் சாட்டப்பட்ட பெண்மணியிடம். "நான் உங்களுக்கு தண்டனை வழங்கியாகவேண்டும், சட்டம் யாருக்கும் விலக்களிப்பதில்லை. தாங்கள் செய்த குற்றத்திற்கு தண்டனையாக 10 அமெரிக்க டாலர்கள் அபராதம் கட்டவேண்டும் அல்லது 10 நாட்கள் சிறைக்கு செல்லவேண்டும்" என்று கூறிக்கொண்டே தனது சட்டைப் பையிலிருந்து 10 டாலர் எடுத்து அபராதத்தொகையை அவரே செலுத்துவிட்டார். அதோடு நிற்காமல், வயது முதிர்ந்த ஒருவர் வாழ வழியில்லாமல் ஒரு வேளை உணவுக்காக திருடும் நிலையில் இந்த சமுதாயத்தை வைத்திருப்பதற்காக இந்த வழக்குமன்றத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் (வெதுப்பாக உரிமையாளரையும் சேர்ர்த்து) 50 சென்ட்ஸ் அபராதம் விதித்தார். அனைவரிடமும் வசூலிக்கப்பட்ட தொகை $ 47.50, குற்றம் சுமத்தப்பட்ட பெண்மணியிடம் வழங்கப்பட்டது.                         

நம் விவசாயிகளை வாழ வழியில்லாமல் செய்து, நிர்வாணமாக்கி மேலும் தற்கொலை வரை கொண்டுசென்றது யார் குற்றம்?  

No comments:

Post a Comment