cookie

Sunday, April 2, 2017

குளிர்களி

வெகு நாட்களுக்குப் பிறகு நேற்று ஐஸ்கிரீம் சாப்பிட அருகிலிருக்கும் கடைக்கு சென்றிருந்தோம் , அங்கு "பரோட்டா"வையும் "பழைய சோற்"றையும் ஒன்றாக பிசைந்ததுபோல சகிக்கமுடியாத பல நிறங்களில், மணங்களில் மற்றும் சுவைகளில் (?) "ஐஸ்கிரீம்"கள் கிடத்தப்பட்டிருந்தன. அதில் சூரியனை தாங்கிய ஐஸ்கிரீமை ஆளுக்கொன்று வாங்கிக்கொண்டு கடையின் வெளியில் அமர்ந்து சுவைக்க தொடங்கினோம்.

"ஐஸ்கிரீம்" என்பதற்கு தமிழில் என்னவென்று ஆர்யா கேட்க, சரியான மொழிபெயர்ப்பு என்னவென்று யோசிக்கும்போது "பனிக்கூழ்" என்பதை விட "(இனிப்பு) குளிர்களி" என்பதே சரியென தோன்றியது. இதை அவனிடம் விளக்க முயன்று, முயன்று... அவனுக்கு "குளிர்களி"உண்ணும் எண்ணமே போய்விட்டது. அவன் அழுவதற்கு சற்று முன்பாக தமிழ் வகுப்பை முடித்துக்கொண்டேன். "கூழாக" உருகிய "களி"யை உறிஞ்சிக்கொண்டே "குளிர்களி" வரலாற்றை பின்னோக்கி தேடியபோது... 

சரியாக ஆவணப்படுத்தப்படாத பனிக்களியின் வரலாறு தோராயமாக கி.மு நான்காம் நூற்றாண்டு தொடங்ககுகிறது. இந்தியாவை முழுமையாக கைப்பற்ற முடியாமல் தூக்கத்திலேயே இறந்த "அலெக்சாண்டர்", அந்த துக்கத்தின் சூடு தனிய, பனியுடன் கலந்த தேனை பருகியதாக தெரிகிறது. ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது அதன் சுருதிக்கு தப்பாமல் "பிடில்" வாசித்த நீரோ  மன்னன், களைப்பு நீங்க பனிக்கூழ் அருந்தலாமென "ஓட்ட" வீரர்களை மலைக்கு அனுப்பி பனி கொண்டுவர சொன்னதாக ருசிகர தகவலும் உண்டு. "ஒரு" குழந்தைக்கு உரிமைகோரி வந்த இரு தாய்மார்களுக்கு கருணையோடு தீர்ப்பு வழங்கிய "விவிலிய" புகழ் சாலமனும்கூட பனிக்கூழ் போல ஏதோ ஒன்றை விரும்பி சுவைத்துள்ளார். அதன் பின்னர் பலநூறு ஆண்டுகள் உருண்டோடிய பின்னர், "மங்கோலியா"விலிருந்து தாயகம் திரும்பிய மார்கோ போலோ "சீவல் ஐஸ்"சை இத்தாலிக்கு அறிமுகம் செய்துள்ளார். 

ஆவணப்படுத்தப்பட்ட பனிக்கூழின் தோற்றம் கி.பி 1744 லில் அமெரிக்காவில் இருந்து தொடங்குகிறது. அதன் பின்னர் பனிக்கூழ் செய்ய பல வழிமுறைகள் கையாளப் பட்டாலும், பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்கள், 'நான்ஸி ஜான்சன்' என்பவரின் கண்டுபிடிப்பைத்தான் அங்கீகரித் திருக்கிறார்கள்.  நான்ஸி அமெரிக்காவை சேர்ந்தவர். 1843-ம் ஆண்டு கையால் சுழற்றி இயக்கக்கூடிய ஐஸ்கிரீம் இயந்திரத்தை கண்டுபிடித்தார். அந்த இயந்திரத்தைக் கொண்டு உருவாக்கிய ஐஸ்கிரீமையே, அங்கீகரிக்கப்பட்ட முதல் ஐஸ்கிரீம் கண்டுபிடிப்பாக உறுதிப்படுத்தி உள்ளனர்

அன்று தொடங்கிய குளிர்களியின் பரிணாம வளர்ச்சி இன்னும் தொடர்கிறது. கியூபாவின் சுருட்டு மணத்தில் கூட குளிர்களி கிடைப்பதில் பெருமை  சுருட்டுக்கா! அல்லது குளிர்களிக்கா! என்பது விடையில்லா கேள்வி. ஒரு ரூபாயில் தொடங்கி கிட்டத்தட்ட 66,000 ரூபாய் வரை குளிர்களி கிடைக்கிறது. 66,000 ($1000) ரூபாயா நம்ப முடியவில்லையா!

நியூயார்க் நகரத்தில் இருக்கும் "செரன்டிபிட்டி 3" எனும் கடையில் இந்த கின்னஸ் புகழ் ஐஸ்கிரீம் கிடைக்கிறது. இந்த "செரன்டிபிட்டி" என்ன அவ்வளுவு பெரிய இதுவா? எனும் உங்களின் கேள்விக்கு விடை தெரியவில்லை, ஆனால் ஹாலிவுட்டின் சொப்பன சுந்தரிகளும் அதன் இந்நாள் மற்றும் முன்னால் உரிமையாளர்களும் அடிக்கடி வந்துபோகும் இடம் இது.   

இத்தனை புகழை தன்னகத்தே கொண்ட அந்த குளிர்களியை சாப்பிட முன்பதிவு அவசியம். குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு முன்பாக உணவாக அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். 66,000 ரூபாய்க்கு அதில் அப்படி என்னதான் இருந்து விடப்போகிறது, எப்படி அதற்கு கணக்கு காட்டப் போகிறார்கள் என்று திகிலுடன் தேடிய போது 

அதன் பெயர் "Golden Opulence Sundae", மூன்று அடுக்குகளால் ஆனா வெண்ணிலா ஐஸ்கிரீம், அதற்க்கு குளிரக்கூடாது என்பதற்காக உண்ணக்கூடிய 23 கேரட் தங்கதாளால் போர்த்தப்பட்டிருக்கும். அதன் தலையில்  செருகியிருக்கும் தங்கப்பூவை நீங்கள் உணவகம் விட்டு வெளியில் வரும்போது உங்கள் காதிலும் செரிக்கிக் கொள்ளலாம்.  கூடுதல் சுவைக்காக அதனுடன் இனிப்பு சுவையூட்டிய "மீன் முட்டை"யும் தரப்படும். 

பின்குறிப்பு: "மீன் முட்டை"யை உண்ணும் முறை என்னவென்றால், அதை  நாவிலிட்டு மேல் அன்னம் வரை கொண்டு சென்று, நாவினால் நசுக்க வேண்டும். பல் படக்கூடாது என்பது மிக முக்கியம். அப்படி செய்யவில்லை என்றால் முன்னறிவிப்பின்றி உங்கள் பெயர் காட்டுமிராண்டி கூட்டத்தில் சேர்க்கப்படும்.




இவ்வளவு காசு கொடுத்து யாரு இத சாப்புடுவா? என்று நினைத்த போதுதான். தோராயமாக ஆண்டுக்கு 50 பேர் வரை சாப்பிடுவதாக தெரிகிறது. சரிதான், "பல் இருப்பவன் பக்கோடா சாப்பிடுகிறான்" என்று நினைக்கத் தோன்றினாலும், காலையில் அது என்னவாக வெளியில் வரும் என்ற கேள்வியும் சேர்ந்தே வருகிறது. அனைவரும் "tywin lannister" ஆகிவிட முடியாதல்லவா...

பல சமயங்களில் பொருளுக்கல்ல அது தாங்கியிருக்கும் பெயருக்கே விலை... என்று எண்ணிக்கொண்டு டார்லிங் அவ்வையின் பாடலை நினைவு கூர்ந்தேன்...


விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்
விரனிரைய மோதிங்கள் வேண்டும் - அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர் கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று. 

2 comments:

  1. Finishing touch is awesome. when we compare this one with your last writing I don't feel that amount of impact..

    ReplyDelete
    Replies
    1. Thanks again Barani, I am trying my best. When it comes to impact, topic also matters I believe.

      Delete